சனி, 23 ஏப்ரல், 2011

சோக்கா சொன்னடா நைனா...!

என் பாட சாலை பருவத்தின் நினைவுகளாய் இன்றும் பசுமையாய், என்றும் இனிமையாய் நெஞ்சில் படிந்திருக்கும் ஒரு நல்ல மனிதருடன் பழகிய சில நாட்களின் சம்பவங்களே இந்தப் பதிவு. அவர் ஒரு தமிழாசான்.  எப்போதும் பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் "Johnsons வேட்டி-சட்டை" விளம்பர  மாடல் தோரணையில் ஒய்யாரமாய் உலா வருவார். வெறும் தமிழ் பற்று அல்ல....தமிழ் பித்து பிடித்தவர். "அண்டை வீட்டு குழந்தாய்!, கணையாழியில் கவனம் வையடி கண்ணே?" என்று ஒரு சிறுமியிடம் இவர் சொல்ல, அவள் தன் தாயிடம் "மம்மி!, ஒயிட் தோத்தி அங்கிள் என் கண்ணுமுழி எல்லாம் நோண்டிடுவேன்னு திட்றாரு மம்மி", என்று அழுதே விட்டாள்.  "தம்பி!, தெருமுனை பலசரக்கங்காடி சென்று உசாலா (UJALA) சொட்டு நீலம் வாங்கி வருகிறாயா, உசாலா, உசாலா..?", என்று சிறுவன் ஒருவனிடம் இவர் கேட்க, களுக்கென்று விழுந்து விழுந்து சிரித்த அவன், அது நாள் முதல் இவரை எங்கு, எப்போது பார்த்தாலும், "சார்! உசாலா சொட்டு நீலம் வாங்கி வரட்டுமா...உசாலா..உசாலா?" என்று குஷாலாக சொட்டு நீலத்தோடு அவர் பிராணனையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தான். 

ஒருவன் "சார்!, டாம் அண்ட் ஜெர்ரி'யை தமிழ்ல எப்படி சார் சொல்றது"ன்னு கேட்டான், என்னே தமிழ்ப்பற்று என்று வியந்து தான் போனார். ஆனால் "பூனையும் எலியும் என்று விளிக்க வேண்டும் தம்பி!" என்ற இவரின் சிரத்தையான பதிலால் அவன் திருப்தி அடையவில்லை போலும். "நான் கேட்டது அது இல்ல சார், பனியன்-ஜட்டி'யை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு கேட்டேன்", என்றவனைப் பார்த்து விக்கித்து விழி பிதுங்கி தான் நின்றார் ஆசான். பாருங்களேன்..பனியன்-ஜட்டிக்கு என்ன கோட் வார்டு வச்சிருக்கு பயபுள்ள. இவர் சிறிது யோசித்து "மேலுள்ளங்கி-கீழுள்ளங்கி என்று விளிக்கவேண்டும் தம்பி", என்று கூறிவிட்டு பதறி துடித்து ஓடினார். திருதிருவென்று விழித்த அவன், "என்னாது...முள்ளங்கியா...நான் பனியன்-ஜட்டி'ன்னே சொல்லிக்கிறேன்", என்று நகர்ந்தான். இது போன்ற பல எதிர் நிகழ்வுகளால் அவர் தன் இலக்கியத் தமிழ் உரையாடலில் இருந்து நடைமுறைத் தமிழ் உரையாடலுக்கு இடம் பெயர வைக்கப்பட்டார். பின்னாளில் "சோக்கா சொன்னடா நைனா..." ரேஞ்சிற்கு போய்விட்டது அவர் தமிழ்...! ஹீ..ஹீ...அடியேனுக்கும் இப்பெருமையில் கணிசமான பங்குண்டு என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவுத்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்....! 

