வெள்ளி, 13 மே, 2011

தமிழன் கையிலெடுத்த சாட்டை...!


"தமிழ்நாடு"-இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இம்மண்ணில் வெடித்து கிளம்பியது போன்று மொழி எழுச்சியும், திராவிடச் சிந்தனையும், பகுத்தறிவு வாதங்களும், கடவுள் மறுப்பு இயக்கங்களும் துளிர்த்து வேர் விட்டிருக்கிறதா என்றால், அதற்கு பதிலுரைப்பது கடினமே. தேசமே மத, சாதிச் சண்டைகளில் மிருகத் தனமாய் உலா வந்த தேதிகளில் இங்கே "கடவுளா...எங்கே என் கண் முன் வரச் சொல்..." என்று பொங்கியும், அரிசன ஆலயப் பிரவேசங்கள் நிகழ்த்தியும் மற்றோருக்கு புத்தியுரைத்தது இந்த பகுத்தறிவு புரட்சி பூமி. ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அணை கண்டு நீர் தேக்கி முப்போகம் விளைத்த சோழ மாமன்னனிலிருந்து , உலகை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகள் சர் சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன், அப்துல் கலாம் மற்றும் வீரர்கள், கலைஞர்களான விஸ்வநாதன் ஆனந்த், ஏ. ஆர். ரஹ்மான் வரை என்று இந்த அறிவார்ந்த சமூகம் இந்த தேசத்திற்கு மட்டுமின்றி பாருக்கே கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற கொடைக்கு நிறுத்தற்குறிகளே இல்லை எனலாம். 




ஆனால் இப்படிப்பட்ட ஒரு அறிவாற்றல் செறிந்த சமூகத்தை ஆள  ஐயா காமராசரைத் தவிர்த்து நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் எந்த விதத்தில் நம்மையும் நம் வல்லமையையும் அடையாள படுத்தும் வண்ணம் இருந்திருக்கிறார்கள் என்றால், எவரும் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. அறிஞர் அண்ணாவின் கால்கள் கோட்டையில் பதிந்த தினத்திலிருந்து இன்று வரை தேசியக் கட்சிகளை வேரறுத்து திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றியே அழகு பார்த்து வருகிறது எமது தாய்த் தமிழ் பூமி. மிக குறுகிய காலத்திலேயே காலன் கவர்ந்து கொண்டான் அண்ணாவை.  "அறுபதுகளின் இறுதிகளில், ஒரு இளைஞனின் செய்கைகள் மாநிலத்தையே உற்று நோக்க வைத்தன, அந்த இளைஞன் ஒரு சக்திமிக்க, மாநிலத்தின் எதிர்கால அரசியல் சின்னமாக கருதப்பட்டான். இளைஞர் பட்டாளங்களை தன் பக்கம் காந்தமாக இழுத்து கட்டி வைத்திருந்தான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று தன் அனைத்து திறமைகளையும் நூதனமாய் கொள்ளைகள் அடிப்பதிலும், அண்ணா தோற்றுவித்த கட்சியை குடும்பம் கூறு போட இடம் கொடுத்ததிலும் செலவிட்டு அவைகளை தொலைத்தே விட்ட கருணாநிதி தான் அந்த இளைஞன்" என்று என் நண்பன் ஒருவனின் தந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. இவருக்கு பின் வந்த எம்.ஜி.ஆரோ நோவுற்றே மறித்துப் போனார். ஜெயலலிதா அம்மையாரோ இம்மண்ணின் நாடித்துடிப்பான ஏழை விவசாயிகளை நெருங்கவே முயலவில்லை இத்தனை வருடங்களில். 

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இரட்டை ஆட்சி முறையே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். எவரும் இங்கே தம் நற்செயலுக்காக வென்று வருவதில்லை. மாறாக, முந்தைய ஆட்சியாளரின் செயலற்ற தன்மை, ஒழுக்கம், நேர்மை சிறிதுமற்ற, களவுகள் நிறைந்த ஆட்சியால் விளைந்த தோல்வியே மற்றவரை வெற்றி பெற வைக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தேசியக் கட்சியை மண்ணை கவ்வ வைத்த தலைவர்களைப் போன்று இன்று இந்த இரு திராவிட கழகங்களை தூக்கி எறிய வல்ல ஆற்றல் கொண்ட எவரும் மக்களால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மக்களும் தம் வாழ்க்கை குறைகளை நிவர்த்தி செய்யும் வல்லமை வெள்ளித் திரைக்கே இருப்பதாக அதைச் சுற்றியே தம் அரசியலறிவை வளர்க்கிறார்கள். மிக அருகில் இருக்கும் மாநிலமான கேரளத்திலும், யூனியன் பிரேதசமான புதுச்சேரியிலும் இத்தேர்தலில் வழக்கமான முடிவுகளை தவிர்த்து மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய மக்களின் எண்ணவோட்டமும், மனவோட்டமும் என்று நமக்கு வரப் போகிறது என்று தெரியவில்லை. 

