வியாழன், 17 பிப்ரவரி, 2011

பொண்ணப் பெத்தவன்...!

அவர் பெயர் கணேசன். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் பள்ளித் தோழர். உத்தேசமாக, என்னை விட ஐந்தாறு வயது மூத்தவர். மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், தான் படிக்கவில்லை என்ற ஏக்கமும், தன் சந்ததியை படிப்பறிவு பெற்ற சமூகமாக விதைக்க வேண்டும் என்ற வெறியும் இருந்ததாலும், கூலித் தொழிலாளியான கணேசனின் தந்தை அவரை எனது நண்பன் படித்த அந்த வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியொன்றில் சேர்த்து பயில வைத்தார். நாளடைவில், அந்த தொழிலாளி குடும்பத்தை வறுமை அரக்கன் தன் அகோரப் பசியால் முடக்க கணேசனின் படிப்பு நூலறுந்த பட்டமாய் பாதியிலயே அறுந்து வீழ்ந்தது. பின்னர் குடும்ப சூழலை உணர்ந்து, வீட்டிலுள்ள உருப்படிகளின்  அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்ய குடும்பச் சுமையை தன் தோளில் சுமக்கலானார். தொடக்கத்தில் பல்வேறு கூலி வேலைகளுக்கு போக தொடங்கிய அவர், சில வருடங்களில்  வருமானத்திற்கு  நிரந்தர தீர்வாக கருதி தனக்கென ரிக்க்ஷா ஒன்றை வாங்கி முழு நேர ரிக்க்ஷா தொழிலாளியானார்.  


திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தனது சிறிய வயதிலேயே கடக்க துவங்கி விட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். குடும்பம், பொருளாதார நெருக்கடி என்று எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எங்களை கண்டு விட்டால் அந்த பள்ளிக்கால கணேசனாக மாறி சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்விக்கும் பாசமிக்கவர். கல்லூரி கடந்த பிறகு பணிக்காக வட இந்தியாவிலேயே நான் அதிக வருடங்கள் வசிக்க நேரிட்டதால், அவரை பார்த்தே ஏழெட்டு வருடங்கள் கடந்திருந்தது.  சமீபத்தில் டில்லியிலிருந்து விடுமுறைக்கு நான் எனது வீடு சென்றிருந்த நாட்களில் ஒரு நாள் அவரை ஏதேச்சையாக சந்தித்தேன்.  நான் சாலையை கடக்க காத்திருந்த போது, பின்னிருந்து சார்...என்னங்க..., சார்...என்னங்க... என்று குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.  குரல் மெலிதாக ஒலிக்க தூரத்தில் யாரையோ நோக்கி இருக்கும் என்று கருதியதாலும், சிக்னலில் சாலையை கடக்கும் தீவிரத்தில் இருந்ததாலும், நான் பொருட்படுத்தவில்லை. சாலையை கடந்து, ஏதோ நினைவில் பின் திரும்பிப் பார்த்தால்...கணேசன். சார்...சார்..என்று என்னை நோக்கி ஓடோடி வந்து கைகளைப் பற்றினார் மிக்க மகிழ்ச்சியுடன்.  பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்த்ததில் எனக்கும் மிக்க ஆனந்தம். இருவரும் பரஸ்பர விசாரிப்புகளை பரிமாறிக்கொண்டோம்.  "ரொம்ப நேரமா கூப்டிட்டே இருந்தேன்.. நீங்க திரும்பி பார்க்கவே இல்ல..சுற்றி இருந்த எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க சார் ...", என்றார் வருத்தத்துடன்.  "அப்படியா..நான் யாரோ யாரையோ  கூப்பிடறாங்கன்னு நெனச்சிட்டேன் சாரி..நீங்க பேர சொல்லி கூப்பிட வேண்டியது தானே..", என்று அவரின் தோளைப் பற்றினேன். கூச்சத்துடன் நெகிழ்ந்து என் பிடியிலிருந்து நழுவ முயன்றார்.  அருகில் இருந்தவரிடம் "என்னுடைய பிரண்ட், டில்லியில இருக்கார்..", என்று பெருமையுடன் கூறினார் நண்பனின் வளர்ச்சி உயர்வில் ஆனந்தமடையும் அந்த உயிர் நண்பன்.  உலகில் இன்னும் முழுமையாக கெட்டழியா உறவுகளில் முதன்மையான 'தாய்/தந்தை-சேய்'  உறவுக்கு அடுத்த நிலையில் நான் வைத்து வியந்து பார்க்கும் உறவு -'நட்பு'.  நெகிழ்ந்தேன் அவரின் அன்பில்.  மறுதினம் குடும்பத்துடன் என்னுடைய வீட்டில் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன் அவரை. கூச்சத்துடன் மறுத்து விட்டார். "மறந்து விடாதீர்கள்" என்ற அவரின் பாச வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு விடை பெற்றேன் மறு நாளே அவரை அப்படியொரு குமபலுக்கிடையில், ஒரு அசாதாரண சூழ்நிலையில் சந்திப்பேன் என்பதை அறியாமலே....!