'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்ற பல குடித்தனர்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு அஸ்சோசியேஷன் ஒன்றை நிறுவி, அதற்கு தானே தலைவர் என்றும், தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்றும்  பிரகடனப் படுத்தினார். முதல் கூட்டத்திற்கு ஒரு ஈ, காக்கையும் வரவில்லை. பின், அவரே ஒவ்வொவொரு வீட்டிற்கும் சென்று, "தயவுசெய்து வாங்க, நிறைய பஜ்ஜி, சொஜ்ஜிலாம் பண்ணியாச்சு, எல்லாம் வீணாப் போயிடும்", என்று தலைவருக்கே உரிய வானளாவிய அதிகாரத்தை பயன் படுத்தி மூர்க்கமாக உத்தரவிட்டும் பார்த்தார். ம்ம்ஹூம்...ஒரு பயனும் இல்லை. அனைவரும் "அஸ் ஐயம் சப்பரிங் ப்ரம் பீவர்" என்று விடுப்பு விண்ணப்பம் நீட்டி, பழையது ஒன்னும் இல்ல, நீ வேற வீடு பாரப்பா என்கிற ரீதியில் இடத்தை காலி செய்ய சொன்னார்கள்.  வீட்டில் தாரமோ, "அதச்செய், இதச்செய்'ன்னு உசுர வாங்கினில்ல, உக்காந்து ஒன்னு விடாம நீயே தின்னு", என்று பாசமழை பொழிய, இவர் பயந்து போய், "இந்த அப்பார்ட்மெண்டும், குடித்தனக்காரர்களும் நாசமாய் போகட்டும்", என்று பி.எஸ். வீரப்பா வசனத்தை உச்சரித்தவாரே எல்லோர் வீட்டிற்கும் பதார்த்த விநியோகம் செய்தார். 

இவருக்கும், அப்பார்ட்மெண்டில் ஐந்து சிறார்களுக்கும் (உள்ளேன் ஐயா..!) ஏழாம் பொருத்தம். அந்த ஐவரணி நாட்டாமை (சுதாகர்), Tomato (செந்தில்), கபீஷ் (ஆனந்த்), பென்சில் (நடராஜ்) அப்புறம் புஜ்ஜிக்குட்டி (நான்..ஹீ..ஹீ). அப்போது வளாகத்திற்கு உள்ளேயே ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். பேரழகு அக்காக்களும், எம் வயதொத்த பள்ளிசெல் நங்கைகளும் பெருமளவில் குவிந்து எங்களை உற்சாகப் படுத்துவார்கள். அனைவரும் பால்கனியில் அமர்ந்து கைதட்டி ரசிப்பார்கள், இவர் ஒருவரைத் தவிர. ஏனெனில் எங்கள் பந்து அதிகமுறை பதம் பார்த்தது இவரையும், இவர் வீட்டு ஜன்னலையும் தான். எல்லாம் தெய்வச் செயல், இவரிடம் ஏதோ ஒரு மந்திரச் சக்தி இருந்து, எமது பந்துகளை எல்லாம் அவரை நோக்கி காந்தமாய் இழுத்து விடுகிறது.
இவர் தங்கபாலு அல்ல..! ஆசான் தங்கபாலு அளவுக்கு காமெடி பீஸ் கிடையாது...!
அன்றும் அப்படித்தான், கன்னிமாரை கவர பல்லை வலுகொண்டு கடித்து நம் நாட்டாமை அடித்த பந்து, அமைதியாக சென்று கொண்டிருந்த ஆசானின் பளிங்குத் தலையில் பட்டு 'படீர்' என்ற ஒலியுடன் தெறித்து விழுந்தது. அதே  தெய்வச் செயல்..! சுற்றம் அதிர அதிர சிரிக்கவும், நம் பென்சில் "நியுட்டனின் மூன்றாம் விதி நிரூபணம்", என்று திருவாய் மலரவும், கொதிப்பின் உச்சியை அடைந்தார் ஆசான். மீண்டும் தன் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி "வளாகத்தில் யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது", என்று உத்தரவு பிறப்பித்தார். அதிகம் பாதிக்கப்பட்டவர் குரல் ஆதலால் பிற குடித்தனர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

