திங்கள், 10 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-2)

அந்த கொரிய பணிப்பெண் என்னுடைய எதிர்வினையின் வேகத்தையும், அதனால் உண்டான வேதனையையும் கூட பொருட்படுத்தாமல், முன்பை விட மிகுந்த புன்னைகையுடன் மறுபடியும் என் தொடை அருகே கையை கொண்டு வந்து என்னை கீழே தலையை குனிந்து பார்க்கும்படி செய்கை செய்தார். குனிந்து பார்த்தேன். அவர் சுட்டிய திசையில் சமையல் வாயு செல்லும் குழாயும், வால்வும் இருந்தது. பணிப்பெண் என் தொடையருகே இருந்த அந்த வால்வை திறக்கத்தான் தனது கையை கொண்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு அப்போதுதான் மண்டையில் உரைத்தது. பச்சை வாத்து மாமிசத்தை கொண்டு வந்து மேஜை நடுவில் தோசைக்கல் போன்ற ஒன்றில் கொட்டி விட்டு சென்றதாக சொன்னேனே..., அது மாதிரி அல்ல அது தோசைக்கல்லே தான். மாமிசத்தை பதமாய் அவரவரே புரட்டி, புரட்டி எடுத்து உண்பதுதான் இந்த ரெஸ்டாரெண்டின்   வழக்கம் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது. ஒரு வித குற்ற உணர்ச்சியில் தயக்கத்துடன் அந்த பணிப்பெண்ணை நோக்கினேன், அவர் இப்போதும் சிரித்துக்கொண்டே அதே செய்கையை செய்து விட்டு நகர்ந்தார்.

எனது அருகில் அமர்ந்திருந்த அப்புகுட்டியார் நடந்ததை எல்லாம் கவனித்துவிட்டார் என்பது 'அசிங்கபட்டான் ஆட்டோக்காரன்' என்கிற ரீதியிலான அவரது பார்வையிலையே விளங்கியது. நம் அப்புக்குட்டி ஒருவரை நக்கலடித்து நாறடிப்பதில் படு கில்லாடி, யாருக்கும் சளைத்தவரில்லை.  "கண்டவுடன் கன்னிகளை வீழ்த்தும் கட்டழகு காமரூப சுந்தரனா என்ன? நாம் தான் தினமும் நம் திருமுகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கிறோமே...! இரண்டு செகண்டுக்கு மேல நமக்கே ஒரு மாதிரி தானே இருக்கு..!" என்று படு நக்கலான கமெண்டுடன் ஒரு அஷ்டகோணல் சிரிப்பையும் வீசினார் அப்புக்குட்டி சிரத்தையாக.  நானும், இருக்கட்டும் அரிசிமூட்டை...., எனக்கு ஒரு சமயம் கிடைக்காமலா போய்விடும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன். 

ஒவ்வொவொரு மேஜைககும் தனித்தனி பிரத்யேக பணிப்பெண்கள். எங்கள் மேஜைக்கு எனது கை அவசரப்பட்டு அடித்த அதே பணிபெண் தான்.  சோஜு பாட்டில்களையும், இறால்களையும் ப்ளேட்டில் எடுத்து வந்து மேஜையில் வைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு தடவை அவர் அருகில் வரும்போதெல்லாம் அப்புக்குட்டி என்னை பார்த்து கண்ணடித்து வெறுப்பேற்றி கொண்டே இருந்தார். பார்ட்டி ஆரம்பமானது. முதலில் துறைத்தலைவர் எழுந்து புதிதாக பணியில் சேர்ந்தவர்களை வரவேற்று பேசிவிட்டு, சோஜு பாட்டிலை திறந்து நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தார். என்னருகில் இருந்த அரிசிமூட்டை "அவர் உன்னை நோக்கித்தான் வருகிறார், கொரிய பழக்கத்தின் படி, நீ எழுந்து நின்று அந்த கோப்பையில் அவர் ஊற்றும் சோஜுவை வாங்கி அவர் முன்பே முழுக்க பருக வேண்டும், மறுத்துவிடாதே! அனைவரும் தவறாக எடுத்துக் கொள்வார்கள்", என்று பெரிய குண்டை தூக்கி போட்டது.  "நான் மதுவை தொட்டது கூட இல்லை என்று ஏற்கனவே உன்னிடம் கூறினேன் அல்லவா..." என்று அவருக்கு பதில் அளிக்கும் முன்பே துறைத்தலைவர் பெருத்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் என்னை அடைந்தே விட்டார்.