அன்று வெள்ளிக் கிழமை. மாலை ஆறரை மணி வாக்கு. எனது தாயாருடன் கோவிலுக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல ஏழு மணி பூஜை. திவ்ய தரிசனம்.  சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நானும் என் தாயாரும் தெற்கு வாயிலின் வழியாக வெளியே வந்தோம். எப்போது ஆலயத் தொழுகை வந்தாலும் நான் வழக்கமாக எனது காலணியை விடும் அதே கடையில் தான் அன்றும் நானும் எனது தாயாரும் காலணிகளை விட்டிருந்தோம்.  ஆனால் அன்று அந்த நேரத்தில் அந்த கடையை சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான கும்பலும், கூச்சலுமாக இருந்தது. "நாலு சாத்து சாத்துங்க, திருட்டு கழுத..." "அப்படியே கழுத்த நெரிச்சு கொன்னு போடுங்க திருட்டு நாய...", என்றும் இன்னும் புரியாத 'சில பல நாலு கால் பிராணிகளை ஈற்றில் கொண்ட வார்த்தைகளும்'  எல்லா திசைகளிலிருந்தும் சீறி காற்றில் மிதந்து வந்தன. என் தாயாரை கொஞ்சம் தூரத்திலேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள் நுழைய முயன்றேன்.

ஒரு கை பிரம்புடன் தரையில் கிடந்த ஒரு உருவத்தை விளாசு விளாசென்று விளாசிக் கொண்டிருந்தது. "இனி இப்படி பண்ணுவியா...கொழுப்பெடுத்து அலையற...உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு..." என்று உறுமியவாறு கீழே கிடந்த அந்த உருவத்தை தோலுரித்துக் கொண்டிருந்ததது அந்தக் கை.  இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் மட்டுமே என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியும். ஆனால்,  இது ஏதோ இரு குடிகாரர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினையாகவோ, திருடி மாட்டிகொண்ட ஒருவனை பிடித்து விட்ட திருட்டு கொடுக்க இருந்த ஒருவனுடைய பிரச்சினையாகவோ இருக்கலாம் என்று தோன்றவே,  நான் எங்களுடைய காலணிகளை திரும்பப் பெற வழிவகை தேடி கண்களை அலை பாயவிட்டேன். இவ்வளவு குழப்பத்துகிடையிலும் அங்கே ஒரு மூலையில் கடை உரிமையாளப் பெண்மணி ஒரு ருபாய் விகிதம் ஒரு ஜோடி காலணிக்கு பெற்றுக் கொண்டு செருப்பை உரியவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்ததை கிடைத்த ஜனத்திரளின் இடுக்குகள் வழியே கண்டேன்.   அந்தத் திசையை நோக்கி நடக்க அந்த கூட்டத்திலிருந்து வெளியேற  எத்தனித்து பின் திரும்பிய போது தான் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள் குழப்ப கும்பலின் நடுவிலிருந்து,  "கணேசா..டேய் கணேசா..விட்ரா..செத்து கித்து தொலைய போறா...".   யூகித்துக் கொண்டேன்,  "உதைத்து நொறுக்கப்படுவது பெண்ணினமோ...?".   நீங்க சும்மா இருங்கண்ணே...உங்களுக்கு தெரியாது..", பதிலுரைத்தது ஒரு கோபக் குரல், மூர்க்கமாக.  அக்குரல் எனக்கு பரிச்சயப்பட்ட குரலாகப் தோன்றவே  சற்று நிதானித்தேன். தொலைவில் என் தாயார் என் மீது வைத்த கண்களை எடுக்காமல் என்னையே பின் தொடர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு சிறிது நிமிடங்கள் காத்திருக்குமாறு சமிக்ஞை கொடுத்துவிட்டு, குரல் ஒலித்த திசையில் வலுகொண்டு முன்னேறினேன்.


கோபக்கார அந்தக் குரலுக்கு உடையவராக குழப்ப கும்பலின் நடுவிலிருந்து ஒரு குரலால் குறிப்பிடப்பட்ட அந்த கணேசன், எனது "ரிக்ஷா நண்பன்" கணேசன் தான்.  பிரம்பை பிடித்திருந்த அந்தக் கைக்கு சொந்தக்காரரும் அவர்தான் என்பதை அவர் கை பற்றியிருந்த பிரம்பும் உணர்த்த சற்றே அதிர்ச்சி எனக்கு. அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...?  கீழே கந்தலாய், தலை மயிர்கள் மண்ணில் புரள, அணிந்திருந்த பாவாடை கிழிசல்கள் வான் நோக்க, முகத்தை பூமித்தாயினுள் புதைத்து தேம்பிக்கிடந்தது அவ்வுருவம்.  இவ்வளவு ஆண் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெண்ணில்லை. என் கோபத்தீ என்னை திமிறிக்கொண்டு உள் நுழையச் செய்தது. கணேசனை நேருக்கு நேர் பார்த்து "கணேசன், என்ன இது..?" என்று கேட்டுக் கொண்டே கீழே கிடந்த அந்த பெண்ணை நோக்கினேன்.  நிலவிய சூழ்நிலை அவர் என்னை எப்போது சந்தித்தாலும் உதிர்க்கும் சிநேக சிரிப்பை அவரிடம் கட்டுப் படுத்தியிருந்தது. ஆனால் அவர் கண்களில் இருந்த கோப வெறி அடங்கி தலையை கீழே தொங்கவிட்டிருந்தார்.  அந்தக்  கந்தல் பெண்ணின் பாவாடை கிழிசல்களில் தெரிந்தது அவளின் வறுமை மாத்திரமல்ல, சுற்றி மௌனித்து நின்ற அந்தக் கோர மனிதர்களின் கொடூர மனங்களும், ஈவு, இரக்கமற்ற அவர்களின் காமப்பார்வையும் தான்.  என்னையுமறியாமல், ஓங்கி ஒரு அறை விட்டேன் கணேசனை.  கொஞ்சம் பலமாகத்தான். அவர் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, சுற்றி நின்ற கூட்டமும் தான். ஒரு பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க விலங்கை அடிப்பதை போல் அடித்தது அநியாயம் என்று தோன்றியதால் மட்டுமே நான் கணேசனை அடித்து விடவில்லை. அந்த அநியாயத்தை நிகழ்த்தியவர் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரே என்ற அந்த நினைவு கொடுத்த தைரியமே என்னை எனது கைநீளச் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வேறு யாராவது  ஒருவர் அந்த சூழ்நிலைக்கு காரணமாயிருந்தால் என்னுடைய எதிர்வினை இவ்வளவு வீரியமாய் இருந்திருக்குமா என்பதில் எனக்கும் சந்தேகமே. ஏனெனில், இந்த இழி சமூகம் நம் பலரது எதிர்ப்புக் குரல்களை ஊமையாக்கும் காரணிகளாக குடும்ப அமைதியை குலைத்தல், பொறுக்கிகளுடன் போராட வேண்டி வரும் கோர நிலை என்பது போன்ற கேடுகெட்ட 'ப்ராக்டிகல் உண்மைகள்' அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால், அவைகள் என்னையும்  மௌனித்தே இருக்க செய்திருக்கும். 