ஆனாலும், ஒரு பெரு மகிழ்ச்சி தமிழக தேர்தல் முடிவுகளிலிருந்து. மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்; இலவசங்களுக்கு விலை போகிறார்கள் என்பன போன்ற ஊடக செய்திகள் எந்த ஒரு கட்சி சார்பற்ற, வளர்ச்சி நோக்குற்ற தமிழரின் நெஞ்சை பிளந்தே இருக்கும். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அறிவை விற்று விலை போனவர்களாகவும், தூக்கி எறியப்பட்ட இலவசங்களை பொறுக்கிச் செல்லும் பிச்சைக்காரர்களாகவும் தம்மை கருதியிருந்த அரசியல்வாதிகளை, பெருமளவில் வெளியே வந்து வாக்களித்து, தங்களின் விரல் நுனி தீர்ப்பால் அவர்களின் எண்ணத்தை தம் பாதகைகள் கொண்டு அடித்திருக்கிறார்கள். எழுபத்து எட்டு சதவிகித வாக்குப்பதிவும், அதை ஒட்டிய தீர்ப்பும் இதையே கட்டியம் கூறுகின்றன.


இதோ மறுபடியும் ஒரே மாதிரியாக சுழலும் தீர்ப்பு. இம்முறை கலைஞரின் தவறுகள் ஜெயலலிதாவை அரியணை ஏற்றி இருக்கின்றன. விலைவாசி என்பது எந்தக் காலத்திலும் இறக்கத்தை சந்திக்கப் போவதில்லை, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை "உலகமயமாக்கல்" உதவியுடன் மெல்ல, மெல்ல மக்களும் அடைந்து கொண்டே வருகிறார்கள்.  ஆதலால், வெற்று துவேஷ  கோஷங்களையும், இலவச வாக்குறுதிகளையும் மட்டும் நிறைவேற்றி, வாக்களித்த மக்களை மறுபடியும் மூடர்கள் ஆக்காமல், நல்ல பயனுள்ள திட்டங்கள் வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், அவர்களின் மேலான தீர்ப்பு தவறல்ல என்று நிரூபிக்க வேண்டும். 

இலவசங்கள் தேவைதான். ஆனால் அவை நம் அரசியலர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சொந்த பணத்தில் வாரி இறைப்பதைப் போல் பீற்றிக் கொள்ளும் தொலைக்காட்சியையும் , மடிக்கணிணியையும் இன்னும் பல மனமகிழ் பொருள்களையும் குறிப்பதல்ல. இவற்றை எல்லாம் கொடுத்து நொடி நேர தனிமனித சந்தோஷத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது மட்டுமே அவர்கள் நோக்கம்.  மாறாக, நமக்குத் உண்மையிலேயே தேவையான இலவசங்கள் இவைகளே...
  • மக்கள் நோய்களற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ வழி வகை செய்ய வேண்டும். பணம் நோய் தீர்க்கும் மருந்தாய் இருப்பதை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள் புனித சேவைத் தளங்களாய் உருப் பெறல் வேண்டும். 
  • இளம் தொழிலதிபர்களையும், ஆராய்ச்சி மாணவர்களையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். இலவச பயிற்சியும் தேவையான பொருளுதவிகளும், ஆலோசனைகளும் நல்ல பயன்கள் தரும் வகையில் வடிவம் பெற வேண்டும். இதற்கான துறைகள் ஏற்கனவே இருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும் இவற்றின் செயல்பாடுகள். 
  • உலகின் அசுர வளர்ச்சிக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி கடைக்கோடி தமிழனுக்கும் இலவசமாய் கொடுக்கப்பட வேண்டும்.
  • சுகாதாரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 
மேலும், 
  • மக்களை உயர்ந்த பண்புகளுடைய மனிதர்களாய் மாற்றம் பெற செய்ய வேண்டும். மாசு மருவற்ற சமூகம் செய்ய வேண்டும். 
  • சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கழிந்தும் எந்த அடிப்படை வசதிகளிலும் (குடிநீர், உணவு, உறைவிடம், மின்சாரம்) தன்னிறைவை அடையாத நிலை களையப்பட வேண்டும். 
  • ஒழுக்கம், தூய்மை இவற்றை பேணி உழைக்கத் தயங்காத மக்களை உருவாக்க முனைதல் வேண்டும். 
  • விவசாயம் முடங்கியே போய் விட்டது. நூறு ஆண்டு கால அண்டை மாநிலகளுடனான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளால் தரிசாகிப் போன அவர்களின் வாழ்க்கையை உயிர் பெறச் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் தொழில் தொடங்க உலக/இந்திய நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்து அந்நகரங்களை தொழில் நகரங்களாகவும், கல்வி நகரங்களாகவும் மாற்ற வேண்டும். 
  • சென்னை நகர் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளும் தொழில் மயமாதல் வேண்டும். 
இவைகள் யாவும் ஒரு ஆட்சியாளர் முன் உள்ள சவால்கள் அல்ல. இவைகள் ஒரு ஆட்சியாளரின் பணிகளில் சில. 

