வெள்ளி, 24 டிசம்பர், 2010

குழாயடி குங்பு.....!

ஜன்னல்-அமர்ந்த இடத்திலிருந்து நான் உலகை கண்காணிக்க, ரசிக்க உதவும் என் இல்லத்தின் கண்கள்.

தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரி, உற்றார், உறவினர் இவர்களுக்கு இணையாக என்னுடைய தனிமை, அமைதி, விருப்பம், வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், ஆறுதல், அழுகை, துரோகம், வேட்கை, சிந்தனை, இன்னும் பல எல்லா இன்ப துன்ப நிகழ்வுகளில் அருகிருந்து உடன் பயணித்தவைகள் எனது ஜன்னல்கள்.

தேவையான போது புத்தனாய் போதனைகளும், தமிழ் தாகமெடுத்து வார்த்தைகளுக்கு அலை மோதும் போதெல்லாம் பாரதியாய் மொழி ஊற்றாயும், பணிச்சுமை அதிகரித்து அல்லாடும் போதெல்லாம் தலைக்கோதி இதமாய் வருடும் தென்றலாயும், சிந்தனை வேட்கைகள் வெளிவர போராடும் போதெல்லாம் எண்ணச் சிறகுகள் படபடக்கச் செய்யும் ஓர் உந்து சக்தியாயும் பல பரிமாணங்களில் 'ஜன்னல்கள்' என் உயிர் அங்கமாய் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

தாய், தந்தை பணி நிமித்தமாய் நாங்கள் மாறிய, மாற்றிய வீடுகள் பலவாக இருப்பினும், இடையிலேயே தொலைந்து, அழிந்து, காணாமல் போகும் மனித உறவுகள் போல் அல்லாமல் என்னுடைய 'ஜன்னல் பந்தங்கள்' நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய் என்றுமே என்னை விட்டு நீங்கி வற்றிப் போகாமல் என்னுடனேயே பயணிக்கின்றன. இங்கே இனி வரும் பதிவுகளில் நான் எனது சிறு பிராயத்திலிருந்து இது வரை எனது ஜன்னல்களின் வழியே கண்டு, கேட்டு, உணர்ந்து, மகிழ்ந்த சில அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


என்னை கம்பிகளினூடே வெளியே அழைத்து சென்று உலகை எனக்கு பயிற்றுவித்தும், பழக்கப்படுத்தியும், உலகின் அசைவுகளின் சிறு சிறு காட்சித் துண்டங்களை என் இமைக்கருகே கொணர்ந்து என் விழிப்பசியாற்றிய ஜன்னல்களுக்கு இப்பதிவுகளை சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்போது எனக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். நாங்கள் அந்த அடுக்கு  மாடி குடியிருப்பில் குடியேறிய புதிது. பதினெட்டு குடும்பங்கள். உத்தியோகஸ்த்தர்கள். அனைவரும் அரசு ஊழியர்கள். குடித்தனம் இருப்பவர்களுக்கு அங்கே உள்   வளாகத்திலேயே நல்ல குடிநீருக்கென்று 'அடிபம்ப்' ஒன்றை நிறுவி இருந்தது குடியிருப்பு நிர்வாகம். ஏனெனில், நீரேற்றம் செய்யப்பட்டு வீட்டிற்கே வந்து கொட்டும் தண்ணீர் கடல் நீருக்கு சமமானது. குடிப்பதை விடுங்கள்.., குளித்துவிட்டு வந்து தலையை துவட்டுவது என்னமோ முள் கம்பிகளில் துண்டை வைத்து உரசுவது போல் இருக்கும், அத்தனை மஹா சக்தி கொண்டது. அதில் வர, வர வென்று சத்தம் வேறு கேட்கும் துவட்டும் போது. துவட்டி விட்டு பார்த்தால் கணிசமான தலை முடி துண்டிற்கு இடம் மாறி இருக்கும். அவ்வளவு உப்பு சக்தியையும், தாதுக்களையும், கனிமங்களையும் தாங்கிய புனித நீரது.