கணேசனின் கண்கள் பனிக்கத் தொடங்கி இருந்தன. "எல்லோரும் போங்க, எது நடந்தாலும் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே வேடிக்கை பார்க்க வந்துடுவீங்களே...., அடுத்தவன் வீட்டு விவகாரம்னா  நமக்கு வெண்பொங்கல் சாப்பிடற மாதிரி தானே..., எடத்த காலி பண்ணுங்க..!  கணேசன்...!,  எல்லாரையும் போகச் சொல்லுங்க.." என்று கத்தி விட்டு கீழே நிலை குலைந்து போயிருந்த அந்த பெண்ணை..இல்லையில்லை...சிறுமியை எழுப்பி மூலையில் உட்கார வைத்தேன்.  கூட்டம் "யார்ராவன்..?, இவர் பெரிய இவரு..., ஹேய் வந்துட்டருயா....போன்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கலையத் தொடங்கியது.  கரைந்த கூட்டத்தினால் எனது தாயார் என்னை இப்போது தெளிவாக பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவரை கையமர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னேன்.  அவர் அமைதியானதாக தெரியாமல் போகவே,  என்னை நோக்கி வர எத்தனித்தவரை எனது செயற்கை புன்னகை தொற்றிய முகத்தின் மூலம் அமைதி காக்க வைத்தேன்.  "அந்தப் பொண்ண  கூட்டிச் சென்று வேறு உடை மாற்றுங்கள் ", என்று அந்த உரிமையாளப் பெண்மணியிடம் கூறினேன். அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாள்.

குனிந்த தலை நிமிராமல் கணேசன் என் முன்.  "சார், என்ன நடந்ததுன்னு தெரியாம என்னை அடிச்சிட்டீங்களே....!", என்றார்.   "என்ன நடந்திருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா நடு ரோட்ல போட்டு அடிப்பாங்க...?", நான். "சார்...பதினாலு வயசு சார், தோ...செருப்ப பாத்துகிட்டு காலத்த தள்ளிகிட்டு இருக்குதே இது தான் அந்தப் பொண்ணோட அம்மா...!  மூணு வருஷத்துக்கு முன்னாடி, இதே கோவில்ல யாசகம் எடுத்து சாப்டிட்டு இருந்ததுங்க. இங்க ஏற்கனவே யாசகம் எடுத்துகிட்டு இருந்தவங்க அடிச்சு தொல்லைப் படுத்தியதால, தற்கொல பண்ணிக்கலாம்னு போனதுகள தடுத்து நிறுத்தி, எனக்கு தெரிஞ்ச சில கோவில் பிரமுகர்கள புடிச்சி நான்தான் இந்த தொழில ஏற்பாடு பண்ணேன்.  இப்போ ஒரு வேளையாவது கௌரவமா சாப்பிடுதுங்க...! நேத்து ராத்திரி இந்த புள்ளைய நாலு குடிகார நாய்ங்க பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வச்சி...சொல்லவே நாக்கு கூசுது சார்...! நல்ல வேளையா அந்தப் பக்கம் சவாரி போன என் தோஸ்து ஒருத்தன் சரியான நேரத்துல போய்  சில நண்பர்கள்  துணையோட அந்த பிச்சைக்கார நாய்ங்கள, தேxxx பயலுங்கள  வெரட்டி இந்தப் பொண்ண வீட்ல கொண்டு போய்  விட்டுட்டு வந்திருக்கானுங்க...! எனக்கு சேதி இப்போதான் தெரிஞ்சி ஓடி வந்து, கடையில தானே உன்ன உக்காரச் சொல்லி வுட்டுட்டு போனா ஒன் ஆத்தா, நீ அந்த நேரத்துல எங்கடீ போனேன்னு கேட்டா, அந்த அண்ணனுங்க தான் சினிமாவுக்கு வரியான்னு கூப்டு போனாங்கன்னு சொல்றா...! வந்துச்சி கோவம், அதான் சார் யாரு எதுக்கு கூப்ட்டாலும் போயிருவியான்னு விளாசு விளாசுன்னு விளாசிட்டேன்", என்றார் ஒரே மூச்சில். "அங்க பாருங்க சார் அந்த பொண்ணோட ஆத்தாவ..., என்று இந்த குழப்பத்துகிடையில் தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த உரிமையாளப் பெண்மணியை நோக்கி என் கவனத்தை திருப்பினார். அந்தத் தாயார் கண்களில் தாரை தாரையாக கண்ணீருடனும், கும்பிட்ட கைகளுடனும் நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். எனது கண்கள் கலங்க எத்தனிக்க அடக்க முயன்று தோற்றேன். "அத ஒன்னும் சொல்லாதீங்க சாமி..., அது என் குல சாமிங்க", என்று என்னுடைய காலில் விழ வந்தவரை, ஐயோ...என்று தடுத்தேன். "என்னை மன்னிச்சுடுங்க கணேசன்", வேறு வார்த்தைகளில்லை என்னிடம் . ஊமையானேன். என் மனதில் உச்சத்தில் கணேசன்.