நான் எழுந்து நின்றேன் ஆனால் வெறுங்கையுடன். என்னிலையை அவரிடம் விளக்கினேன். அவர், "அப்படியா, மது அருந்தும் பழக்கமில்லாதவரா நீங்கள்? என்னை மன்னியுங்கள், வேறு என்ன சாப்பிடுவீர்கள்? " என்று என்னை கேட்டார். நான் ஒரு கோக் என்று கூறினேன். "இந்தியர்கள் பெரும்பாலும் மாமிசமும் உண்பதில்லை என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். நீங்கள் எப்படி?", என்று நான் மறந்து போய் இருந்த வாத்து மாமிசத்தை அவரே நல்ல வேலையாக ஞாபகப்படுத்தினார். ஆமாம்..ஆமாம்... நான் சிக்கனை தவிர வேறு புலால் உணவை உண்டரியாதவன் என்று எடுத்துரைதேன். "இந்த ரெஸ்டாரெண்டில் அது கிடைக்க வாய்ப்பில்லை, சரி நான் ஏற்பாடு செய்கிறேன்", என்று நகர முயன்றவரை, நமது அப்புக்குட்டியார், மதுகோப்பையும், கையுமாய் வழி மறித்தார். அட அசிங்கம் புடிச்ச அரிசிமூட்டை...!  மதுப்பழக்கத்தை கை விட்டு விட்டதாக கூறிவிட்டு இப்படி  கண்டு கொள்ளாமல் போறவரை துரத்தி போய் தண்ணி வரம் கேட்குதே....., இதை எந்த வகையில் சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டேன்.

தலைவர் நிரப்பிய கோப்பையை, நாம் நம் கோவிலில் தீர்த்தம் வாங்கும் போது வலது கை முட்டியை இடது கையினால் பிடித்து பவ்யமாய் வாங்குவோமே அதே மாதிரி வாங்கி, அப்படியே அவர் முன்பே ஒரே மடக்கில் உள்தள்ளினார் அப்புக்குட்டி.  தள்ளிவிட்டு ஏதோ போர்முனைக்கு சென்று திரும்பிய வீரனைப் போல் ஒரு பெருமித பார்வையையும், பதினைந்து சென்டிமீட்டருக்கு சற்றும் குறையாத இளிப்பையும் என்னை நோக்கி வீசினார்.  பின் அதே கோப்பையை துறைத்தலைவர் கையில் கொடுத்து, அப்புக்குட்டி ஊற்ற,  தலைவர் அதே மாதிரி ஒரே மடக்கில் சரக்கை உள் தள்ளினார்.  இருவரும் ஏதோ உலகில் யாருமே செய்ய முடியாத அதிசய அற்புதத்தை நிகழ்த்தியதைப் போல் ஒரு அட்டகாச புன்னகையை அனைவருக்கும் செலுத்த, எனக்கா... கொட்ட கொட்ட விழித்திருந்து தாடி தெய்வமான "வீராசாமியின்" பேட்டியை டி.வி.யில் பார்ப்பது போல் டரியலாய் இருந்தது.


