சனி, 27 நவம்பர், 2010

எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-2)



வேண்டும்! மீண்டும் ஒரு புரட்சி....!

உலகின் வேறெந்த மூலையிலும் நடக்காத அக்கிரமங்கள் ஜனநாயகம் என்னும் பெயரில் இங்கே அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது தேசம் இன்னும் ஜாதி, மதம், மொழி, மாநிலம், நதிநீர் என்று பல்வேறு பிரிவினையை தூண்டும் காரணிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் அலங்காரப்பேச்சிற்கும், அற்ப இலவசங்களுக்கும் அடிமைகளாய் வாழ்வதையே சிரமேற்கொண்டு செய்து வருகிறது. போர்க்குணம் இல்லாத ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட ஒரு மோசமான தன்மையும், ஊர் பற்றி எறியும்போது, 'நல்லவேளை என் வீட்டிற்கெந்த கேடுமில்லை' என்று நினைக்கும் சுயநலத்தன்மைக்கும், கடும் தண்டனை நம்மைப்போல பொது ஜனத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், நம் பாக்கெட்டிலிருந்து 100 ருபாய் திருடிய ஜேப்படி திருடனை கண்டிக்கும் போக்கில் கூட இந்த விஷயங்களை கருதாத இந்தியாவின் தற்போதைய அசட்டுத்தனத்தை என்னவென்றுறைப்பது. 

இந்நாட்டில் எல்லா வளங்களும், நலன்களுமிருந்தும் படித்த எம்மிளைஞர்கள் (தொழிலாளர்களாய்) நாட்டை விட்டும், குடும்பத்தை, சொந்தபந்தங்களை எல்லாம் விட்டும் பணம் சம்பாதிப்பதற்காக இன்றும் வெளிநாட்டிற்கு சென்று (என்னதான் உயரிய வாழ்க்கைமுறையை அனுபவித்தாலும்) இரண்டாந்தர குடிமக்களாக, நவீன உலகின் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பதெல்லாம் இவர்களைப்போல ஆக்கச்சிந்தனையில்லாத  அரசியல்வாதிகளின் கைகளினால் எம்நாடு சீரழிக்கப்படுவதினால்தான். இவர்கள் தாங்கள் மனிதர்களாக கருதப்படுவதற்கான எஞ்சியிருந்த கடைசி காரணத்தையும் இழந்துவிட்டார்கள். பிரதமர் 'மன்மோகன் சிங்' ஒருமுறை கூறுகிறார், "யார் மந்திரி ஆகலாம் யார் ஆகா கூடாது என்று தீர்மானிக்க ஒரு சட்டம் வர வேண்டும்". இதுதான் இந்தியாவின் மோசமான தலையெழுத்தும், விதியும் ஆகும். யார் செய்ய வேண்டுமோ அவர்கள் பல காலங்களாக சொல்வதைத்தவிர வேறு எதையுமே செய்வதில்லை. 