"நானும் ரெண்டு பொண்ணப் பெத்தவன்  சார்..எனக்கும் இதோட வலி என்னன்னு தெரியும் சார்..! அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்னு தான் இப்படி நடந்து கிட்டேன்.  மானத்துக்காக சாவப் போனவ சார்  இவ ஆத்தா...! காசு பணம் இல்லாதவங்க மானத்தோட உயிர் வாழக் கூடாதான்னு  இவ ஆத்தா அப்ப கேட்டது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு....!  இன்னும், நான் தப்பு பண்ணியிருந்ததா  நீங்க நெனச்சா என்ன உங்க செருப்பாலயே அடிங்க சார்..", என்று காலணி அணியாத என் கால்களை பார்த்தவாரே கூறினார்.  அவரை சமாதனப்படுத்தினேன். அவர் என் நண்பர் என்பதில் மிக்க பெருமிதம் அடைவதாக சிலாகித்தேன். அவர் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினார்.  அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...? என்னுடைய இந்தக்  கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிட்டன அந்த கவரிமான் சாதியிடமிருந்து.

நானும் என் தாயாரும் காலணிகளை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். யாரது என்று கேட்ட தாயாரிடம் நண்பர் ரிக்ஷாக்காரர் என்று சொன்னதும், உனக்கு இவங்கல்லாம் கூட பிரெண்டா என்று ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார்  என்னுடைய வீட்டு முகம் மட்டுமே கண்ட என் அன்புத் தாய். ஆனால், ஒரு விஷயம் மட்டும் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தது.
அந்த சிறுமி என்ன தவறு செய்தாள்?  குற்றவாளிகள், வெகு ஜனத்தை மற்ற விஷயங்களில் இருந்து திசை திருப்பும் சினிமா மோகத்தை அந்த பிஞ்சிடம் விதைத்த இந்த சமூகமும், அதை தங்களின்  சதை வெறிக்கு சாதகமாக பயன்படுத்த  முயன்ற அந்த நான்கு குடிகார வேசிமகன்களும் அல்லவா? தண்டனை ஏன் அந்த பிஞ்சு குழந்தைக்கு. இன்னும் இந்த கேடுகெட்ட சமூகம் பெண்ணுக்கான பாதுகாப்பில் பெண்ணையே குற்றவாளியாக பார்ப்பது ஏன்?  ஒரு பெண்ணின் கற்பை உயிரினும் மேலானதாக குறிக்கும் இச்சமுதயாமே அதனை பாதுகாக்கும் பொறுப்பையும், உரிமையையும் தட்டிக் கழிக்கும் நோக்கில், "வீக்கர் செக்ஸ்" என்று சொல்லப்படும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து, அதை பறிப்பதற்கான எல்லா வழிகளையும் திறந்து வைத்துவிட்டு பெண்களையே குற்றவாளிகளாக, பலி ஆடுகளாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.

அதே  சமூகத்தின் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு அருவெருப்பாய் இருக்கிறது.


(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா...!