சரி, வென்றவரின் கடமைகளை பார்த்தாகி விட்டது. தோற்ற கலைஞர்....? எந்த காலத்தில் தமிழகம் சிறப்பான எதிர்க்கட்சியை கண்டிருக்கிறது. அப்படி என்றால்....!!?? அவருக்குத்தான் அவருடைய முழு நேர தொழிலான திரைப்படம் பார்த்தல், கதை வசனம் எழுதுதல், பாராட்டு விழாக்களில் பாராட்டு மழைகளில் நனைதல் என்று பல தலை போகிற அலுவல்கள் இருக்கின்றதே. மக்களே...., ஜாக்கிரதை,  மிகுந்த எச்சரிக்கையாய் இருங்கள். இனி பல பொன்னர் சங்கர்களும், பெண் சிங்கங்களும், இளைஞன்களும் சீறி வெளிவரக் கூடும். 

(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

30 கருத்துகள்:

Unknown சொன்னது…

//இவைகள் யாவும் ஒரு ஆட்சியாளர் முன் உள்ள சவால்கள் அல்ல. இவைகள் ஒரு ஆட்சியாளரின் பணிகளில் சில//
well said! :-)

மகேந்திரன் சொன்னது…

அன்பு நண்பர் சதிஷ்குமார்

நல்ல ஒரு அரசியல் சிந்தனை உங்கள் படைப்பில் மிளிர்கிறது.
பெருந்தலைவர் காமராசர் நல்ல அரசியல்வாதி மட்டுமல்ல
தொலைநோக்கு சிந்தனை உள்ளவர், விளம்பரங்கள் விரும்பாதவர்.

அவரையும் கேளிசெய்து கைகொட்டி சிரித்தவர்கள்தான் இந்த திராவிட கட்சி
ஆட்சியாளர்கள்.

திராவிட கட்சியை தந்தை பெரியார் ஆரம்பித்த ஒரு சில காரணங்களில் முக்கியமான ஒன்று, அரசியலில் அதாவது நாட்டை ஆளும் அந்த அரசியலில் கட்சியாளர்கள் யாரும் நுழையக்கூடாது என்பது. அதை துச்சமென மதித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர் பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள். அவரை சொல்லி குற்றமில்லை. அன்றைய தினத்தில் இருந்த படித்த இளைஞர்கள் அனைவரும் அவர் பின்னால் இருந்தார்கள்.
அவர் தம்பி தலைமை ஏற்க வா என்று அழைக்கும் போது இப்படிப்பட்ட சுயநலவாதிகள் வருவார்கள் என நினைத்திருக்க மாட்டார் போலும்.

இதோ தேர்தலின் முடிவுகள் வெளியாகிவிட்டது...
கலைஞர் வெளியேறிவிட்டார்.....
முதல்வராகப்போகும் நபர் என்ன செய்யப்போகிறார்..
நீங்கள் சொன்னவற்றை இவர்கள் நிறைவேற்ற்கிரார்களா என்று
பொறுத்திருந்து பார்ப்போம்.