இந்திய அரசியலமிப்பின் சில மிக இளகிய கோட்பாடுகளையும், அர்த்தமற்ற சில மரபுகளையும் செவிட்டிலரைந்தார்போல் மிக வன்மையாக உணர்த்திச்சென்ற படிப்பினைகளை பிட்டத்திர்கடியில் போட்டமர்ந்து, அதன் அவசியத்தை மறந்து ஒரு வித மயக்க நிலையிலேயே நாம் லயித்திருப்பதன் விளைவுகளே இந்த ஊழல் சங்கிலிதொடருக்கான மூலமாகும். தாய், தந்தை, மொழி, நிறம் என்று இன்னும் பலவற்றையும் நாம் நமது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கில்லை. ஆனால் நம்மையும் நம் நாட்டையும் வழி நடத்த போகும் நம்முடைய பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பெரிய கடமையும் பெருமையும் உரிமையாக நம் கைகளில் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி இந்த மாதிரி கொள்ளை கும்பல்களிடமிருந்து நாட்டிற்கு மறு விடுதலை வாங்கித்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால், இன்று பல படித்த இந்திய 'மேதைகள்' வாக்களிக்கும்உரிமையை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்க கொடுக்கப்படும் வாய்ப்பே கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் இடையேதானே, அதற்கு வாக்களிக்காமலேயே இருந்துவிடுவது எவ்வளவோ மேல் என்று. படிக்காத பாமரனோ ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு தனது தார்மீக உரிமைக்கு  அந்த ஐந்து,பத்து ரூபாய்க்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பதுவுமில்லை. இவர்களின் ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணங்கள் களையப்பட  வேண்டுமெனில் அவை தேர்தல் விதிமுறைகள், அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு முறைகளில் நாம் பழமையை உறுதியாக பற்றிகொண்டிருப்பதை விடுத்து, தற்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து திருத்துவதன் மூலமே சாத்தியமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டங்களின் பல புனிதத்தன்மையான கொள்கைகளை யாரும் இங்கே குறை சொல்ல வரவில்லை. அந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் ஓரளவிற்காகவாவது  எதற்காகவும், யாருக்காகவும் உருவாக்கப்பட்டதோ அவர்களை சென்றடைய வேண்டுமென்பதே எமது ஏக்கமாகும். மேலும், யார் அதை பொறுப்புடன் கடைப்பிடித்து அதனுடைய உண்மைதன்மையையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட வேண்டுமோ அவர்களை மக்களுக்கு அடையாளம்  காட்டுவதிலேயும் அவர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்ற முறைகளிலேயும் சீர்திருத்தங்கள் மிக ஆழமாகவும் பலமிக்கதாகவும் உருவாக்கப்படவேண்டும் என்பதே இங்கு வாதம். அந்த சீர்திருத்தங்கள் மக்களின் மனதில் அரசியலின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பகத்தன்மையை அதிகரிக்கச்செய்யும் விதத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.அவைப்போன்ற சீர்த்திருத்தங்கள் மாத்திரமே சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு, ஏமாற்றங்களே எஞ்சி நிற்க்கும், ஓய்ந்து சோர்ந்துபோன இந்தியாவையும், இந்திய மக்களையும் இந்த கண்ணியமற்ற  அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகரிகளிடமிருந்தும் காப்பாற்றும். அந்த நல்ல சீர்திருத்தங்கள் மலர வேண்டுமானால் அது ஒரு வீரியமிக்க படையின் தன்னலமற்ற, தளர்ச்சியற்ற தாகத்தினாலுண்டான ஒரு புரட்சியாலேயே ஏற்படுமென்பது திண்ணியம். வீதிக்கு வந்துதான் அதற்கு வித்திட வேண்டுமென்பதுமில்லை. கட்சி, மதம், மொழி, இனம் என்று எந்த பாகுபாடின்றி யார் இந்த மாற்றங்களை, சீர்திருத்தங்களை நமக்கு உறுதி செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நமது ஆதரவும், வாக்கும் என்று நாம் ஒரு கொள்கையுடன் நமது அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த தருணம் நாம் அவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தருணமாகும். 

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு கொண்ட இருக்கும் நாம் ஒரு முறை ஒருங்கிணைந்து வீறு கொண்டு எழுந்ததினாலேயே 1947 ல் ஒரு மாபெரும் புரட்சியின் முடிவாய் விடுதலையடைந்தோம். அதன் பின் எமது தேசம் இதுவரை ஒரு தேசத்தின் ஓட்டு மொத்த எழுச்சியை பல தருணங்களில் பதிய தவறியதாலேயே இன்று நமக்குள்ளேயே ஒரு கூட்டம் நம்மை அடிமைகளாக்கி ஆண்டு வருகிறது. இதோ எனது இணைய நண்பர் ஒருவரின் ஒப்பற்ற வரிகளை உற்று கவனிப்போம்.  ஆம்.. அதற்க்கான தருணம் வந்துவிட்டது. 

புறப்படு...! புரட்சியை கையிலெடு...!
உன்னாலே ஒரு மாற்றம் உண்டாகட்டும்...!
இனி வரும் உன் இந்தியச்சந்ததிக்காக ...!