ஐந்து வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக ஹரியானாவில் உள்ள 'பாவல்' என்ற தொழில் நகருக்கு சென்றிருந்தேன்.  'பாவல்' NCR என்று சொல்லப்படும் தேசிய தலைநகர் மண்டலத்துக்குட்பட்டது.  'டெல்லி-ஜெய்பூர்' தேசிய நெடுஞ்சாலை NH-8'ல் டெல்லியிலிருந்து நூறாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி.  தேசிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பொட்டலாய் தரிசு நிலங்களே.  பாக்டரி, அலுவலகம், இரண்டுமே பாவல்'லில் தான்.  நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் ராஜஸ்தானில் உள்ள 'பிவாடி' என்ற இடத்தில் இருந்தது. 'ஆஷியானா கார்டென்ஸ்' என்ற ரம்மியமான அப்பார்ட்மென்ட்சில் தான் என்னுடைய நான்கு  மாத ஜாகை.  அந்த சமயத்தில் பணி மாத்திரமே ஜனித்திருந்த, தனிமை அதிகம் நிறைந்த என்னுடைய நொடி, நிமிட, மணித்துளிகளை மாற்றியவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர் 'மனீஷ் நிநாவே', குவாலியர் தான் பூர்வீகம்.   நான் இருந்த பிளாட்டிற்கு எதிரே இருந்த பிளாட்டில் தங்கி இருந்தவர்.  எங்களுடைய நட்பு முதல் சந்திப்பில் "ஹே ட்யுட்...! வாஸ்ஸப்..??"  என்று பீட்டரின் இலக்கிய நடையில் அவர் எடுத்து விட்ட இரண்டு பிட்டிலேயே தொடங்கியது.  இருவரில் மற்றொருவர் என்று நான் குறிப்பட்டது ஒரே ஒருவரை அல்ல, ஒரு குடும்பத்தை.  அந்த குடும்பத்துடனான முதல் சந்திப்பு மிகவும் சுவையானதொரு சம்பவம்.  பணியும் ப்ளாட்டுமாக ஆமையாய் நகர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள், மாடிப்படி வழியாக மேலே சென்று கொண்டிருந்த போது, நன்கு பரிச்சயமான தென்னிந்திய திரைப்பட பாடல் ஒன்று எங்கிருந்தோ மிகவும் மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது.  பாடல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 'பார்த்த முதல் நாளே..... பாடல் இப்போது தெளிவாக காதுகளில் விழுந்தது.  பாடல் ஒலித்துக் கொண்டிருந்த தரைதள  முதல் பிளாட்டின் முன் நின்றேன்.  கதவு திறந்தே இருந்தது. இரண்டு முறை அழைப்பு மணியை  அழுத்தியும் யாரும் வரவே இல்லை.  மீண்டும் ஒரு முறை அழுந்த அழுத்திவிட்டு உள் நுழைந்தேன். "கோன் ஹை? கியா சாஹியே?", என்று சற்றே பீதியுடன் எதிர் வந்து நின்றார் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண். நான் தமிழ் பாடல் என்னை அழைத்து வந்த கதையை சொன்னவுடன் தான் தாமதம், "தமிழா நீங்கள்...!, வாங்க..!, வாங்க...!", என்று குதூகலமாய் வரவேற்று, சில பல விசாரிப்புகளுக்கு பிறகு  தடபுடலாய் உபசரித்தார்.   அவர் கணவர் 'பாவல்' நகரில் ஓர் நிறுவனத்தில் மேலாலளராக பணியாற்றுவதாகவும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழ்ந்தை இருப்பதாகவும் கூறினார்.

வார நாட்களின் மாலை பொழுதுகளை மனீஷுடன் சிறு நடைகளிலும், உரையாடல்களிலும், வார இறுதி நாட்களை பாசமிக்க தமிழ் குடும்பத்துடனும் கழித்து வந்தேன்.



மனீஷ் 'ஆஷியானா கார்டென்ஸ்'யின் பின் திசையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறிக் கொண்டே இருந்தார். அந்த சனிக்கிழமை போகலாம் என்று முடிவெடுத்து என்னுடைய 'கேர்டேகர்' காந்திலாலிடம் விஷயத்தை தெரிவித்தோம்.  திரும்ப சிறிது தாமதம் ஆனாலும் ஆகலாம்,  இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு காத்திருக்கும் படியும் கூறினோம். அவர் சற்றே பீதி கலந்த பதட்டத்துடன், "கருக்கலில் செல்வதற்கு கோவில் செல்லும் பாதை உகந்தது அல்ல, தாங்கள் இருவரும் நாளை காலை செல்லலாமே",...என்றார் தயக்கத்துடன்.  புலி, நரி என்று உயிருக்கு ஆபத்தான காட்டு விலங்குகள் திரியும் காட்டு பகுதி வழியாகவே அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூறி என்னை மிரள வைத்தார். ஆனால், மனீஷ் போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே அங்கயே பழம் தின்று கொட்டை போட்டு ஆல விருட்சமாய் விரிந்திருக்கும் காந்திலாலின் பேச்சை புறந்தள்ளி புறப்பட்டோம். மணி அப்போது மாலை 6.30ஐ தொட்டிருந்தது.  அப்பார்ட்மென்ட்சின் வெளிப்புற இடது பக்கத்து காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானோம்.

இருள் மெல்ல படர தொடங்கி இருந்தது. ஒற்றையடிப்பாதை தாண்டி இப்போது தரிசு நிலத்தில் எங்கள் பயணம்.  வெளிச்சமின்மையும், ஆள் நடமாட்டமின்மையும் எனக்குள்  சிறு பயத்தை விதைக்க, அதை போக்க மனீஷுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.  அவரும் ஆர்வத்துடனும், பலத்த சிரிப்புகளுடனேயும் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடி கொண்டே வந்தார்.  எதிர் திசையில், தூரத்தில் இரு உருவங்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை போன்று நிழலாடியது. ஆணும், பெண்ணுமாய் இருவர் -இப்போது அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி குறைந்து இருந்தது.  உற்று நோக்கிய பார்வையுடன், கனத்த அமைதியுடன் கடந்து சென்றார்கள் எங்களை.  இருள் இப்போது அடர்த்தியாய் பரவி இருந்தது.  எங்கோ விலங்குகள் ஊளையிடும் சத்தம் எங்கள் பாதங்கள் முன்னேற, முன்னேற வலுத்துக் கொண்டே சென்றன.  பாதை இப்போது இரு புறத்திலும் மரங்களடர்ந்த வழியினூடே பயணித்தது.  காந்திலால் சொன்ன காட்டுப்பகுதி இதுவாக இருக்குமோ என்று யூகித்துக் கொண்டேன்.  "என்ன ரொம்ப தூரம் வந்து விட்டோம் இன்னும் கோவில் இருக்கும் திசையே கண்ணுக்கு தெரியவில்லையே..?",  என்றேன் மனீஷிடம்.  "முதலில் ஒரு கிராமம் வரும், அதை தாண்டி தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று காந்திலால் சொன்னார்" என்றார் மனீஷ்.  "என்னது சொன்னாரா... அப்போ உங்களுக்கு தெரியாதா...வெளங்கிடும்...", என்று கேட்டு கொண்டே தொடர்ந்தேன்.