மறுபடியும் மூன்று முறை தனது கோப்பையை துறை தலைவர் மூலம் நிரப்பி, பின் தன் பெரிய பிரம்மாண்ட கீழ்தேக்க தொட்டியில் நீர் இறக்கம் செய்துவிட்டு, விரிய விரிய சிரித்துக் கொண்டே காண்டாமிருக ஏப்பத்துடன் வந்து அருகில் அமர்ந்தார். நான் ஒன்றுமே சொல்லவில்லை அவரே தொடங்கினார். "கொரிய கலாச்சாரப்படி வயது மூத்தவர்கள் நம் கோப்பையில் மதுவை ஊற்றினால் அதை 'பாட்டம்ஸ் அப்' செய்து குடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவர்கள் பெரிதும் உளம் மகிழ்வர்" என்று லெக்சர் வேறு எடுத்தது அரிசிமூட்டை.  மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாக அவர் சொன்னதைப்பற்றி கேட்டதற்கு, "ஆமாம் ரெண்டு நாளாக தொடவே இல்லை" என்று கண்ணை சிமிட்டி மறுபடியும் அஷ்ட கோணலாய் இளித்தார். பின் அருகில் மஞ்சளும், சிவப்பும் என்று பல வண்ணங்களில் இருந்த பெரிய பெரிய இறால்களை அப்படியே அள்ளி, பானையில் புளியை திணிப்பது போல வாயில் திணித்தார்.  பச்சை வெண்டைக்காயை கடிக்கும் ஓசை எழவே நான் விவரம் கேட்கும் தொனியில் புருவத்தை உயர்த்தி கேள்விக்குறியை கண்களில் வைத்தேன். "இது செமி குக்ட் பிரான், கிட்டத்தட்ட பச்சை இறால் தான்",  என்று சராமாரியாக குண்டு மழை பொழிந்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒவ்வொவொரு மேசையாக சென்று வாங்கி குடிப்பதும், பின் ஊற்றிக்கொடுப்பதுவுமாகவே இருந்தார். தூரத்தில் என் சக பெண் தோழியர்கள் ஏற்கனவே வெளிறி இருக்கும் தங்கள் நிறத்தை குடித்து குடித்து சிவப்பேற்றி கொண்டிருந்தார்கள். 

எனக்காக வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொண்டு வரப்பட கோக்கும், சிக்கனும் பணிப்பெண்ணால் எனக்கு பரிமாறப்பட்டது. உண்ண எத்தனிக்கும் போது 'மிஸ்டர் மூன்' வந்து என்னருகில் அமர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.  பார்ப்பதற்கு கம்பி மத்தாப்புக்கு சட்டை, பேன்ட் அணிவித்தது போல் இருப்பார். ரொம்ப நல்ல மனிதர். கொரியர்கள் இந்தியர்களை பற்றி கூறும் முதல் இரண்டு நல்ல விஷயங்கள் மகாத்மா காந்தியும், இந்தியர்களின் கணித திறமையும் ஆகும். அடுத்து அவர்கள் கேட்பதெல்லாமே, இந்நூற்றாண்டிலும் அழியாத அவமானங்களான, சாதிக் கொடுமை, ஏழ்மை, லஞ்சம், மதக்கலவரங்கள், இந்திய-பாகிஸ்தான் ரணம், விளையாட்டு துறையில் மக்கள் தொகைகேற்ற வளர்ச்சியின்மை என்று நீண்டு கொண்டே போகும். இவரும் அப்படியே.

