என் பாட சாலை பருவத்தின் நினைவுகளாய் இன்றும் பசுமையாய், என்றும் இனிமையாய் நெஞ்சில் படிந்திருக்கும் ஒரு நல்ல மனிதருடன் பழகிய சில நாட்களின் சம்பவங்களே இந்தப் பதிவு. அவர் ஒரு தமிழாசான். எப்போதும் பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் "Johnsons வேட்டி-சட்டை" விளம்பர மாடல் தோரணையில் ஒய்யாரமாய் உலா வருவார். வெறும் தமிழ் பற்று அல்ல....தமிழ் பித்து பிடித்தவர். "அண்டை வீட்டு குழந்தாய்!, கணையாழியில் கவனம் வையடி கண்ணே?" என்று ஒரு சிறுமியிடம் இவர் சொல்ல, அவள் தன் தாயிடம் "மம்மி!, ஒயிட் தோத்தி அங்கிள் என் கண்ணுமுழி எல்லாம் நோண்டிடுவேன்னு திட்றாரு மம்மி", என்று அழுதே விட்டாள். "தம்பி!, தெருமுனை பலசரக்கங்காடி சென்று உசாலா (UJALA) சொட்டு நீலம் வாங்கி வருகிறாயா, உசாலா, உசாலா..?", என்று சிறுவன் ஒருவனிடம் இவர் கேட்க, களுக்கென்று விழுந்து விழுந்து சிரித்த அவன், அது நாள் முதல் இவரை எங்கு, எப்போது பார்த்தாலும், "சார்! உசாலா சொட்டு நீலம் வாங்கி வரட்டுமா...உசாலா..உசாலா?" என்று குஷாலாக சொட்டு நீலத்தோடு அவர் பிராணனையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தான்.
ஒருவன் "சார்!, டாம் அண்ட் ஜெர்ரி'யை தமிழ்ல எப்படி சார் சொல்றது"ன்னு கேட்டான், என்னே தமிழ்ப்பற்று என்று வியந்து தான் போனார். ஆனால் "பூனையும் எலியும் என்று விளிக்க வேண்டும் தம்பி!" என்ற இவரின் சிரத்தையான பதிலால் அவன் திருப்தி அடையவில்லை போலும். "நான் கேட்டது அது இல்ல சார், பனியன்-ஜட்டி'யை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு கேட்டேன்", என்றவனைப் பார்த்து விக்கித்து விழி பிதுங்கி தான் நின்றார் ஆசான். பாருங்களேன்..பனியன்-ஜட்டிக்கு என்ன கோட் வார்டு வச்சிருக்கு பயபுள்ள. இவர் சிறிது யோசித்து "மேலுள்ளங்கி-கீழுள்ளங்கி என்று விளிக்கவேண்டும் தம்பி", என்று கூறிவிட்டு பதறி துடித்து ஓடினார். திருதிருவென்று விழித்த அவன், "என்னாது...முள்ளங்கியா...நான் பனியன்-ஜட்டி'ன்னே சொல்லிக்கிறேன்", என்று நகர்ந்தான். இது போன்ற பல எதிர் நிகழ்வுகளால் அவர் தன் இலக்கியத் தமிழ் உரையாடலில் இருந்து நடைமுறைத் தமிழ் உரையாடலுக்கு இடம் பெயர வைக்கப்பட்டார். பின்னாளில் "சோக்கா சொன்னடா நைனா..." ரேஞ்சிற்கு போய்விட்டது அவர் தமிழ்...! ஹீ..ஹீ...அடியேனுக்கும் இப்பெருமையில் கணிசமான பங்குண்டு என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவுத்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்....!