திராவிட கட்சிக் கொள்கைகளை மறந்து, தன் சொந்த விருப்பு வெறுப்புகளை மட்டும் பாராமல் இன்றைய நாட்டின் நிலைமையை
மனதில் கொண்டு நல்லாட்சி அமைக்க வேண்டும் என்பதே, நம் மக்கள் இந்த அளவுக்கு ஓட்டுக்களை வாரிவழங்கி கொடுத்திருப்பதிலிருந்து தெரிகிறது.

அற்புதமான படைப்புக்கு நன்றி.

அன்பன்
மகேந்திரன்

http://ilavenirkaalam.blogspot.com/

Sathish Kumar சொன்னது…

//ஜீ... சொன்னது…well said! :-)//
நன்றி நண்பா...!

Sathish Kumar சொன்னது…

//சொல்லழகு சொன்னது…பெருந்தலைவர் காமராசர் நல்ல அரசியல்வாதி மட்டுமல்ல
தொலைநோக்கு சிந்தனை உள்ளவர், விளம்பரங்கள் விரும்பாதவர்.//


"ஐயா காமராசர் போன்ற தன்னலமற்ற தலைவரை குறைந்தது நம் வாழ்நாளிலாவது காண முடியுமா?" இது என் தந்தையின் ஏக்கமாக இருந்தது, இப்போதும் அது ஏக்கமாகவே இருக்கிறது அவருக்கு. அவரின் அடுத்த சந்ததியான நானும் அதே ஏக்கத்துடன் தான் இருக்கிறேன். எனக்கு இரு விஷயங்கள் மட்டும் விளங்கவே மாட்டேன் என்கிறது நண்பர் மகேந்திரன், "ஏன் சிறிதளவு கூட தூய்மையும், நேர்மையும் இருப்பதில்லை நம் தலைவர்களிடம்..?! அவ்வாறு இருக்கும் மிகச் சிலரையும் (தமிழருவி மணியன்) ஏன் நம் சமூகம் தூரத்தில் வைத்தே தொலைத்து விடுகிறது..?"

அரசியல் சுவடுகளின்றி/துணையின்றி சீர்திருத்தங்கள் நிகழ்வதென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது நண்பர் மகேந்திரன் அவர்களே...! பெரியாரின் தலைமைக்குப் பிறகு எம்மண்ணுக்கு ஒரு இயக்கமாக திராவிடர்க் கழகத்தின் சேவைகள் தான் என்ன...? ஒரு சமூக சேவை அமைப்பாகவோ, அல்லது இயக்கமாகவோ இருந்து கொண்டு மாற்றங்களை காண்பதென்பது எம்மை பொறுத்த வரை மிகக் கடினமானதாகவே தோன்றுகிறது.

நன்றி நண்பரே...!

மகேந்திரன் சொன்னது…

அன்புத் தோழரே,
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை மற்றும்
ஒவ்வொரு சராசரி மனிதனின் ஏக்கமும் கூட.
பெருந்தலைவரை பார்த்தறிந்த காலம் போய்
அவரைப்பற்றி கேட்டறிந்த காலமும் போய் இன்று
அவரைப்பற்றி படித்து தெரிந்து கொள்ளும் தலைமுறை வந்த பின்பு கூட
அவரின் புகழ் ஓங்கி நிற்கிறது.

அன்றைய சமுதாயம் பகட்டையோ பவுசையோ எதிர்பார்க்காததாய் இருந்தது..
அதனால் தலைவர் கக்கன், பெருந்தலைவர் காமராசர், பெரும் அரசியல்வாதி ஜெயப்ரகாஷ் நாராயணன்
போன்ற சுயநலமற்ற, மிகவும் சாதாரணமான தலைவர்கள் வர முடிந்தது..

ஆனால் இன்றோ நாமும் பகட்டை தானே விரும்புகிறோம்??.....
ஒருசிலரை தவிர யார் தமிழருவி மணியனைப் பற்றி நினைக்கிறார்கள் அல்லது குறைந்த பட்சம் அவர் பேச்சையாவது கேட்கிறார்களா? அவர் பேசும் தமிழை வேடிக்கையாய் பார்ப்பவர்களே அதிகம்.