மிஸ்டர் மூன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். "நீங்கள் ஒரு கொரிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?" என்று திடீரென்று சற்றும் எதிப்பாராத ஒரு வினாவை வைத்தார். "அவ்வாறு நீங்கள் விரும்பினால் உங்கள் தாய், தந்தை அதை ஏற்றுக் கொள்வார்களா?", என்றும் கேட்டார்.  இரு வேறு பட்ட மதம், மொழி, இனம், தேசம், கலாச்சார திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவத்தை என்றோ இந்தியா ஓரளவிற்கு அடைந்து விட்டது என்று எடுத்துரைத்தேன். மேற்கூறிய (சாதி, மதம்) பல விஷயங்களின் தாக்கத்தின் வீரியம் வலுவாக, அவர்களின் பள்ளி புத்தகங்களில் அச்சிடப்பட்டு இருப்பதால், இந்திய துணைக்கண்டத்து மாற்றங்கள் இன்னும் பெரும்பான்மையான கொரியர்களுக்கு எட்டவில்லை என்று தான் கூற வேண்டும்.  அதனால் அவரின் கேள்வியின் நோக்கம் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை. இது இந்தியாவில் இப்பொழுது ஒரு பெரிய விஷயமில்லை என்று அவருக்கு ஒரு சிறிய விளக்கம் அளித்தேன். இருப்பினும் நான், சடைபின்னி,  பூச்சூடி, சேலையணியும் என் தேசத்து பெண்ணையே திருமணம் செய்வேன் என்ற கூறியதும், ஏன் கொரியப் பெண்கள் அழகில்லையா என்று வினவினார். நான் அப்படி சொல்லவில்லை, இந்த மணாளனின் மங்கை எனது தேசத்தில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏதோ வரிசையில் இந்தியாவில் நமக்கென்று காத்திருப்பதைப் போல், பீற்று  பீற்றென்று பீற்றினேன். நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்.

பசி வயிற்றை பிராண்ட, ஒரு சிக்கன் பீசை எடுத்து வாயில் வைத்தேன். பேரதிர்ச்சி...! சர்க்கரை பொங்கலை போல் இனித்தது சிக்கன். " டேய்...!,  இது எங்கேயாவது அடுக்குமா..?, ஜின்ஜெர், சில்லி, 65'ன்னு  கண், மூக்கு, வாயெல்லாம் திரவப் பிரவாகத்தை பீறி டச் செய்து,  ஒரே கார சாரமா இருக்க வேண்டிய ஒரு சமாச்சாரத்த, நாட்டு சக்கரைய அள்ளி கொட்டி யாருடா இப்படியெல்லாம் புரட்சி பண்றது. வயித்துல ஈரத்துணிய கட்ட வச்சுட்டீங்கலேடா...!"  என்று நொந்து அந்த சிக்கனை கண் மற்றும் கைக்கு எட்டாத திசைக்கு நகர்த்தி வைத்து விட்டு கோக்கை மட்டும் குடித்து கொண்டிருந்தேன். தூரத்தில் அரிசிமூட்டை, முழுக்க நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நின்ற இடத்திலயே எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து கொண்டிருந்தது. பலரும் அவரவர் இருக்கைகளை விட்டெழுந்து என்னிருக்கை வந்து சில பல வார்த்தை விசாரிப்புகளை முடித்து சென்று தங்கள் தலையாய சோஜு கடமையில் மூழ்கினார்கள். 

அருகிலிருந்த 'மிஸ்டர் மூன்' இதை ட்ரை பண்ணுங்களேன் என்று வாத்துக்கறியை காட்டினார். "இப்படியெல்லாம் வாயில்லா பூச்சியான வயிற்றுக்கு எதிர்ப்பாராத ஷாக்கெல்லாம் தரக்கூடாது மிஸ்டர் மூன்",  என்று அழாத குறையாக நான் கூறினேன்.  இருந்தாலும், பசி மிகவும் வயிற்றை கிள்ளவே, நானும் முயற்சி செய்ய எத்தனித்தேன். என் ஆசிரியை தாய் கையில் பிரம்புடன் மனக்கண்ணில் தோன்ற, போட்டு விட்டேன் கீழே.  மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா என்று  இந்தியா முழுக்க பணி நிமித்தமாக நான் சுற்றிய காலத்தில் அவர்,  அசைவம், மாமிசமென்றால்,  வீட்டில் வந்து தான் செய்வதைத்தான் உண்ண வேண்டும் என்றும்,  வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். நானும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று அவர் கையால் தான் சாப்பிடுவேன்.  