நண்பர்களே....! 
இதோ இந்த எனது கன்னிப்பதிவை கருவாக்கி வெளியிடும் வெறும் இரண்டு நாள் இடைவெளிக்குள்ளாகவே இந்தியாவில் இன்னும் ஒரு அதிர்ச்சி தரும் ஊழல் குற்றச்சாட்டு; அதுவும், தேசத்தின் ஏழை, எளிய, மத்தியதர மக்களின் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளதும், நாடிதுடிப்பென்று கருதப்படுவதுமான  "Life Insurance Corporation of India" விலிருந்து.  

எம்முண்டாசு கவி பாடிச்சென்ற வரிகள் ஈட்டியாய் நம் மனதில் 
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...!




(படம் தந்த கூகுள்'க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

வியாழன், 25 நவம்பர், 2010

எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-1)


உலகம் சிரிக்கும் ஜனநாயக கூத்துகள் 


சங்கிலித்தொடராய்  ஊழல் குற்றச்சாட்டுகள். வெகு குறுகிய காலத்தில் இந்தியாவின் அவலங்களையும் அசிங்கங்களையும் உலகுக்கு போட்டி போட்டுக்கொண்டு அரங்கேற்றி காட்டுகிறார்கள் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெட்கமின்றி. 2G அலைக்கற்றை ஒதுக்கிய முறையில், காமன்வெல்த்  போட்டிக்கான ஏற்பாடுகளில், 'ஆதர்ஷ் குடியிருப்பு' நிலத்தில் தொடங்கி ஒதுக்கீடுகள் வரை, கர்நாடக முதல்மந்திரியின் மீது அரசின் நிலத்தை மோசடி செய்ததாக, நாட்டின் உயரிய பொதுத்துறை நிறுவனமான 'டாட்டா குழுமத் தலைவர்' வெளியிட்ட முன்னாள் மத்திய காபினெட் அமைச்சரின் மீதான லஞ்ச குற்றச்சாட்டு, தலைநகர் MCDயின் அலட்சியத்தினால் அறுபத்து மூன்று அப்பாவி உயிர்கள் பலி என்று வரிசையாக நெஞ்சடைக்கும் கொடூரங்கள். அதனை தொடர்ந்து அரங்கேறும் பதவி பறிப்புகள், ராஜினாமாக்கள், பாராளுமன்றம் ஸ்தம்பிப்பு, பிரதமரின் மௌனம் மற்றும் செயலின்மை, அதனை கண்டிக்கும் தோரணையில் உச்ச நீதிமன்றம் என்று வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் ஒரு பக்கம், இது எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லாத வேற்றுகிரகத்து விஷயங்கள் என்ற தோரணையில், பாவப்பட்ட தன் இந்த நிலைக்கு தான்தான் முழுமுதற் காரணம் என்று என்றோ அறிந்திருந்தும் தன்னிலையை மாற்றியமைக்கும் முயற்சிகளில் கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாத ஜாதி, மதம், மொழி என்ற வட்டங்களுக்குள் சிக்கி அதன் எதிரொலியாகவே வாழ பழகி கொண்ட பொதுஜனம் மறு பக்கம். நாட்டையே வழி நடத்தும் ஒரு பிரதமமந்திரியின் அசாதாரணமான அமைதியும்,  அநீதிகளை ஏற்று விழுங்கி வாழ பழகிவிட்ட மக்களின் அதீத ஜீரணா சக்தியும், அலட்சியப்போக்கும், பொறுப்பின்மையும் இந்த நாட்டை எங்கே இழுத்து சென்று கொண்டிருக்கின்றன என்ற அபாய கேள்வியை நமக்குள் விதைக்கின்றன. 
'இந்திய ஒலிம்பிக் கமிட்டி' யின் நிரந்தர தலைவர் போன்று பல காலம் அதனுடைய பதவி சுகத்தினை, அதிகாரத்தை முழுவதுமாக அனுபவித்துகொண்டிருக்கும் "சுரேஷ் கல்மாடி", உலகத்தின் பார்வை தேசத்தின் மீது ஆழ்ந்து பதிதிருந்த இந்த காலத்தை மிக நல்ல முறையில் பயன்படுத்தி இந்த மாதிரி சர்வதேச போட்டிகளையும், நிகழ்வுகளையும் வெற்றியுடன் தலைமையேற்று நடத்தி காட்டுவதற்குண்டான வல்லமை பெற்ற நாடென்று நிரூபித்து வெற்றி நடை போட வேண்டிய தருணத்தை இழந்தது மாத்திரமல்லாமல் நாட்டிற்கு தனது கையாலாகத தனத்தாலும், பொறுப்பின்மையாலும்     உலகின் மத்தியில் பெரிய களங்கத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதில் சொல்லொணா மனக்குமுறல் யாதெனில், 40௦ சதவிகிதத்திற்கும் மேலான வறுமை கோட்டுக்கு கீழே உழலும் மக்களை கொண்ட ௦ஏழை நாடென்று உலகால் அடைக்குறியிலிடபடுகிற இந்தியா, சுமார் 30000 கோடி ருபாய் (ஊடகங்களின் செய்தி) செலவு செய்து இந்த களங்கத்தையும் அவப்பேரையும் பெற்றுள்ளது தான். 

