புதன், 8 டிசம்பர், 2010

என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-1)

அது மும்பையில் புதிய பணியில் சேர்ந்த மிக தொடக்க காலம். முதல் இரு வாரங்கள் 'ஓரியென்டேஷன்' என்ற பெயரில் அனைத்து துறைகளுக்கும் சென்று நேரத்தை கொல்ல முடியாமல் கொன்று, மென்று, தின்று விழுங்கி அப்போதுதான் எனக்கு முதல் நாளில் ஒதுக்கப்பட்ட அதே இருக்கைக்கு திரும்பி இருந்தேன். புது இடம், புதிய மனிதர்கள், புது அணுகுமுறைகள், அந்நியமாய் தோன்றும் எம் பாரத நாட்டின் அலுவல் மொழி (வாழ்க திராவிட கழகங்கள்), அதிசயமாய் தெரிந்த கார்ப்பரேட் வாழ்க்கை, செக்கச்செவேலென்றிருந்த பெண்கள், சிக்கென்றிருந்த அவர்களின் உடை மற்றும் உடல் வாகு, அவர்களை குறிவைத்தே அசையும் இந்தியாவின் பரந்துபட்ட எல்லைகளிலிருந்தும் பறந்து வந்திருந்த ஆண்கள், மணிக்கொரு முறை கும்பல் கும்பலாக உரியடிக்கச்க் செல்வது போல்அவரவர் கைகளில் ஒரு அரை லிட்டர் கோப்பையுடன் காப்பி, டீ, சூப் என்று வித விதமாய் போட்டுத்தாக்கச் செல்வது என எல்லாமே ஒரு வித இனம்புரியாத உணர்வுகளை, அதிர்வுகளை என்னுள் செருகிகொண்டே இருந்தன. இதில் மிகப்பெரிய கூத்து என்னவென்றால், அங்கே போன புதிதில், என்னடா நாம "30 நாளில் ஹிந்தி கற்க" என்ற பதினைந்து ரூபாய் புத்தகத்தை வாங்கி படித்த ஹிந்தியும் இவங்க பேசுற ஹிந்தியும் இவ்வவளவு வித்தியாசமா இருக்கே, ஒன்னுமே புரிய மாட்டேங்குதேன்னு கொஞ்ச நாளாகவே குழப்பமாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் பேசுவது ஹிந்தி அல்ல மராத்தி மொழியென்று. என்ன செய்வது, நமக்கு அப்போதிருந்த உலகறிவு அம்புட்டுதேன் சாமீ...!

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு 'வடாபாவ்' கேட்ட விசாரிப்புகளுக்கு இரண்டு வாரங்களாக மற்ற துறையினருக்கு அளித்த அதே பழைய ரெகார்டையே தேய்த்து முடித்தேன். 'ஓரியென்டேஷன்' முடிந்துவிட்டதை என் மூலம் தெரிந்து கொண்ட அவன் நான் இப்போது சும்மாதான் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை என் வாயாலேயே வரவழைத்தான். அதில் ஒரு பேரானந்தம் அவனுக்கு. ஆனால் அவன் ரொம்ப நேரமாக  பிசியாகவே இருந்தான்; அவனுடைய பிஸ்கட் பாக்கெட்டுடன். அப்புறம் அறிவுரை வேறு "போய் மேனேஜரை பார்த்து ஏதாவதொரு ப்ராஜெக்ட்ல சேர்க்கசொல்லி கேளு, இங்கே கேக்காம ஒன்னுமே நடக்காது" என்று. என்னடா பாசக்கார பார்ட்டியா இருக்கேன்னு நமக்கும் கொஞ்சம் சந்தோஷம் தான். என்ன.., இந்தா! ஒரு பிஸ்கட் எடுத்துக்கோன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல பயபுள்ள, அதுதான் மனசுக்கு கொஞ்சம் சங்கடமாய்  இருந்தது. இருந்தாலும் அவன் சொல் கேட்டு, அங்கேதான் 'ஆப்புக்கு' அஸ்திவாரமடிக்கப்படுகிறது என்று தெரியாமலே ஆவென்று பிளந்த வாயுடன்  பாஸ்'ஐ அணுகினேன்.