கனத்த அமைதியில் காட்டுப் பூச்சிகளின் பேரிரைச்சல் பயத்தை அதிகப்படுத்தியது.  "ஒரு ஐடியா ட்யுட்...!" என்று உரத்த குரலில் அலறினார் மனீஷ். அருகில் இருந்த ஒரு கோதுமை வைககோல்போரை காட்டி இதன் அருகில் நான் நிற்பது போல் ஒரு போட்டோ எடுங்கள் என்றார். உங்களுக்கு எப்படி இப்படி நடுக்காட்டில் இது மாதிரி எல்லாம் தோன்றுகிறது, இந்த இருட்டில் ஒன்றுமே தெரியாது வாங்க போகலாம் என்று நான் கூறியதை ஏற்காமல், அவருடைய 'சோனி' மொபைல் கேமராவில் என்னை படமெடுக்க வைத்தார். "அல்டிமேட்...!" என்று எடுத்த புகைப்படத்தை பார்த்து மீண்டும் ஒரு அலறல் அவரிடமிருந்து. என்ன அல்டிமேட்டோ...நிஜத்தை விட பேரிருளாய் தெரிந்தது புகைப்படம்.

அந்த காட்டு பாதையை கடந்து விட்டதை போன்ற உணர்வு எனக்கு வந்தது.  எங்கோ தூரத்திலிருந்து மனித சத்தங்கள் காதில் விழத்தொடங்கின.  இன்னும் சிறுது நேர நடைக்குப் பிறகு, இங்கும் அங்குமாய் மனிதத் தலைகள் தெரிய ஆரம்பித்தன. "கிராமம் அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்", என்றேன் நான். வீடுகள் நிறைந்த பகுதிக்குள் பாதை நீண்டது. கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. ஒவ்வொரு வீடும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்டிருந்தன. விசாலாமான, பெரிய வீடுகள். அகலமான பரந்த முன் வாசல்கள், மரங்கள் என்று நாம் ஒரு காட்டுப்பகுதியின் வாயிலாக தான் இந்த கிராமத்தை அடைந்தோம் என்று நம்பவே முடியாத அமைப்பிலான வீடுகள்.  பெரும்பாலான வீடுகளின் முன்பு குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனத்தைக் காண முடிந்தது. பல வீடுகளின் முன் இரண்டு மூன்று வாகனங்களும், ஒரு ட்ராக்டரும் என்று வசதியின் வனப்பு வாசலை தாண்டி பிதுங்கி வழிந்து கொண்டிருந்ததன.   "மின்வெட்டு போல் இருக்கிறது, இட்ஸ் எ பேட் ஈவ்னிங் டுடே" என்ற என்னை மனீஷின் "திஸ் வில்லேஜ் இஸ் எட் டு பி எலெக்ட்ரிபைட்" என்னும் வார்த்தைகள் அதிரத்தான் வைத்தன. "அரசாங்கம் இந்த பகுதியை சிறப்பு பொருளாதார பகுதியாக அறிவித்து தொழில் தொடங்க அனுமதி அளித்தது. வேண்டிய நிலங்களை நேரடியாக விவசாயிகளிடமேயே தொழில் தொடங்க விழைவோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தது. தொழிலதிபர்கள் அலை கடலென திரண்டு இவர்களின் விலை மதிப்பில்லா நிலங்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தான் இப்படி ஒரு விசித்திரமானதொரு விஷயத்தை நாம் காண்கிறோம்", என்றார் மனீஷ்.



மெலிதான தென்றல் மனித சத்தங்களின் வழியே எங்களை வருடி சென்றது. கிராமத்து வாசம் கமழ்ந்திருந்த சுகந்தமான காற்று. வானத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த நிலாவினை ரசித்த படியே மனம் மகிழ்ச்சியில் திளைக்க நடந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அகன்று விரிந்த, வெளிப்புற முற்றத்தில் அமர்ந்து அளவாலாவிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் இங்கும் அங்கும் விளையாடி கொண்டிருந்தனர். அருகிலேயே, அடுப்பை மூட்டி, பெண்கள் தங்கள் கைகளாலேயே ரொட்டியை சுட்டு சுடச்சுட அனைவருக்கும் பரிமாறி
கொண்டிருந்தார்கள். பாட்டியின் கதை கேட்கும் பேரன், தாத்தாவின் கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் பேத்தி, தந்தையின் தலை வருடும் மகள், தாயின் இடுப்பை அணைத்த மகன், தாயின் தோளில் உறங்கும் குழந்தை, "எப்படியொரு சொர்க்க வாழ்க்கை வாழ்கிறேன் பார்..." என்கிற பெருமித முகத்துடன் குடும்பத் தலைவன் என்று ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த அந்த அற்புதமான, வார்த்தையிலடங்கா வாழ்க்கையை எப்படி உரைப்பது.  இந்த அருமையான காட்சியில் எங்களை இழந்து நாங்கள் ஒவ்வொரு வீடாக நகரும் போது, பல வீடுகளில் எங்களையும் பாசத்துடன் அவர்களின் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தனர்.  அவர்களின் அன்பான அழைப்புகளை நன்றியுடன் மறுத்து முன்னேறினோம்.  எதிரெதிர் வீடுகளில் பல மாதங்கள் வசித்தாலும், முகம் பாரா நவ நாகரீக நகரத்து கலாச்சாரத்தை நினைக்க, நினைக்க வேதனையாய் இருந்தது.  இவர்களின் இயற்கையோடு இணைந்த அர்த்தமிக்க பரிவான வாழ்க்கையை, முகமறியா மனிதர்களுக்கும் பந்தியிட்டு உணவு பகிரும் உன்னத குணத்தை எண்ணி எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தேன்.  