அதுவும் உலகமஹா ஊழல் என்ற அடைமொழியை தாங்கிகொண்டிருக்கும் இந்த '2G அலைக்கற்றை" ஊழல் இந்தியாவின் ஜனநாயக அரசியலின் வெட்கக்கேடான தற்கால உண்மை நிலையை கூறு போட்டு காட்டிவிட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழே உழன்று கொண்டிருக்கும் ஒரு சாமானிய இந்தியன், அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருப்பதாக "CAG" சமர்பித்த அறிக்கையின் அர்த்தங்களும், அது குறிப்பிட்டிருக்கும் தொகையான "ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாயின்" மதிப்பையும், அதன் இழப்பின் வீரியத்தையும் அறிய இன்னும் பல வருடங்கள் பிடிக்கலாம்; ஏன், அவனறிவுக்கு எப்பவுமே எட்டாமல் கூட போகலாம். அன்றாடம் தனது பசி நெருப்பை அணைக்க வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டிருக்கும் அவனுக்கு இதன் மூகாந்திரமும், முடிவுரை எழுதப்படாமலேயே காணாமல் போகப்போகும் ஒரு வரலாற்று கொடூரமும் அவனுடைய சில நூறு ரூபாய்க்கான போராட்ட வாழ்க்கைக்கு முன் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களே. 
ஊழலுக்கு மூல காரணமாக குற்றம்சாட்டப்படுகிற அ. ராசா கூறுகிறார், "எனக்கு முந்தைய ஆட்சியில் என்ன முறை கடைபிடிக்கப்பட்டு அலைகற்றை ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதோ அதே முறையைத்தான் நானும் பின்பற்றினேன்" என்று. இவரின் பாட்டனும், முப்பாட்டனும் கோவணத்தை தவிர வேறு ஒன்றையும் அணிந்திருப்பரில்லையே. இவரும் அதே பழைய உடைகளில் வலம் வர வேண்டியது தானே..! இதைசொல்ல ஒரு மந்திரி (இப்போது முன்னாள்). யாரை ஏமாற்ற இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் இந்த கபடதாரி. இவரின் கட்சித்தலைவர் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் "தலைமை கணக்காயர்" கட்டுக்கட்டாக பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கைகளை தனக்கே உரிய பாணியில் கிண்டலுடன் "இந்தத்துறை இதுவரை எல்லா பிரதமர்களுக்கும், முதல்வர்களுக்கும் எதிராகவே அறிக்கைகள் வழங்கியிருக்கிறது" என்கிறார். அதில் என்ன ஆச்சரியம் முதல்வரே..! இதுவரை வந்தவர்கள், ஆண்டவர்கள், ஆளுகிறவர்கள் மிகச்சிலரை தவிர யாவருமே சுரண்டுவதில் கில்லாடிகள் என்றுதான் மக்களுக்கே தெரியுமே..! இவ்வளவு நடந்த பிறகும், நாட்டின் பணம் இவ்வளவு நஷ்டமடைந்த பிறகும், இவர் கொஞ்சம் கூட நாட்டின் மீது அக்கறையின்றி பேசுவதை கண்டு எம் நெஞ்சு துடிக்கிறது. ஒரு அன்பர் தமது வலையில் இப்படி பதிகிறார்,   