குடியிருப்போருக்கு இந்த அடிபம்பில் இருந்து தான் குடிநீர் எடுத்து கொடுக்கப்படும். கமலம்மா, சாந்தி என்று இரண்டு பெண்களும் அவரது பரிவாரங்களும் தான் அனைத்து வீட்டிற்கும் தண்ணீர் பிடித்து கொடுத்து வந்தார்கள். அந்த பம்ப் எங்கள் வீட்டு ஜன்னலுக்கு அருகிலேயே இருந்ததால், எனக்கும் என் சகோதரர்களும் மிகவும் பிடித்தமான எங்கள் தேக்கு நாற்காலியில் அமர்ந்து, ஹார்லிக்ஸ் குடித்துகொண்டே நான் தினமும் பார்க்க நேர்ந்த தினசரி காலை காட்சியின் கதாநாயகர்கள் இவர்களே.


காலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்களின் பணி தொடங்கி விடும். அதிகாலை சீக்கிரமே தங்களின் தினசரி வாழ்க்கையை தொடங்கும் வீடுகளுக்கு முதல் சென்று காலி குடங்களை எடுத்து வந்து, அதை வரிசைப்படி குழாயின் அடியில் அடுக்கி இடம்பிடிப்பதில் தொடங்கி, தண்ணீரை பிடித்து அதை மறுபடியும் அந்தந்த வீட்டிற்கு கொண்டு போய் வைப்பது வரையிலுமான பதினெட்டு வீட்டிற்குமான அவர்களின் பணி முடிய கிட்டத்தட்ட காலை ஒன்பது மணி ஆகிவிடும். இது மட்டும் அல்லாமல், பல வீட்டிற்கும், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, குழந்தைகளை பள்ளியில் விட்டு பின் மாலை அழைத்து வருவது என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

நான் தயாராகி பள்ளிக்கு புறப்படும் போது தான் அவர்களின் சத்தம் குறைந்து அவ்விடம் மயான அமைதியாயிருக்கும். மழை, வெயில், பனி, தீபாவளி, பொங்கல் என எதுவும் அணைக்கட்டி தடுக்க முடியாத பாவ ஜீவன்கள் அவர்கள். "நாம் கொண்டாடும் அதே தீபாவளி அன்றும் அவர்கள் ஏன் எல்லா வீட்டிற்கும் வேலை செய்கிறார்கள்?",  "இந்த மழையில் நான் உள்ளே அமர்ந்திருக்கும் போது, இவர்கள், ஒரு கோணி துணியை  கவசமாக்கி ஏன் இப்படி சொட்ட சொட்ட நனைகிறார்கள்?" என்று அப்போதெல்லாம் நான் யோசித்ததே இல்லை. ஆனால் இப்போது யோசித்தால், சமூகம், அதன் கோர புத்தியால் பிரசவித்த ஏற்றத்தாழ்வின் தொடக்கமாயும், அதனாலுண்டான விளைவுகளின் மையமாயும் அவர்களை வகைப்படுத்தி வைத்திருந்ததால் தான் என்று புரிகிறது கேள்விகளுக்கு அவசியமில்லாமலேயே.

சில நண்பர்கள் சொல்லி கேட்டதுண்டு, ஜப்பான் அணுச் சிதைவுக்குள்ளாகி பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்ட போது, நாட்டு மக்கள் அவர்கள் அனைவரையும் தத்தெடுத்து, தங்கள் பிள்ளைகளாய் வளர்த்து அந்த நாட்டை சுபிட்ச பூமியாக்கினார்கள் என்று. ஹும்ம்ம்...நாம் நம்மவரை அலட்சியப்படுத்தியே வாழப் பழகிவிட்டோம்.

கமலம்மாவிற்கு உதவிக்காக, அவரின் மூன்று மகள்களும், சாந்திக்கு உதவியாக அவரின் இரு மகன்களும், அவரின் தாயாரும் இருந்தார்கள். இந்த இரு பரிவாரமும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போலத் தான்.  அதிலும் சாந்தியின் தாயார் ரவிக்கையின்றி, காதில் பெரிய, பெரிய ஓட்டையுடன் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், செய்கை, பேச்சு என எல்லாமே "மண் வாசனை" காந்திமதி மாதிரி தான் இருக்கும். எனக்கெல்லாம் அப்போது அந்த பாட்டியை பார்க்கவே பயமாக இருக்கும். அவர் எனது அருகில் வந்தாலே, நான் "மான் கராத்தே" தான்.