தாய்க்கு கொடுத்த சபதத்தை காக்க உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்ற பேருண்மையை உணர்ந்து என் வாழ்வின் முதல் வாத்துக்கறியை ருசித்தேன். நிஜமாகவே அருமையாய் இருந்தது. மட்டனுக்கும், சிக்கனுக்கும் இடையேயான பதமும், மிருதுவும், ருசியும் கொண்டது வாத்து மாமிசம்.  ஓரளவுக்கு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, என்னுடைய பிளாட்டுக்கு கிளம்பினேன். என்னை தவிர அனைவரும் ஊற்றவோ...?, உட்கொள்ளவோ...? என்று சோஜுவில் நீந்தி கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் இவர்கள், 'செகண்ட் பார்ட்டி'க்கு இன்னொரு ரெஸ்டாரெண்டிற்கும், 'தேர்ட் பார்ட்டி'க்கு வேறொரு ரெஸ்டாரெண்டிற்கும் சென்று குடித்தும், குடிக்க கொடுத்தும் வீடு செல்ல விடிந்து விடும்.

அங்கே அப்பு குட்டி, அலங்கோலமாய், தொப்புள் தெரிய, பிளந்த வாயில் இறாலுடன், கண்கள் சொருகி, உத்தரத்தை நோக்கிய முகத்துடன், முக்கி முனகிக் கொண்டு, பார்ப்பதற்கு மல்லாக்கப் போடப்பட்ட ராட்சச பிள்ளைத்தாச்சி தவளை போல் சரிந்து கிடந்தார்.  மிக ஹைலைட்டான விஷயம் யாரோ சக தோழி அவர் கழுத்தில் தொங்க விட்டுச் சென்றிருந்த ஹேண்ட்பேக் தான். இப்படி ஒரு அசாதாரண நிலையில் நம் அப்புக்குட்டியை அன்று கண்டதை இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். மறு நாள் விசாரித்ததில், டாய்லெட் போன நம் அப்புக்குட்டியார் அங்கயே உட்கார்ந்த நிலையிலேயே நித்திரையில் ஆழ்ந்துவிட, பின் பொல பொலவென்று புலர்ந்த சனிக்கிழமை காலை, அவரை அவர் பிளாட்டிற்கு கொண்டு வந்து கிடத்தி விட்டு போனதாக நண்பர்கள் சொல்லி சொல்லி எல்லா பக்கத்தாலேயும் சிரியோ சிரியென்று சிரித்து விட்டார்கள்...!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

20 கருத்துகள்:

Unknown சொன்னது…

சூப்பர் பாஸ்! வாத்துக்கறி 'ட்ரை' பண்ண வேணும்!

ஆனந்தி.. சொன்னது…

ஸோ, சத்தியத்தை கடாசிட்டு வாத்து கறி சாப்டாச்சு...:-)) வெரி குட்..நல்ல புள்ள..:))

யுவர் ஆனர்..செல்லம் அப்புகுட்டியை ரொம்ப அசிங்கமா..கேவலமா...கொடூரமா...கன்றாவியா...கிண்டலா..சகிக்க முடியாம..விவரித்து இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...ஹ ஹ...:))))

அப்புக்குட்டி தோளில் மாட்டிவிட்டு போன பெண்ணின் ஹான்ட் bag ,,,சிரிச்சு மாள முடியல...ஹ ஹ..

அந்த பணிப்பெண் ஸோ ஸ்வீட் ல சதீஷ்...

நல்லா என்ஜாய் பண்ணினேன் உங்கள் பதிவில்...:))

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ்..நீங்க இன்டிலி இல் தமிழ் மொழி பக்கம் இதை இணைச்சு விடுங்க..ஆங்கில மொழி பக்கம் இருக்கே இது...:((

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமை

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை.....

Sathish Kumar சொன்னது…

//ஜீ... சொன்னது…
சூப்பர் பாஸ்! வாத்துக்கறி 'ட்ரை' பண்ண வேணும்!//

மிக்க நன்றி நண்பா...!
வாத்து ரொம்ப டேஸ்டி...!
You'l like it...!

பெயரில்லா சொன்னது…

hi sathish, it is a real humor to read ur experience.........there are still more to experience in terms of culture and food in korea.......in summer u can visit dog meat restaurant,ice noodles, fresh sea food restaurant.....i too had those experience for 2 yrs......thanx for making me laugh uncontrollably......