'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்ற பல குடித்தனர்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு அஸ்சோசியேஷன் ஒன்றை நிறுவி, அதற்கு தானே தலைவர் என்றும், தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்றும் பிரகடனப் படுத்தினார். முதல் கூட்டத்திற்கு ஒரு ஈ, காக்கையும் வரவில்லை. பின், அவரே ஒவ்வொவொரு வீட்டிற்கும் சென்று, "தயவுசெய்து வாங்க, நிறைய பஜ்ஜி, சொஜ்ஜிலாம் பண்ணியாச்சு, எல்லாம் வீணாப் போயிடும்", என்று தலைவருக்கே உரிய வானளாவிய அதிகாரத்தை பயன் படுத்தி மூர்க்கமாக உத்தரவிட்டும் பார்த்தார். ம்ம்ஹூம்...ஒரு பயனும் இல்லை. அனைவரும் "அஸ் ஐயம் சப்பரிங் ப்ரம் பீவர்" என்று விடுப்பு விண்ணப்பம் நீட்டி, பழையது ஒன்னும் இல்ல, நீ வேற வீடு பாரப்பா என்கிற ரீதியில் இடத்தை காலி செய்ய சொன்னார்கள். வீட்டில் தாரமோ, "அதச்செய், இதச்செய்'ன்னு உசுர வாங்கினில்ல, உக்காந்து ஒன்னு விடாம நீயே தின்னு", என்று பாசமழை பொழிய, இவர் பயந்து போய், "இந்த அப்பார்ட்மெண்டும், குடித்தனக்காரர்களும் நாசமாய் போகட்டும்", என்று பி.எஸ். வீரப்பா வசனத்தை உச்சரித்தவாரே எல்லோர் வீட்டிற்கும் பதார்த்த விநியோகம் செய்தார்.
இவருக்கும், அப்பார்ட்மெண்டில் ஐந்து சிறார்களுக்கும் (உள்ளேன் ஐயா..!) ஏழாம் பொருத்தம். அந்த ஐவரணி நாட்டாமை (சுதாகர்), Tomato (செந்தில்), கபீஷ் (ஆனந்த்), பென்சில் (நடராஜ்) அப்புறம் புஜ்ஜிக்குட்டி (நான்..ஹீ..ஹீ). அப்போது வளாகத்திற்கு உள்ளேயே ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். பேரழகு அக்காக்களும், எம் வயதொத்த பள்ளிசெல் நங்கைகளும் பெருமளவில் குவிந்து எங்களை உற்சாகப் படுத்துவார்கள். அனைவரும் பால்கனியில் அமர்ந்து கைதட்டி ரசிப்பார்கள், இவர் ஒருவரைத் தவிர. ஏனெனில் எங்கள் பந்து அதிகமுறை பதம் பார்த்தது இவரையும், இவர் வீட்டு ஜன்னலையும் தான். எல்லாம் தெய்வச் செயல், இவரிடம் ஏதோ ஒரு மந்திரச் சக்தி இருந்து, எமது பந்துகளை எல்லாம் அவரை நோக்கி காந்தமாய் இழுத்து விடுகிறது.
அன்றும் அப்படித்தான், கன்னிமாரை கவர பல்லை வலுகொண்டு கடித்து நம் நாட்டாமை அடித்த பந்து, அமைதியாக சென்று கொண்டிருந்த ஆசானின் பளிங்குத் தலையில் பட்டு 'படீர்' என்ற ஒலியுடன் தெறித்து விழுந்தது. அதே தெய்வச் செயல்..! சுற்றம் அதிர அதிர சிரிக்கவும், நம் பென்சில் "நியுட்டனின் மூன்றாம் விதி நிரூபணம்", என்று திருவாய் மலரவும், கொதிப்பின் உச்சியை அடைந்தார் ஆசான். மீண்டும் தன் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி "வளாகத்தில் யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது", என்று உத்தரவு பிறப்பித்தார். அதிகம் பாதிக்கப்பட்டவர் குரல் ஆதலால் பிற குடித்தனர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அன்றிலிருந்து, எங்களின் முதல் எதிரியானார் ஆசான். ஐவர் குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது. வளாகத்திற்கு உள்ளேயே கேட்பாரற்று கிடந்த ஒரு லாரி டயர் தான் ஐவர் கூடும் கூடம். அதன் மேல் அமர்ந்து கால்களை உள்ளே போட்டவாறு வட்டமேஜை கூட்டம் தொடங்கியது. ஆசானை ஒரு கைப் பார்த்து விட வேண்டும் என்றும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன்முதலாக, அதிகாரப்பூர்வமாக, அவருக்கு "எளனி" (வழக்கழிந்து போன தமிழில் இதை இளநீர் என்பார்கள், அட...பூ'வை பூ'ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம்னு சங்க இலக்கியத்துல படிச்சிருப்பீங்களே..அதே மாதிரி தாங்க.) என்று அவருடைய வழுக்கைத் தலையை குறிக்கும் வகையில் நாமகரணம் சூட்டப்பட்டது. ஆம்..அவர் தலை பார்ப்பதற்கு கவிழ்த்துப் போடப்பட்ட கடம் மாதிரியே இருக்கும். மிக உறுதியான கட்டமைப்பு. பல வருடங்களாய் மகசூல் பாரா தரிசு பூமி அது. பொட்டல் காடு. ஒவ்வொரு முறையும் அவர் கடக்கையில் உரத்த குரலுடன் கோரஸாக "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்" பாடல் அவருக்கு டெடிகேட் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. தலைவாசல், தரிசுநிலம், மொட்டைமாடி, மேனேஜர் சீனா, மிஸ்டர் முடியரசன் என்று பலவாறாக பட்டங்கள் அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப் பட்டார். தினசரி காற்றிறக்கி விடப்பட்ட T.V.S.50ஐ தள்ளச்செய்து உடலுறுதிக்கு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டார்.