அப்படியா! அவ்வளவு ஆர்வமா மவராசா...! என்று கேட்காத குறையாக "நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டா" என்கிற தோரணையில் ஒரு நமட்டுச் சிரிப்புடன், இதோ ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.  மறுபடியும் இடத்திற்கே வந்து அமர்ந்தேன். சுர்ர்ர்ர்ர்ர்ர்.... ஒன்றுமில்லை, நம்ம கடின உழைப்பாளி 'வடாபாவ்' தான் சும்மாவே உட்கார்ந்திருந்த களைப்பு நீங்க இப்போது சூப்'ஐ அரை லிட்டர் கோப்பையில் தளும்ப, தளும்ப நிரப்பி அதில் நீந்திக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு பிறகு புறப்பட தயாரான போது, "எதாவது ப்ரொஜெக்ட்ல போட சொல்லி போர்ஸ் பண்ணி கேளு", மறுபடியும் உழைப்பாளியின் அறிவுரை.

எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அமர்ந்தவுடன், சில பல அக்கறை செறிந்த வார்த்தைகளுடன் தொடங்கிய மேனேஜர், பின்னர், "உங்களுக்கு ஒரு பெரிய 'ஓரியென்டேஷன்' ப்ரோக்ராமே தயாராக வைத்திருக்கிறேன்" என்று காதில் உறுமி அடித்தார். போச்சுடா! மறுபடியுமா...! இப்பத்தானே சந்து சந்தா ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்தி வந்தோம்..! சும்மா இருந்தவன இப்படி சொறி சொறின்னு சொறிஞ்சிவுட்டானே அந்த "வடாபாவ்". நான் ஓரியென்டஷன்'ஐ கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு சொல்லியதற்கு, "அது இன்-ஹவுஸ் ஓரியென்டேஷன், ஜஸ்ட் எ பார்மாலிட்டி, இது 'பேக்டரி ஓரியென்டேஷன்' உங்கள் டெக்னிகல் கேபப்ளிட்டி'ஐ என்ரிச் பண்ணுவதற்கு" நீட்டி முழக்கினார் தலைவர். பின்னர் "இதுல உங்களுக்கு தேவையான எல்லா விபரங்களும் இருக்கு" என்று ஒரு பைல்'ஐ நீட்டி, "நாளை மறு நாள் "புஷ்பக் எக்ஸ்பிரஸ்"ல டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன், உங்க டிக்கட்டை ஈவ்னிங் அட்மின்'ல வாங்கிக்கங்க" என்று முடித்தார். நான் புரியாமல் திருதிருவென்று விழிப்பதை பார்த்து பின் நீண்டதொரு விளக்கமும் கொடுத்தார். எல்லாம் புரிந்துவிட்டது. முதல் அலுவலகப் பயணம் கான்பூரை நோக்கி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடப்பாவிகளா..! தமிழ்நாட்டிலிருந்து வந்து முழுசா ரெண்டு வாரம் கூட ஆகலையே! அதுக்குள்ளயே, எங்கேயோ தண்ணி இல்லாத காட்டுக்கு மூட்டை முடிச்ச கட்ட சொல்றீங்களே, இது எங்கேயாவது அடுக்குமா? என்று எனக்குள்ளயே மிக தைரியமாக, சத்தம் போட்டு கேட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.