அன்றிலிருந்து, எங்களின் முதல் எதிரியானார் ஆசான். ஐவர் குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது. வளாகத்திற்கு உள்ளேயே கேட்பாரற்று கிடந்த ஒரு லாரி டயர் தான் ஐவர் கூடும் கூடம். அதன் மேல் அமர்ந்து கால்களை உள்ளே போட்டவாறு வட்டமேஜை கூட்டம் தொடங்கியது. ஆசானை ஒரு கைப் பார்த்து விட வேண்டும் என்றும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன்முதலாக, அதிகாரப்பூர்வமாக, அவருக்கு "எளனி" (வழக்கழிந்து போன தமிழில் இதை இளநீர் என்பார்கள், அட...பூ'வை பூ'ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும்  சொல்லலாம்னு சங்க இலக்கியத்துல படிச்சிருப்பீங்களே..அதே மாதிரி தாங்க.) என்று அவருடைய வழுக்கைத் தலையை குறிக்கும் வகையில் நாமகரணம் சூட்டப்பட்டது. ஆம்..அவர் தலை பார்ப்பதற்கு கவிழ்த்துப் போடப்பட்ட கடம் மாதிரியே இருக்கும். மிக உறுதியான கட்டமைப்பு. பல வருடங்களாய் மகசூல் பாரா தரிசு பூமி அது. பொட்டல் காடு. ஒவ்வொரு முறையும் அவர் கடக்கையில் உரத்த குரலுடன் கோரஸாக "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்"  பாடல் அவருக்கு டெடிகேட் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. தலைவாசல், தரிசுநிலம், மொட்டைமாடி, மேனேஜர் சீனா, மிஸ்டர் முடியரசன் என்று பலவாறாக பட்டங்கள் அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப் பட்டார். தினசரி காற்றிறக்கி விடப்பட்ட T.V.S.50ஐ தள்ளச்செய்து உடலுறுதிக்கு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டார். 

"டேய் பார்த்துடா, வழுக்கப் போவுது", என்று நண்பன் மேல் அக்கறையாய் அவர் காது பட பேசுவதிலும், "பேன் தொல்லையிலிருந்து விடுபட மெடிக்கர் யூஸ் பண்ணுங்க; மேலும் விபரங்களுக்கு அணுகவும் பயனாளியான ஆசானை", என்று  சுவற்றில் எழுதி வைப்பதிலும், "டேய் சார் தலையில் களிமண்ணு தான்டா இருக்கும்; ஏன்னா.., களிமண்ணுலதான் ஒன்னுமே முளைக்காதுன்னு எங்க சயின்ஸ் மிஸ் சொல்லிருக்காங்க", என்று அறிவியல் பேசுவதிலும், இப்படிப் பலவாறாக தங்கள் எதிர்ப்பை ஒவ்வொவொரு நொடியும் அவருக்கு உணர்த்திய வண்ணம் இருந்தது எங்கள் ஐவர் குழு. தொடர் அதிரடி அடாவடிகளால் மிகத் துயரமுற்றுப் போனார், ஆசான்.

ஒரு நாள் சிவனே என்று அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த ஆசானை நாட்டாமை பின்தொடர்ந்து சென்று நிறுத்தி, "சார் உங்க ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று இரண்டு மூன்று முறை அவர் தோசைக்கல் தலையிலேயே ஆப்பாயில் போட, முறைத்து கொண்டே "வானரம்..புள்ளையா இது, புள்ளைய பெறுங்கடான்னா குரங்கப் பெத்து வச்சிருக்கானுங்க..என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார். மெயின்கேட்டில் நின்று கொண்டிருந்த Tomato'வும் தன் பங்கிற்கு "ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று பாராட்டு தெரிவித்து உளம் பூரித்துப் போனான். அன்று மாலை லாரி டயர் கூட்டம், அவசர, அவசரமாக கூட்டப்பட்டது. நாட்டாமையும், Tomato'வும் படு பயங்கர துக்கத்தில். பென்சில் மட்டும் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். எல்லாம் ஆசானின் புண்ணியத்தால் விளைந்த தகப்பன்மார்களின் தர்மடி.

"சரியான பரேடா(Parade)?", நான்.
நாட்டாமை, "ம்ம்ம்....வெளுத்து வாங்கிட்டாரு எங்கப்பா...! அந்த ஒரு சென்சிடிவ் ஸ்பாட்ட மட்டும் தான் விட்டு வச்சாரு". 
"எங்கப்பா அதக்கூட விட்டு வக்கலடா, புஜ்ஜு....", இது Tomato. 
"அதான், நீ வந்ததிலேர்ந்து நின்னுகிட்டே இருக்கியா...?!", கலாய்த்தான் கபீஷ். 
"நீ வாங்கி பாரு, உனக்கு அப்பத்தான் தெரியும்", அழாத குறையாக நாட்டாமை. 

அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆசானை அதிகம் தீண்டியதில்லை ஐவர் அணி. பின் வந்த நாட்களில் போர் மேகங்கள் விலகி இருவரும் சமாதானமாகி அவர் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு ராசியான நண்பர்களாகிப் போனோம். எங்கள் அனைவரையும் சுற்றி அமரச் செய்து நல்ல, நல்ல நாட்டு நடப்பு செய்திகளை, சினிமா, விளையாட்டு செய்திகளை பல்சுவை குன்றாமல் பகிர்வார். அப்படி மகிழ்ந்த தருணங்களில் அவர் நாட்டாமையை பார்த்து எடுத்தியம்பிய பொன் மொழிகளுள் ஒன்று தான் இந்த, 

"சோக்கா சொன்னடா நைனா...!" 

வாழ்க தமிழ் ஆசான்....! நீங்க இப்போது எங்கே சார் இருக்கிறீங்க..?, மீண்டும் உங்களை சந்திக்கும் ஆவலில்...நான்...!

(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

சனி, 9 ஏப்ரல், 2011

"நான்" - கொல்லப்பட்ட நொடிகள்...!



சபாநாயகர் தெருவை அரவணைத்துச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH-45. எனக்கு நினைவு தெரிந்து தனியே யார் துணையுமின்றி நான் கடந்து செல்ல பழகிய தார்ச் சாலை. கடந்த காலமாகிப் போன அந்நாட்களின் அற்புதமான காலை பொழுதுகளை, மெய் தழுவி ஜொலித்த இளஞ்சூரிய கதிரும், உயிர் வருடிச் சென்ற மென் குளிர் தென்றல்காற்றுமே இப்போதும் என் நெஞ்சிலும் நினைவிலும் பதியச் செய்திருக்கின்றன. அந்தக் காலைகளில் இச்சாலையை கடந்து சென்ற தருணங்களை இப்போது நினைத்தாலும் மனம் சில்லிடுகிறது. கால் சட்டையணிந்து சின்னஞ்சிறு மழலையாய் கவலையின்றி திரிந்த காலத்திலிருந்து, கனவுகள் கோடி சுமந்து கல்லூரி காளையாய் சீறிப் பாய்ந்த நாட்கள் வரை, அன்றைய தினங்களின் எனது ஒவ்வொவொரு அசைவுகளையும், கவனித்து இன்றும் பத்திரமாய் அடக்கிவைத்திருக்கும் ஒரு நெடு நீண்ட பெட்டி இச்சாலை. பள்ளி கூப்பிடு தூரத்தில் வீட்டிற்கு இடப் புறமென்றால், கல்லூரியோ வலது புறத்தில்.

எந்த வித எண்ணத்தின் தாக்கமும் இல்லாத, அவசரமற்ற, பளிங்கு போன்ற கறையற்ற காலைப் பொழுதிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதிக அரவமற்ற, பனி படர்ந்த அவ்வேளைகளில் பறவைகளின் ஒலி ரசித்து, இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து களித்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அளவற்ற இன்பம் கொடுத்த கணங்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர் சூடி தெய்வீகமாய் திலகமிட்டு, பயிற்சி வகுப்புகளுக்கு "லேடி பேர்ட்" மிதி வண்டிகளில் வண்ணத்துப் பூச்சிகளாய் ரீங்காரமிட்டு செல்லும் அந்த தேவதைகளை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்ற தருணங்கள் சொர்க்கமாய் இன்னும் என் நெஞ்சில். அவர்கள் கடந்து , மறைந்த பின்பும் மறையாத அவர்களின் சிரிப்பொலிகளையும், மலர்களின் மணத்தையும் இப்போதும் முறையே, கேட்கிறேன், நுகர்கிறேன்..! ஆணை அழகனாக்குவாள் பெண்...! இச்சொற்களை உண்மை என்று உணர்த்திய நாட்கள் அவை. அவர்கள் எனது மண்ணின் ஆர்ப்பரிக்கும் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பெண்டிர். கடக்கும் கன்னியர் யாவரின் கண்களும் நம் மேலே இருக்கக் கூடாதா என்பது போன்ற ஒரு விபரீத எண்ணத்தை தூண்டி, பைத்தியம் பிடிக்க வைக்க கூடிய பேரழகுப் பெண்கள். அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன். 