"டேய் பார்த்துடா, வழுக்கப் போவுது", என்று நண்பன் மேல் அக்கறையாய் அவர் காது பட பேசுவதிலும், "பேன் தொல்லையிலிருந்து விடுபட மெடிக்கர் யூஸ் பண்ணுங்க; மேலும் விபரங்களுக்கு அணுகவும் பயனாளியான ஆசானை", என்று சுவற்றில் எழுதி வைப்பதிலும், "டேய் சார் தலையில் களிமண்ணு தான்டா இருக்கும்; ஏன்னா.., களிமண்ணுலதான் ஒன்னுமே முளைக்காதுன்னு எங்க சயின்ஸ் மிஸ் சொல்லிருக்காங்க", என்று அறிவியல் பேசுவதிலும், இப்படிப் பலவாறாக தங்கள் எதிர்ப்பை ஒவ்வொவொரு நொடியும் அவருக்கு உணர்த்திய வண்ணம் இருந்தது எங்கள் ஐவர் குழு. தொடர் அதிரடி அடாவடிகளால் மிகத் துயரமுற்றுப் போனார், ஆசான்.
ஒரு நாள் சிவனே என்று அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த ஆசானை நாட்டாமை பின்தொடர்ந்து சென்று நிறுத்தி, "சார் உங்க ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று இரண்டு மூன்று முறை அவர் தோசைக்கல் தலையிலேயே ஆப்பாயில் போட, முறைத்து கொண்டே "வானரம்..புள்ளையா இது, புள்ளைய பெறுங்கடான்னா குரங்கப் பெத்து வச்சிருக்கானுங்க..என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார். மெயின்கேட்டில் நின்று கொண்டிருந்த Tomato'வும் தன் பங்கிற்கு "ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று பாராட்டு தெரிவித்து உளம் பூரித்துப் போனான். அன்று மாலை லாரி டயர் கூட்டம், அவசர, அவசரமாக கூட்டப்பட்டது. நாட்டாமையும், Tomato'வும் படு பயங்கர துக்கத்தில். பென்சில் மட்டும் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். எல்லாம் ஆசானின் புண்ணியத்தால் விளைந்த தகப்பன்மார்களின் தர்மடி.
"சரியான பரேடா(Parade)?", நான்.
நாட்டாமை, "ம்ம்ம்....வெளுத்து வாங்கிட்டாரு எங்கப்பா...! அந்த ஒரு சென்சிடிவ் ஸ்பாட்ட மட்டும் தான் விட்டு வச்சாரு".
"எங்கப்பா அதக்கூட விட்டு வக்கலடா, புஜ்ஜு....", இது Tomato.
"அதான், நீ வந்ததிலேர்ந்து நின்னுகிட்டே இருக்கியா...?!", கலாய்த்தான் கபீஷ்.
"நீ வாங்கி பாரு, உனக்கு அப்பத்தான் தெரியும்", அழாத குறையாக நாட்டாமை.
அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆசானை அதிகம் தீண்டியதில்லை ஐவர் அணி. பின் வந்த நாட்களில் போர் மேகங்கள் விலகி இருவரும் சமாதானமாகி அவர் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு ராசியான நண்பர்களாகிப் போனோம். எங்கள் அனைவரையும் சுற்றி அமரச் செய்து நல்ல, நல்ல நாட்டு நடப்பு செய்திகளை, சினிமா, விளையாட்டு செய்திகளை பல்சுவை குன்றாமல் பகிர்வார். அப்படி மகிழ்ந்த தருணங்களில் அவர் நாட்டாமையை பார்த்து எடுத்தியம்பிய பொன் மொழிகளுள் ஒன்று தான் இந்த,
"சோக்கா சொன்னடா நைனா...!"
வாழ்க தமிழ் ஆசான்....! நீங்க இப்போது எங்கே சார் இருக்கிறீங்க..?, மீண்டும் உங்களை சந்திக்கும் ஆவலில்...நான்...!
(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....