உண்மைதான் அரிசியல் துணையின்றி சீர்திருத்தங்கள் செய்வது கடினம் தான். முதலில் நம்மவர்கள் படிக்கும் பழக்கத்தை பழகவேண்டும். கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தினச் செய்தி நாளேடுகள் வாங்குகிறார்கள். இன்றைய அரசியலை கணிக்கிறார்கள். (அதற்காக அங்கே உள்ளவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் என்று சொல்லவரவில்லை) நம்ம ஊரில் ஆயிரம் வீடு இருந்தால் இருநூறு வீட்டில் தான் பத்திரிகை வாங்குகிறார்கள். இன்றைய நிலையை தெளிவாக புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் எத்தனையோ சீர்திருத்தங்கள் நம் இந்திய திருநாட்டில் இருக்கின்றன, ஆனால் அவைகளுக்கு குறைந்தபட்சம் ஆதரவு கூட நம்மவர்கள் கொடுப்பதில்லை. தனிமனிதனாகவே அதை செய்பவர்கள் தான் இருக்கிறார்கள். உதாரணம் இப்போதுகூட அன்னா ஹசாரே...

திராவிட கட்சியினர் கலைஞரின் உரைகளை வழிமொழிவதொடு சரி வேறு எதுவும் செய்வதில்லை. வேண்டுமென்றால் பிரச்சாரம் என்ற பெயரில் மதங்களை தாக்குவார்கள் அவ்வளவுதான்...

நானும் ஒரு சாதாரண மனிதனாக தமிழனாக ஒரு சீரிய கொள்கையுடைய கட்சி வரும் என்றுதான்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
காத்திருப்போம்!!.....

(குறிப்பு: நான் உங்கள் தங்கை ஷீலாவின் வலைத்தள நண்பன். அவர் சொல்லித்தான் உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடருங்கள்....)

அன்பன்
மகேந்திரன்.

Sathish Kumar சொன்னது…

அப்படியா...! மிக்க நன்றி மகேந்திரன்.

ஆனந்தி.. சொன்னது…

oru vari kooda padikkalai..appaala varen...;))))

ஆனந்தி.. சொன்னது…

ஹாய் shivaaji :-))) எப்படி இருக்கீங்க??

ஆனந்தி.. சொன்னது…

ம்ம்...இந்த போஸ்ட் படிச்சேன்...பயங்கரமா ஆச்சர்யகூட பட்டேன்...மொழிவளம் பயங்கர ஸ்ட்ராங் சதீஷ் உங்களுக்கு...பிரபுன்னு ஒரு பதிவரின் போஸ்ட் டும் ரொம்ப பிடிக்கும்..இந்த அழகான மொழிவளத்துக்கு..அடுத்து உங்கள் பதிவுகளில் இன்னைக்கு பார்த்தேன்...அடிச்சு விளையாடுங்க..சூப்பர்..

ஆனந்தி.. சொன்னது…

ஓகே...கலைஞர் கிளம்பிட்டார்..அம்மையார் கம்மிங்...:)) இது எதிர்பார்த்தது தானே சதீஷ்..:))) அண்ணா,காமராஜ் கால அரசியலையும்...இப்போ நடக்கும் கூத்தையும் கம்பேர் பண்றதே ஒரு வகையில் அபத்தம் தான்...நம் தமிழகத்தின் சாபம் இந்த ரெண்டு திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்று இல்லாமல் போனது...:((

ஆனந்தி.. சொன்னது…

கேரளாவில் மார்சிஸ்ட் ஸ்ட்ராங் ..அது தவிர அங்கே பந்த் அதிகமாய் நடக்கும் ...எந்த எதிர்க்கட்சி பந்துக்கு அழைப்பு விடுத்தாலும் கூட அந்த போராட்டம் ஒரு வகையில் மக்களிடத்தில் அதிக கூர்ந்து கவனிக்க படும்....இப்போ எண்டோ சல்பானுக்கு விடுத்த முழுஅடைப்புக்கு கூட ஒரு ஜஸ்டிபை பண்ற தார்மீக பொறுப்புகளை கட்சிகளும்...மக்களும் உணரும் புரிதல் கேரளாவில் ஜாஸ்தி...இங்கே எந்த பந்த் உருப்படியா நடந்திருக்கு சதீஷ்....தார்மீக கோவத்தை நியாயமான போராட்டங்களுக்காக காண்பிக்க உத்தேசிக்கும்போதே வேற ஒரு குரூப் கலைச்சு விடும் அல்ப அரசியலில் தானே தமிழகம் ஓடிட்டு இருக்கு....