அதைப் போன்றதொரு பொன் காலைப் பொழுதில்தான், பள்ளி செல்லும் பாலகனாய் உலவிய காலத்தில், அவரை அம்மரத்தினடியில் அமர்ந்திருக்க கண்டேன். எம் வீட்டின் அருகில் இருந்த "வருவாய் வட்டாட்சி அலுவலர்" அரசு இல்லத்தின் வெளிப்புறத்தில், காம்பவுண்ட் சுவர் அருகில் இருந்த அந்த மரத்து நிழலில் தான் அமர்ந்திருந்தார். பல வருடங்களாக அங்குதான் அமர்ந்திருக்கிறார், என் கண்கள் அவரை கவனித்ததென்னவோ அன்று தான். அழுக்கடைந்து கறுப்பேறியிருந்த  கந்தல் ஆடைகளால் மூடப்பட்ட உடல்.  நரைத்த புருவத்தின் கீழ் எந்தவித எதிர்ப்பார்ப்பும் அற்ற விழிகள். உணர்ச்சியற்றதாய் தோன்றின அவை. முகத்தை தலை மயிரும், தாடி மயிரும் மறைக்க, நீண்டிருந்த நாசி மட்டுமே அது மனித முகம் தான் என்பதை உணர்த்துவதாய் அமைந்து இருந்தது. தலைமயிர் சடை சடையாய் முடிச்சிகளுற்று, விழுதுகளை போல் முன் விழுந்து முகம் முழுக்க பரவிக்கிடந்தது. அடர்ந்து வெளுத்தும், பழுப்படைந்தும் இருந்த தாடி அவரின் நெஞ்சுக்கூட்டை தாண்டியும் நீண்டிருந்தது. உருவத்தில் தெரிந்த முதிர்ச்சி, அவருடைய கருத்த சருமத்தில் தெரியவில்லை. தோல் சுருக்கங்களின்றி இருந்தது.  நாற்பதுகளின் இறுதியில் இருப்பவராகவே பட்டது. மொத்தத்தில் ஒரு பிச்சைகாரருக்குரிய அத்தனை அடையாளங்களையும் கொண்டவராய் இருந்தார் பிச்சைப் பாத்திரமின்றி. மூங்கிலால் ஆன கைத்தடி அவருடைய கைக்கு எட்டும் தொலைவில்.

அவ்வயதில் மிக அச்சுறுத்தலாய் உணர்ந்தேன் அவரை கடக்கும் நொடிகளை. தலையை கீழே தொங்கவிட்டிருந்த நிலையில் அமர்ந்திருந்தவர் நான் கடக்கையில் என்னை நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். தோற்றத்தைக் கொண்டு முடிவெடுக்கும் வயதானதால், அவரின் தலை நிமிரளும், காவிப்பல் சிரிப்பும் என் இதயத்துடிப்பை அதிகரித்து பயத்தை உறுதி செய்தன. பைத்தியமோ...என்று எண்ணிக்கொண்டே ஒரு வித படபடப்பில் அவரை அவசரகதியில் கடந்தேன். இரண்டு, மூன்று முறை பின் தொடர்கிறாரா...என்று திரும்பி திரும்பி பார்த்து பீதியாகவே ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. பின் வந்த நாட்களில், அவர் அபாயமற்றவர் என்பதை அவரை ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போது அவருடைய அமைதியும், அவ்வப்போது தாடி மறைவிலிருந்து வெளிவரும் புன்னகையும் உணர்த்த அவரை கடக்கும் தருணங்கள் மிக சாதரணமாக போய் விட்டன. 


எவ்வளவு கடுமையான வெயிலானாலும், மழையானாலும் அவர் அந்த இடத்தை விட்டகன்று கண்டதில்லை. கொளுத்தும் வெய்யிலிலேயே அவர் அமர்ந்திருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். அவருக்கு இரவு உறக்கமும் அதே இடத்தில் தான். வாழ்க்கையையே நான்குக்கு இரண்டு  என்ற நீள அகல பரப்பளவிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்த போது அவர் ஞாபகம் வர, குடை பிடித்து அவர் அமர்ந்திருக்கும் இடம் விரைந்தேன். மழையும் காற்றும் மிக பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை. அப்படியே கண்களை சுற்றும், முற்றும் அலைய விட்டேன். அவர் அமர்ந்திருக்கும் எதிர் திசையில், நெடுஞ்சாலையை கடந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருந்த சிறு கோவிலின் கூரை கீழ் தலையை குனிந்து அமர்ந்திருந்தார். தலைமுடியிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் வழிந்து கீழே அவருடைய ஏற்கனவே நனைந்த அழுக்கு ஆடையை மேலும் ஈரமாக்கிக் கொண்டிருந்தன. இயற்கை கடன்களை கழிப்பதற்கும், எப்போதாவது மழையிலிருந்து தன்னை காத்து கொள்வதற்கும் மட்டுமே அவர் அவ்விடத்தை விட்டு நகர்வார் என்று தோன்றியது. 