"அவசர வாழ்க்கைக்காக பல அவசிய குணங்களை அவிழ்த்து எறிந்து விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நம்மை போன்ற நகர வாசிகள் இன்னும் என்னென்னவெல்லாம் இழக்க காத்து கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை".

வழியில் சிலரை விசாரித்து கோவிலை அடைந்தோம். சிறியதாகவும், மிக சுத்தமாகவும் இருந்தது வளாகம். அப்போதும் சில பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி கொண்டும், விக்ரஹங்களை சுற்றி வந்து கொண்டும் இருந்தார்கள். பெரியவர்கள் கோவில் மரத்தடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றி வந்து விட்டு, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின் புறப்படத் தயாரானோம். திரும்புகையில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு நிறைவுற்று இருந்தது. வெளியே போடப்பட்டிருந்த கட்டில்களில் அவரவர் அகன்ற வானத்தை பார்த்து மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இவர்களின் ரம்மியமான வாழ்க்கை சூழல் என் மனதில் எல்லையற்று வியாபித்திருந்ததால் வழி நெடுகிலும், காட்டுப்பாதையின் திகிலும்,கும்மிருட்டும், மனீஷின் உரையாடல்களும் முறையே என் சிந்தையிலும் செவியிலும் விழவே இல்லை.



அந்த சுகமான நினைவுகளோடே என் ப்ளாட்டை அடைந்தேன், சூரியனை ஒத்த வெளிச்சத்தினை மின் விளக்குகள் பாய்ச்ச, இமயமலை சாரலாய் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து காற்று வீச, அந்த கிராமத்து இருளும், மென் தென்றலும் ஏற்படுத்திய தாக்கத்தை இம்மியளவும் அசைக்க கூட முடியவில்லை இவைகளால். மேசையின் மேல் மையமிட்டிருந்த 'மடிச்சனியன்' என்னை உள் விழுங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எனக்கும் அந்த சொர்க்க வாழ்கை வாழ வழி இருந்தது, இன்னும் இருக்கிறது. நான் தான் அதற்கான பாதையை தவிர்த்து இந்த பாதையை தேர்ந்தெடுதேன் என் சுற்றுப்புறங்களுடைய விருப்பங்களின் தாக்கத்தினால். என்னை சுற்றி இருந்தவர்கள் யாவரும் நிம்மதி என்பது பொறியியல் துறையிலும், மருத்துவ  துறையிலும், மாட மாளிகைகளிலும், நகரத்து, பெருநகரத்து வாழ்க்கையிலும் தான் இருப்பதாக வலியுறுத்தி வழி காட்டினார்கள்.


"நிகழ் கால கஷ்ட நஷ்டங்களை, சுக துக்கங்களை கடந்தகாலமான பிறகு அசைபோட்டு ரசிப்பதையே மனித மனம் விரும்பும் என்ற வாழ்க்கையின் சாராம்சம் புரிந்திருந்தாலும், "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்று நோக்குவதே மனிதர்களின் இயல்பு என்று தெரிந்திருந்தாலும், சில தவிப்புகளை, இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடிவதே இல்லை".

எதை எதையோ தேடி மூச்சிரைக்க ஓடிய கால்கள், வலியெடுத்து  நிற்க திரும்பிப் பார்த்தால் எங்கோ வெகு தூரத்தில் தனியாக நான் மட்டும் ஒற்றையாய் நின்று கொண்டிருக்கிறேன். என் இளரத்தச் சூடு என்னை உந்தித் தள்ளிய தூரத்தின் வீரியம் அம்முறை நான் என் விடுமுறைக்கு வீடு சென்ற போது தான் தெரிந்தது.

தைரியத்தின், ஆளுமையின், ஆண்மையின், அன்பின், அறிவின், உழைப்பின், மொத்த உருவமாய், என் முதல் கதாநாயகனாய் மிடுக்கான தோற்றத்துடன் இருந்த என் தந்தையின் முதுமையில் தான் தெரிந்தது எனது தொலை தூர அர்த்தமற்ற பயணத்தின் விளைவு. செயலில் வேகமாய், புயலாய் நான் பெருமையுடன் கைகளையும், தோள்களையும் பற்றி நடந்த அந்த உத்தமரின் "அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா" என்னும் சொற்கள் என்னை மிகவும் திடுக்கிடச் செய்து பெரு வேதனைக்குள்ளாக்கியது.  இந்த எனது அவசர ஓட்டம் என் தந்தை முதுமை அடைந்து கொண்டிருக்கிறார் என்பதையே என்னை மறக்கச் செய்து விட்டது.  என் மனம் அவர் சொற்களை நம்ப மறுத்து மறுபடியும் இறைச்சலிடத் தொடங்கி இருந்தது.  "நீ தேர்ந்தெடுத்த பாதை உனக்கு கொடுத்ததென்ன தெரியுமா...???  நீ உன் அருகாமையை விட வேறு என்ன பேரின்பத்தை கொடுத்து விட முடியும் உன் தந்தைக்கு...??"