ஆனந்தி.. சொன்னது…

தெலுங்கானா எடுத்துகிட்டால் கூட திரும்பி பார்க்க வைத்த எழுச்சி இல்லையா...நம்ம ஊரில் அது தான் மிஸ்ஸிங்...அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த திராவிட கழகங்களை நாம ஒண்ணுமே பண்ண முடியாது சதீஷ்...

ஆனந்தி.. சொன்னது…

இன்னும் அஞ்சு வருஷம் பார்க்க தானே போறோம்...முக்கால் வாசி சொத்தை கருணா குடும்பம் அடிச்சுட்டு போயிருச்சு...இன்னும் மீதி இருப்பதை சசியக்கா குடும்பம் கிளப்பிட்டு போய்டும்...வழக்கம்போலே அடுத்த தேர்தலில் ஜெயா மேலே கோவப்பட்டு உதயசூரியனுக்கு குத்துவோம்...ஹீ ஹீ...தமிழன்டா..:))))

ஆனந்தி.. சொன்னது…

அப்புறம் தமிழருவி மணியன் பத்தி ஒரு பின்னூட்டம் படிச்சேன் உங்க பதிவில்...: நல்லா பேசுறாரு மணியன்...:)) ஆனால் அவரின் ஒரு பேட்டியில் இலவசங்களை பற்றி சொல்லும்போது அம்மா ரொம்ப educated ஆ லேப்டாப் வரை யோசிப்பது வளர்ச்சி தான்னு சீரியஸ் ஆ சொன்னதை பார்த்தவுடனே....ஹீ ஹீ..சாரி தமிழருவி ..உங்க மேலே பெரிய அபிப்ராயம் இல்லை...:(((

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ் நீங்க சொன்ன வளர்ச்சி யோசனைகள் எல்லாம் நிஜமாகவே அட்டகாசம்...ஆனால் அப்துல் கலாம் சொன்னது போலே கனவு மட்டும் காணலாம் அதை வச்சு...:)))))

ஆனந்தி.. சொன்னது…

குடும்ப அரசியல் தான் இப்போது திராவிட கழங்களின் ஸ்டைல்...இதை வச்சு மத்த கட்சிகள் கூட கெட்டு போய்கிட்டு இருக்கு :(( ராமதாஸ் மாமா அன்புமணி சித்தப்பாக்கு மத்திய அமைச்சரவையில் சீட் வாங்கிரணும்னு கூஜா,சொம்பு ன்னு மாறி மாறி தி.மு.க கும்...அம்மாக்கும் தூக்கினதை எந்த தமிழனும் மறக்க மாட்டான்..:)))

ஆனந்தி.. சொன்னது…

அடுத்து விஜயகாந்த் ....என்னத்தை சொல்ல..தலையில் அடிச்சுக்கிறதை தவிர...அரசியல் நாகரிகம் சிறிதும் தெரியாத ஒரு ஆளையும் மக்கள் தூக்கி விட்டு இருக்காங்கனால் ..தி.மு.க மேலே இருக்கும் அதிருப்தி மட்டுமே காரணம் என்பதை தவிர வேற என்னத்த சொல்ல...

ஆனந்தி.. சொன்னது…

மோடி..நிதிஷ் கிட்டே எல்லாம் மம்மி ரெண்டுமாசம் workshop பண்ணிட்டு வந்தால் நல்லா இருக்கும் :))) இலவசங்களே எதுக்குன்னு தான் தெரியலை...இதை ஆரம்பிச்சு வச்ச கலீஞ்சரை வரலாறு சத்தியமா மன்னிக்காது..ஆக்க பூர்வ திட்டங்களை போட்டு கொடுத்துட்டு இதுல இருந்து நீ உருப்படுன்னு சொல்றதை விட்டுட்டு...மிக்சி ,கிரைண்டர் ன்னு...ம்ம்...முட்டாள் தனமான மக்கள் இன்னும் கேனத்தனாமாகிட கூடாது...ஆனால்...ஏமாறுபவன் இருக்கிறவன் வரை..ஏமாற்றுபவனை ஒண்ணுமே செய்ய முடியாது..நம்ம முதுகில் இருக்கும் கறையை போக்க சீரியஸ் ஆய் மக்கள் யோசிக்க வேண்டிய தருணம்...பார்ப்போம்...என்னதான் அம்மா ஆணி பிடுங்க போறாங்கன்னு...:))))