ஒரு நாள், நல்ல உச்சி வெய்யிலில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அவர் அருகில் ஐந்து அடுக்கு டிபன் கேரியர் ஒன்று இருப்பதை காண முடிந்தது. கேரியர் கம்பிகளுக்கு இடையில் வாழை இலை சொருகப்பட்டு இருக்க அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்து இருந்தது. நாய் சற்று கொழுத்து காணப்பட்டது. அவருக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலேயும் உணவுக் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதை பல நாட்கள் கண்டிருக்கிறேன். பின்பு தான் அவருக்கு யார் மூலமாகவோ, மூன்று வேளை உணவும் தினசரி கொடுக்கப் படுவதை அறிந்து கொண்டேன். 

"அவர் யார்...? பிச்சைக்காரரா...? இல்லை....பைத்தியக்காரரா...? பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்துடன் இருக்கும் அவரை ஏன் இதுபோன்ற பொதுமக்களும், பள்ளிச் சிறுவர் சிறுமிகளும், வெகுவாக கடந்து செல்லும் சாலையில் அமர அனுமதிக்கிறார்கள்...? யார், ஏன் வாழையிலையில் மூன்று வேலையும் உணவு கொடுக்கிறார்கள்...?", என்பன போன்ற சிறு வயதில் மனதை உறுத்திய, தோன்றிய கேள்விகள், பதிலை தேடாமலேயே தொலைக்கப்பட்டன என்னால்.  பள்ளிப்பருவத்தை கடந்து கல்லூரி செல்ல தொடங்கிய பிறகு, அவரை பற்றிய நினைவுகளே எழவில்லை. அப்போதும் அவர் அங்குதான் அமர்ந்திருந்தார். கல்லூரி சலனங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த கண்களுக்கு அவர் அவசியமற்றவராக கருதப்பட்டாரோ என்னவோ...! அவரை மறந்தே போனேன். 

பிறிதொரு நாள் , தொலைக்காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களுள் ஒன்றான "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். "அக்கம் பக்கம் பாரடா என் சின்ன ராசா" என்ற பாடலில் தோன்றும் ஒரு பிச்சைக்காரரின் தோற்றம், மரத்தடியில் அமர்ந்திருப்பவரை ஞாபகப்படுத்தவே , பல வருடங்களுக்கு பிறகு, அவரை பற்றிய நினைவுகள் எழ ஆரம்பித்தன. விறு, விறுவென்று புறப்பட்டு அவரிடத்தை அடைந்தேன். இப்போதும் அதே இடத்தில் தான் இருந்தார். மிகவும் , மெலிந்து, தோள் சுருக்கமுற்று, மரவட்டை போன்று சுருங்கி கிடந்தார். நாயில்லை அவர் அருகில், முனை மழுங்கிய அதே பழைய கைத்தடி இருந்தது. அவரை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் நிழலாடின கண் முன். என்னை அச்சுறுத்திய அவருடைய அந்தப் புன்னகை மெல்ல ஒரு நொடி மனதை கடந்து சென்றது. மீண்டும் அவரைப் பற்றிய பதில் தேடப்படாத பழைய கேள்விகள் மனதில் உயிர்பெற்று எழுந்தன. கேள்விச்சுமைகளை சுமந்தபடியே வீடடைந்தேன். 