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
நல்லா என்ஜாய் பண்ணினேன் உங்கள் பதிவில்...:))//

இன்னும் அம்மாவிடம் சொல்லவில்லை. அவர்கள் இந்த பதிவை படிக்கும் போது தான் தெரியும்.

அட நீங்க வேற, அப்புக்குட்டி ரயான் இந்த மாதிரி பார்ட்டி சமயங்களில் பண்ணும் லூட்டிகளுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லீங்க...!

ஆமாங்க அந்த கொரியப் பெண்ணின் அன்றைய சிரிப்பு இன்னும் என் கண்களில். ஹாஸ்பிடாலிடி'யில் எந்த மட்டத்திலும் கொரியர்கள் நம்மை அசர வைத்து விடுவார்கள்.

வாழ்த்துக்கு நன்றி ஆனந்தி...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
சதீஷ்..நீங்க இன்டிலி இல் தமிழ் மொழி பக்கம் இதை இணைச்சு விடுங்க..ஆங்கில மொழி பக்கம் இருக்கே இது...:(( //

தமிழ் இன்ட்லியில் இணைத்து விட்டேன். மறுபடியும் சந்திக்கிறேன், ஆனந்தி...!

Sathish Kumar சொன்னது…

//sakthistudycentre.blogspot.com சொன்னது…
அருமை//

நன்றி கருண்....!

Sathish Kumar சொன்னது…

//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…
அருமை....//

வருகைக்கு முதல் நன்றி..!
கருத்துக்கு இரண்டாம் நன்றி...!
பின்தொடர்தலுக்கு நன்றியோ நன்றி நண்பா...!

Sathish Kumar சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
hi sathish, it is a real humor to read ur experience.........there are still more to experience in terms of culture and food in korea.......in summer u can visit dog meat restaurant,ice noodles, fresh sea food restaurant.....i too had those experience for 2 yrs......thanx for making me laugh uncontrollably......//

Korea-A different place and people altogether, very little known to the remaining world.

I'm too pleased by your words. Such words are the driving forces to pen more and more. Thanks a ton friend...!

Lay your name while your next visit. Hope to see you again here.

குறையொன்றுமில்லை. சொன்னது…

சதீஷ் நானும் உங்க பக்கம் முதன் முறையா விஜயம்
நீங்கல்லாம் எழுதரதைப் பாத்தா எனக்கு ஷேமா இருக்குப்பா. என் எழுத்து பாமரத்தனமா இருக்கும். அதையும் படித்து என்னை உற்சாகப்படுத்தி வருகிரீர்கள். நன்றி, நன்றியோ நன்றிகள்.

Sathish Kumar சொன்னது…

எல்லாம் உங்களை போன்ற பெரியவங்க ஆசிவாதம்தான்..!
என்ன இப்படி சொல்லிட்டீங்க, உங்க எழுத்து மேல எனக்கு எவ்வளவு பொறாம தெரியுமா...??
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா..!

Unknown சொன்னது…

உங்கள் வலைப்பூவுக்கு முதல் விஜயம். முதல் விஜயமே உங்களுக்கு ஜே போடவைக்குது.. வலைப்பூவின் அமைப்பு அருமை..நல்ல ரசனை..

Sathish Kumar சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாரதி...!

snegithan சொன்னது…

வாத்துக்கறி பிரமாதம் சதீஷ் குமார்.

Sathish Kumar சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றியோ நன்றிகள் snegithan...!

ஆனந்தி.. சொன்னது…

சதீஷ்...அப்புகுட்டியை பத்தி வேற எதுவும் புது பதிவு போடலையா?? :-)))))

Sathish Kumar சொன்னது…

பணிச்சுமை...! மீட்டிங் மேல மீட்டிங்....!!!! சீக்கிரம் சந்திக்க ட்ரை பண்றேங்க ஆனந்தி.....!

கருத்துரையிடுக