ஆனந்தி.. சொன்னது…

சரி..ஏதாவது சான்ஸ் இருக்கா தமிழகம் உருப்பட....ம்ம்..அம்மாக்கு இது சரியான நேரம்...மம்மியின் முதல் interview வெகு சுவாரஸ்யம்..வெகு இயல்பாய் ..நாகரிகமாய் எந்த பில்ட் அப் பும் இல்லாமல் இருந்த எளிதான பேச்சு கவரத்தான் செய்ததது...ஆனால் தலைமை செயலகம் மாற்றம்...புது சட்டசபை கட்டிடத்தை நிரகரிச்சது எல்லாம்...ம்ம்...மம்மி...ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க...:-)))))))

ஆனந்தி.. சொன்னது…

மம்மியின் முதல் சாதனை...சமச்சீர் கல்வியில் கருணாநிதியை பற்றிய பாடக்குறிப்புகளை உடனே தூக்க சொன்னது....வாழ்க தமிழகம்...வளர்க திராவிட கட்சிகள்....:-)))))))

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…மொழிவளம் பயங்கர ஸ்ட்ராங் சதீஷ் உங்களுக்கு.//
வாங்க ஆனந்தி...! வாழ்த்துக்கு ரொம்ப நன்றி...!

Sathish Kumar சொன்னது…

//முழுஅடைப்புக்கு கூட ஒரு ஜஸ்டிபை பண்ற தார்மீக பொறுப்புகளை கட்சிகளும்...மக்களும் உணரும் புரிதல் கேரளாவில் ஜாஸ்தி...இங்கே எந்த பந்த் உருப்படியா நடந்திருக்கு சதீஷ்....தார்மீக கோவத்தை நியாயமான போராட்டங்களுக்காக காண்பிக்க உத்தேசிக்கும்போதே வேற ஒரு குரூப் கலைச்சு விடும் அல்ப அரசியலில் தானே தமிழகம் ஓடிட்டு இருக்கு....//

100% சரி. தமிழர்கள் பல விஷயங்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள். கட்சி, சாதி, மதம், சினிமா கவர்ச்சி என்று இவைகளை தவிர்த்து தொலைநோக்கு தன்மையுடன் அரசியலை பார்ப்பதில்லை. இவைகளால் பலவாறாக பிரிந்து கிடக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனையையும் மக்களாக முன்னெடுப்பதில்லை. கட்சிகள் முன்னெடுக்கும், கட்சி வாரியாகவே ஆதரவிருக்கும், இலங்கைப் பிரச்சினை உட்பட. இச்செய்கைகளால் தூய தியாகங்கள் தூக்கி எறியபட்டுவிடும், முத்துகுமார் மற்றும் இன்னும் பலரின் மரணங்கள் போல. மொத்தத்தில் நாம் நம் நிலை உணர்வதிலும், திருத்த முன் வருவதிலும், அதற்காக ஒன்றிணைவதிலும் என்று எல்லாவற்றிற்குமே தயங்குகிறோம்/தயாரில்லை. மூன்றுமே மாற்றத்திற்கான முதல் மூன்று படிகள்.

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
அடுத்து விஜயகாந்த் ....என்னத்தை சொல்ல..தலையில் அடிச்சுக்கிறதை தவிர...அரசியல் நாகரிகம் சிறிதும் தெரியாத ஒரு ஆளையும் மக்கள் தூக்கி விட்டு இருக்காங்கனால் ..தி.மு.க மேலே இருக்கும் அதிருப்தி மட்டுமே காரணம் என்பதை தவிர வேற என்னத்த சொல்ல...//

உண்மை. அரசியல் தன் நாகரீகத்தை காட்டியது உலகத்தில் வெறும் மிகச் சில தருணங்களில் தான். காந்தியின் சத்தியாகிரகத்தை துன்புறுத்தி கொல்ல முயன்ற ஆங்கிலேயர் எந்த அரசியல் நாகரீகத்தை பின்பற்றினர். நாம் விஜயகாந்தின் அரசியல் நாகரீகம் பற்றி கவலைப்படத் தேவை இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம் . அவர் எதிர்க்கப் போகும் தலைவர்களிடம் என்ன நாகரீகத்தை கண்டு விட்டோம் நாம். அவரின் வருகை அந்த மூன்றாவது இடத்தை பெரும் வல்லமையை பெற்றிருப்பின் நல்லது தானே. சில நன்மைகள் நடந்தால் சரி.