சில நாட்களுக்கு பின், நண்பர் ஒருவரிடத்தில் உரையாடி கொண்டிருக்கையில், இவரைப் பற்றிய பேச்சு தற்செயலாக எழுந்தது. என்னுடைய கேள்விச் சுமைகளை அங்கே அவரிடத்தில் இறக்கி வைக்க, அதற்கு அவரளித்த பதில்கள் என்னை சற்று திடுக்கிடச் செய்து உறையத் தான் வைத்தன. சிதம்பரம் நகர வீதியில், செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாம் அந்த முதியவர். சில வருடங்கள் முன்பு வரை பணம் பகட்டு என்று, ஒய்யார வாழ்க்கையாம் அவருடையது. நிறைய சொத்துகளுக்கும், நில புலன்களுக்கும் சொந்தக்காரராய் பெரு மகிழ்ச்சியாய் வாழ்ந்தவருக்கு திருமணம் நடந்த பிறகு தான் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கின.

அவருடைய மனைவியும், மனைவி வழி உறவினர்களும், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரையே ஏமாற்றி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க, இதை அறிந்து பலமுறை கண்டித்திருக்கிறார்.  அவரின் புத்திமதியை மனைவி கண்டு கொள்ளவே இல்லை.  மாறாக, மிகுந்த பேராசையுடன் பணம், சொத்து, நிலம் என்று பொருள் குவிப்பதிலயே குறியாக இருந்திருக்கிறார். மேலும், அவர் செய்து வந்த தான தர்ம காரியங்களுக்கும் தடைகள் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். தினம் போர்க்களமாய் ஒரு வாழ்வு வாழ்வதை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த மனிதர். பணம் என்பது வாழ்க்கை சக்கரத்தை சுழல உதவும் ஒரு கருவியே அன்றி, அதுவே வாழ்க்கையல்ல என்பதை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மனைவி புரிந்து கொள்ளவே இல்லை. தன் உறவினர்களைக் கொண்டே மனைவி தன்னை தாக்க முயல, வெறுப்பின் உச்சத்தை அடைந்திருக்கிறார், அவமானம் தாளாமல். இறுதியாக, அனைத்தையும் துறந்து அந்த மரத்தினடியில் வந்து அமர்ந்து விட்டதாக கூறினார் நண்பர். நான் நினைத்தது போல் அவர் பிச்சைக்காரரும் இல்லை, பைத்தியக்காரரும் இல்லை. 

பணத்தை துச்சமாய் கருதி மனைவிக்கு வாழ்க்கைப் பாடத்தை புகட்ட  அரண்மனை போலிருந்த வீட்டையும், செழிப்பான வாழ்க்கையையும் துறந்து ஒரு பிச்சைக்காரரை போல் வெயிலிலும், மழையிலும், கடுங்குளிரிலும் தெரு நாயைப் போல் அமர்ந்திருந்த அந்த மனிதனின் கதை என்னை மிகவும் பாதித்தது. மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெறும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன் . அன்று இரவு, அவரை தூரத்திலிருந்து பார்ப்பதற்காக அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு சென்றேன். அங்கு அவரில்லை. சுற்றிலும் தேடினேன் எங்காவது இருக்கிறாரா என்று, கோவிலில், தூரத்தில், மரத்தின் பின் என்று எல்லா இடத்தையும் நோக்கினேன். எங்கும் இல்லை அவர். வீடு திரும்பினேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. விசாரித்ததில், அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். 

ஆனால் அந்த மனிதர் என்னுள் கொன்று சென்ற அந்த "நான்"  இப்போதும் சில முறை உயிர்த்தெழ எத்தனிக்கும் போதெல்லாம், அவனை மறிக்கச் செய்யும் மந்திரம், மனதில் தோன்றும் அவரின் முதல் பார்வையும், தன் தாடியினுள் புதைந்திருந்த உதடுகள் விரித்து சிந்திய அந்த புன்னகையும் தான். அவை எப்போதும் எனக்குள் தோன்றி என்னை எச்சரித்து மமதை அடையாமல் மனிதனாய் வாழ உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. "ஆனால் இப்போதும் சில நேரங்களில் அந்த "நான் " உயிர்த்தெழுகிறான் எனில் அவன் முற்றிலும் மறிக்கப்படவில்லையோ...?", என்னை நானே பல முறை கேட்டிருக்கிறேன் இந்த வினாவை. முயற்சிக்கறேன் அவனை- அந்த "நான்'ஐ"முற்றிலும் களைவதற்கு. மனிதப் பிழைகள் குற்றங்களாவது, பிழைகளை நாம் உணர்ந்த பின்பும் தவிர்க்காமல் இருக்கையில் தானே...!

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....