மிக சோகத்துடன் எனது இருக்கைக்கு திரும்பினேன். இப்போது நம்ம "வடாபாவ்" கொஞ்சம் மாறியிருந்தான்; சூப்'பிலிருந்து சிப்ஸ் பாக்கெட்டிற்கு. அகன்ற, விரிந்த சிரிப்புடனான அவனுடைய வரவேற்பும், கிண்டல் பார்வையும் இவனுக்கு ஒரு வேளை நமக்கு நேர்ந்த அந்த மகா கொடுமை தெரிந்திருக்குமோ என்ற ஐயப்பாட்டை எனக்கு ஏற்படுத்தியது. உள்ளே என்ன, என்ன நடந்தது என்று நேரில், அருகில் அமர்ந்து பார்த்ததை போல அப்படியே புட்டு, புட்டு வைத்து "எனக்குத்தான் முன்னாடியே தெரியுமே" என்று கூறி என் ஐயப்பாட்டை நிஜமென்று உறுதியும் செய்தான். "அட நாசமா போறவனே..! உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன், என்னை ஏன்டா இப்படி மாட்டிவிட்ட?" என்று மிக அதட்டலாய் கேட்க தோன்றியது, ஆனால் கேட்காமல் ஒரு நெற்றிக்கண் பார்வை மட்டும் பார்த்தேன். அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் தன் கருமமே கண்ணாய் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டு துழாவி மகிழ்ந்து கொண்டிருந்தான்.  "இவன் என்ன பெரிய இம்சையா இருப்பான் போல இருக்கே, இவனுக்கு ஏதாவது நல்லதா, நம்மள ரொம்ப நாள் நெனச்சிட்ருக்க மாதிரி ஏதாவது பண்ணனுமே" என்று ஓர் தீர்மானத்துக்கு வந்தேன். ஆனால் அந்த தீர்மானம் "மகளிர் மசோதா" மாதிரி நிறைவேராமலேயே போய்விட்டது.

கடைசி வரை இந்தப் பயணம் தள்ளிப் போகாதா என்ற என் நப்பாசை நிராசையாகவே, பொல, பொலவென்று புலர்ந்த ஒரு மந்தகாச காலையில் கான்பூரை அடைந்தேன். எல்லா இந்திய நகரங்களின் ரயில் நிலையத்தின் அதே மிகச்சிறந்த தோற்றப் பொலிவுடனேயும், நறுமணத்துடனேயும் எனது கண்களை சுருங்கச்செய்தும், முழுமையாக மூக்கை அடைக்கச் செய்தும் வரவேற்றது கான்பூர். வெறும் பத்து நாளில் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகத்திலிருந்து பெருக்கிய ஹிந்தி அறிவு ஒன்றுக்குமே உதவாது என்பதை முதலில் உணர்த்திய சம்பவம் அங்கேதான் நடந்தது.
அதை அடுத்த பகுதியில் பதிகிறேன்.

--விளையாடும் வெண்ணிலா....

4 கருத்துகள்:

pichaikaaran சொன்னது…

ஒன்றுக்குமே உதவாது என்பதை முதலில் உணர்த்திய சம்பவம் அங்கேதான் நடந்தது. "

என்ன நடந்தது... சீக்கிரம் சொல்லுங்க

dondu(#11168674346665545885) சொன்னது…

தயவு செய்து சொற்களுக்கிடையில் இடைவெளி இட்டு தட்டச்சு செய்யவும்.

பத்திகளைப் பிரிக்கவும். அப்போதுதான் கண்களுக்குக் களைப்பின்றி படிக்கவியலும்.

கருப்பு பின்னணியை மாற்றவும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sathish Kumar சொன்னது…

//பார்வையாளன் சொன்னது…
ஒன்றுக்குமே உதவாது என்பதை முதலில் உணர்த்திய சம்பவம் அங்கேதான் நடந்தது. "
என்ன நடந்தது... சீக்கிரம் சொல்லுங்க//

சொல்லிடுவோம் பார்வையாளரே...!

Sathish Kumar சொன்னது…

//dondu சொன்னது…
தயவு செய்து சொற்களுக்கிடையில் இடைவெளி இட்டு தட்டச்சு செய்யவும்.
பத்திகளைப் பிரிக்கவும். அப்போதுதான் கண்களுக்குக் களைப்பின்றி படிக்கவியலும்.
கருப்பு பின்னணியை மாற்றவும்.
வாழ்த்துக்கள்.//

தங்களின் "டோன்டூஸ்/டூஸ் அறிவுரையை பின்பற்றினேன்...
தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா...!

கருத்துரையிடுக