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…ஆனால் தலைமை செயலகம் மாற்றம்...புது சட்டசபை கட்டிடத்தை நிரகரிச்சது எல்லாம்...ம்ம்...மம்மி...ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க...:-)))))))
மம்மியின் முதல் சாதனை...சமச்சீர் கல்வியில் கருணாநிதியை பற்றிய பாடக்குறிப்புகளை உடனே தூக்க சொன்னது....வாழ்க தமிழகம்...வளர்க திராவிட கட்சிகள்....:-)))))))//

Haa...haaa...! அரசியலில் தேசிய நீரோட்டங்களில் உள்ள கட்சிகள் எந்த ஒரு பிரச்சினையையும் கட்சி சார்ந்த சுயநல கண்ணோட்டத்துடன் பார்ப்பதை எல்லா பகுதிகளிலும் இப்போதும் நாம் காண்கிறோம். சுயநலங்கள் பிரச்சினைகளை மையப் படுத்தியே இருக்கும். அது பெரும்பாலும் தேசிய கட்சிகள் என்கிற அழுத்தம் கொடுக்கிற நிர்பந்தத்தாலேயே என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பிராந்திய கொள்கைகளை, தேவைகளை முன்னிறுத்தி மக்கள் எழுச்சியால் பிறந்த பிராந்திய கட்சிகளின் செயல்பாடுகளும் தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும். காலப் போக்கில் இக்கட்சிகள் தாம் உருவான காரணங்கள், கொள்கைகள் மறந்து, பின்னர் பிரச்சினைகள் அடிப்படையில் முடிவெடுப்பதை தொலைத்து விடுகின்றன. இங்கே முடிவுகள் அதன் தலைவர்களுடைய சுயநலத்தை மையப் படுத்தியே இருக்கின்றன, பிரச்சினைகளை மையப்படுத்தி இருப்பதில்லை. மக்களும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று இவர்களின் இந்த நிலையை கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலை நீடிப்பது மிகவும் ஆபத்தானது.


விவகாரம்: சட்டசபை கட்டடத்தின் இடப் பற்றாக்குறை. நீங்களே பாருங்க, இப்போ சட்டசபை மறுபடியும் கோட்டைக்கு மாற்றப் படுகிறது, முதல்வர் இடம் மாற்ற முடிவிற்கு அவரின் சுய விருப்பு வெறுப்பே காரணம் (கலைஞரால் கட்டப் பட்டது) என்பதை நாமே நன்கு அறிவோம். இங்கே சட்டசபை இடப் பற்றாக்குறை என்கிற பிரச்சினையை அவருடைய சுயநல எண்ணம் முற்றிலும் மறைத்தேவிட்டது.

Sathish Kumar சொன்னது…

@ஆனந்தி
You expressed your views seriously in a humorous way. Kudos Ana...! என் கருத்துக்கள் முரண்பட்டிருந்தால் மன்னிக்கவும். இந்த அளவு நேரம் ஒதுக்கி கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஆனந்தி...! பிரபு...அவருடைய ப்ளாக் போறேன் கூடிய விரைவில்.

Sathish Kumar சொன்னது…

//குணசேகரன்... சொன்னது…
nice post...//

Welcome, Guna...! Thanks for your invaluable comments.

மதுரை சரவணன் சொன்னது…

கட்டுரை நன்றாக வந்துள்ளது.. வாழ்த்துக்கள்

Sathish Kumar சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்...!

ஆனந்தி.. சொன்னது…

// நாம் விஜயகாந்தின் அரசியல் நாகரீகம் பற்றி கவலைப்படத் தேவை இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம் //

ஐயோ..சதீஷ்...அடுத்த வாட்டி அவர் யாரையாவது கும்மு கும்முன்னு கும்முவதை நாம நல்லா தெளிவா..அழகா..நீட் டா..செம ஆக்ஷனோட ..நாம பார்க்க செய்யும் அற்புதமான அந்த நாகரிகத்தையாவது அவரிடம் நாம எதிர்பார்க்கலாமா..:))

ஆனந்தி.. சொன்னது…

this is prabu's blog sathish..
http://vasagarthevai.blogspot.com/

கருத்துரையிடுக