"அவரிடமிருந்து நேர்மையும், கண்ணியத்தையும், நாட்டுப்பற்றையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது"

'விஸ்வாமித்திரர்' என்கிற பெயரில் அவர் "2G ஸ்பெக்டரும் " பற்றி இட்டுள்ள இடுகைப்பதிவுகளில் மிகவும் அதிர்ச்சியளிக்ககூடிய, பல நம்ப முடியாத விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஊடக உலகத்தின் மிகப்பிரபலமான "பர்க்ஹா தத்", "வீர் சிங்க்வி" போன்றவர்களையும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி அவர் கூறும் கூற்றுக்கள் நம்மை பீதியில் உறைய வைக்கின்றன. ஒருவேளை அவை நம்பகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளாக இருக்கும்பட்சத்திலும், என்னதான் நாம் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அடிக்கும் கூத்துக்களிலிருந்தும், வெட்கக்கேடான செயல்களிலிருந்தும் எந்த அசிங்கமான எல்லைக்கு வேண்டுமானாலும் போக எத்தனித்தவர்கள் என்று தெரிந்திருந்தாலும், திரு.விஸ்வாமித்திரரின் பதிவுகளை, இவர்கள் நமது கற்பனா சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லைக்கோட்டையும் தொடக்கூடுமென்ற ஒரு முன்னுரையை நமக்கு கோடிட்டு காட்டும் எச்சரிக்கை மணியோசையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  இதோ அந்த பதிவுகளை நோக்க இந்த இணைப்பை சுட்டவும்..

இதன் ஆசிரியர், "CWG மற்றும் ஆதர்ஷ்" ஊழல்களைப்பற்றி ஒன்றுமே எழுதாததும் மற்றும் "உதய சூரியன்" குடும்பத்தை அக்கு வேறு ஆணி வேரோக பிரித்து மேயந்திருப்பதும், நமக்கு முறையே ஆச்சரியத்தையும், சில நேரடி சிந்தனைத் தயக்கங்களையும்   ஏற்படுத்துவதென்னவோ உண்மை. 
இந்த இரண்டு ஊழல்களும், உலகத்தின் கேலிப்பார்வையை இந்தியாவின் மீது மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் கசிய விட்டு வேடிக்கை பார்த்திருந்தாலும் இந்த 'ஆதர்ஷ் நிலம் மற்றும் அதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஒதுக்கீட்டில்' அந்த மாநிலத்தின் ஆளும் முதல்வரும், இரண்டு முன்னாள் முதல்வர்களும், முன்னாள் இராணுவ ஜெனரலும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது  நமது இதயத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் நம்மிடமிருந்து பறித்துச்செல்கிறது. இவை அடங்கும் முன்பே கர்நாடக முதல்வர் ஒரு நில மோசடியில் சிக்கி நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.


'ஹாங்காங்'ஐ சேர்ந்த "Political & Economic Risk" எனும் கன்சல்டன்சி 2007ல் ஒரு அறிக்கையில் "இந்தியாவின் நிர்வாக கட்டுப்பாடுகள் ஆசியாவிலேயே மிகவும் குறைவான ஆற்றல் கொண்டது, நாட்டின் அரசு அலுவலர்களுடன் பணி புரிவது மிக மிக கடினம்" என்று வெளியிட்டிருக்கிறது. இதுவே இவர்கள் நாட்டிற்கு உலகளவில் எந்த மாதிரி  பெயரை பெற்றுத்தருகிறார்கள் என்பதற்கு பல கோடி உதாரணங்களில் ஒன்றாகும். இவர்களை போல நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் துளியும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கழுவிலேற்றி பொது மக்களின் முன்னிலையில் நிறுத்தி அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். 



(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....