தண்ணீர் பிடிக்கிற இடத்தில் அவர் தான் "தாதா". அவர் வைத்தது தான் சட்டம். யாராவது மீறி நடந்தால் வாயாலே வயலின் வாசித்து காதில் இரத்தம் வர வைத்து விடுவார். சூழ்நிலை கெட்டு, அவர் அப்படி ஒரு உச்ச நிலைக்கு வந்து விட்டால் அனைவரும், காது, மூக்கு, வாய் என்று அனைத்து துவாரங்களையும் அடைத்து அமைதி காத்து விடுவார்கள். "கெழவி மேல உழுந்து புடிங்கிற போறா, வாய மூடிட்டு எட்ட போடி நீ..!", என்று ஒவ்வொரு முறையும் கமலம்மா தான் தன் மகள்களை கட்டுக்குள் கொண்டு வருவார்.

சில சமயங்களில் நிலைமை கை மீறிப் போய், பாட்டியார், 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி 'வடிவுக்கரசியை' முக்கியமான கட்டத்தில் ஒரு எத்து எத்துவாரே..., அது மாதிரி எல்லை மீறி எத்து எத்தேன்று எத்தியும் இருக்கிறார். அதிக எத்துக்கள் வாங்கியது கமலம்மாவின் நடு மகள் தான். பின்னாளில், அதே மகளைப் பார்த்து அந்த பாட்டியார், மிரண்டு, விழி பிதுங்கி ஓட்டமெடுத்தது ஒரு தனி கதை. அந்த சம்பவத்திற்கு பிறகு பாட்டியார் வாயால் சுளுக்கெடுப்பதை இவரிடத்தில் முற்றிலும் கைவிட்டே விட்டார்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு குடியிருப்போர்களே தண்ணீர் பிடித்துக் கொள்ள முடிவெடுக்க, அந்த இரு பரிவாரமும் வேலைக்காக குடியிருப்பிற்கு வருவது முற்றிலும் குறைந்து, பின் நின்றே போனது. அவர்களின் வருகை முற்றிலும் நின்று போன நாட்கள் என் நினைவில் அறவே இல்லை.

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

//நாங்கள் மாறிய, மாற்றிய வீடுகள் பலவாக இருப்பினும், இடையிலேயே தொலைந்து, அழிந்து, காணாமல் போகும் மனித உறவுகள் போல் அல்லாமல் என்னுடைய 'ஜன்னல் பந்தங்கள்' நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய் என்றுமே என்னை விட்டு நீங்கி வற்றிப் போகாமல் என்னுடனேயே பயணிக்கின்றன//
Super! :-)

Sathish Kumar சொன்னது…

ஜீ... சொன்னது…
//நாங்கள் மாறிய, மாற்றிய வீடுகள் பலவாக இருப்பினும், இடையிலேயே தொலைந்து, அழிந்து, காணாமல் போகும் மனித உறவுகள் போல் அல்லாமல் என்னுடைய 'ஜன்னல் பந்தங்கள்' நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய் என்றுமே என்னை விட்டு நீங்கி வற்றிப் போகாமல் என்னுடனேயே பயணிக்கின்றன//
Super! :-)


வருகைக்கும் கருத்துக்கும் கோடானு கோடி நன்றிகள் நண்பா...!

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Sathish Kumar சொன்னது…

//philosophy prabhakaran சொன்னது…
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...//

நண்பர் பிரபாகரனுக்கு நன்றி...நன்றி...நன்றி...!
வருகைக்கும்...கருத்துரைக்கும்....பின் தொடர்வுக்கும்....!

Unknown சொன்னது…

nalla erukku annaa..

Sathish Kumar சொன்னது…

//siva சொன்னது…
nalla erukku annaa..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சிவா...!!!

கருத்துரையிடுக