மயான அமைதி...மனமோ பேரிரைச்சலில்...!!!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)
--விளையாடும் வெண்ணிலா....

திங்கள், 10 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-2)

அந்த கொரிய பணிப்பெண் என்னுடைய எதிர்வினையின் வேகத்தையும், அதனால் உண்டான வேதனையையும் கூட பொருட்படுத்தாமல், முன்பை விட மிகுந்த புன்னைகையுடன் மறுபடியும் என் தொடை அருகே கையை கொண்டு வந்து என்னை கீழே தலையை குனிந்து பார்க்கும்படி செய்கை செய்தார். குனிந்து பார்த்தேன். அவர் சுட்டிய திசையில் சமையல் வாயு செல்லும் குழாயும், வால்வும் இருந்தது. பணிப்பெண் என் தொடையருகே இருந்த அந்த வால்வை திறக்கத்தான் தனது கையை கொண்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு அப்போதுதான் மண்டையில் உரைத்தது. பச்சை வாத்து மாமிசத்தை கொண்டு வந்து மேஜை நடுவில் தோசைக்கல் போன்ற ஒன்றில் கொட்டி விட்டு சென்றதாக சொன்னேனே..., அது மாதிரி அல்ல அது தோசைக்கல்லே தான். மாமிசத்தை பதமாய் அவரவரே புரட்டி, புரட்டி எடுத்து உண்பதுதான் இந்த ரெஸ்டாரெண்டின்   வழக்கம் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது. ஒரு வித குற்ற உணர்ச்சியில் தயக்கத்துடன் அந்த பணிப்பெண்ணை நோக்கினேன், அவர் இப்போதும் சிரித்துக்கொண்டே அதே செய்கையை செய்து விட்டு நகர்ந்தார்.

எனது அருகில் அமர்ந்திருந்த அப்புகுட்டியார் நடந்ததை எல்லாம் கவனித்துவிட்டார் என்பது 'அசிங்கபட்டான் ஆட்டோக்காரன்' என்கிற ரீதியிலான அவரது பார்வையிலையே விளங்கியது. நம் அப்புக்குட்டி ஒருவரை நக்கலடித்து நாறடிப்பதில் படு கில்லாடி, யாருக்கும் சளைத்தவரில்லை.  "கண்டவுடன் கன்னிகளை வீழ்த்தும் கட்டழகு காமரூப சுந்தரனா என்ன? நாம் தான் தினமும் நம் திருமுகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கிறோமே...! இரண்டு செகண்டுக்கு மேல நமக்கே ஒரு மாதிரி தானே இருக்கு..!" என்று படு நக்கலான கமெண்டுடன் ஒரு அஷ்டகோணல் சிரிப்பையும் வீசினார் அப்புக்குட்டி சிரத்தையாக.  நானும், இருக்கட்டும் அரிசிமூட்டை...., எனக்கு ஒரு சமயம் கிடைக்காமலா போய்விடும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன். 

ஒவ்வொவொரு மேஜைககும் தனித்தனி பிரத்யேக பணிப்பெண்கள். எங்கள் மேஜைக்கு எனது கை அவசரப்பட்டு அடித்த அதே பணிபெண் தான்.  சோஜு பாட்டில்களையும், இறால்களையும் ப்ளேட்டில் எடுத்து வந்து மேஜையில் வைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு தடவை அவர் அருகில் வரும்போதெல்லாம் அப்புக்குட்டி என்னை பார்த்து கண்ணடித்து வெறுப்பேற்றி கொண்டே இருந்தார். பார்ட்டி ஆரம்பமானது. முதலில் துறைத்தலைவர் எழுந்து புதிதாக பணியில் சேர்ந்தவர்களை வரவேற்று பேசிவிட்டு, சோஜு பாட்டிலை திறந்து நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தார். என்னருகில் இருந்த அரிசிமூட்டை "அவர் உன்னை நோக்கித்தான் வருகிறார், கொரிய பழக்கத்தின் படி, நீ எழுந்து நின்று அந்த கோப்பையில் அவர் ஊற்றும் சோஜுவை வாங்கி அவர் முன்பே முழுக்க பருக வேண்டும், மறுத்துவிடாதே! அனைவரும் தவறாக எடுத்துக் கொள்வார்கள்", என்று பெரிய குண்டை தூக்கி போட்டது.  "நான் மதுவை தொட்டது கூட இல்லை என்று ஏற்கனவே உன்னிடம் கூறினேன் அல்லவா..." என்று அவருக்கு பதில் அளிக்கும் முன்பே துறைத்தலைவர் பெருத்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் என்னை அடைந்தே விட்டார்.

நான் எழுந்து நின்றேன் ஆனால் வெறுங்கையுடன். என்னிலையை அவரிடம் விளக்கினேன். அவர், "அப்படியா, மது அருந்தும் பழக்கமில்லாதவரா நீங்கள்? என்னை மன்னியுங்கள், வேறு என்ன சாப்பிடுவீர்கள்? " என்று என்னை கேட்டார். நான் ஒரு கோக் என்று கூறினேன். "இந்தியர்கள் பெரும்பாலும் மாமிசமும் உண்பதில்லை என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். நீங்கள் எப்படி?", என்று நான் மறந்து போய் இருந்த வாத்து மாமிசத்தை அவரே நல்ல வேலையாக ஞாபகப்படுத்தினார். ஆமாம்..ஆமாம்... நான் சிக்கனை தவிர வேறு புலால் உணவை உண்டரியாதவன் என்று எடுத்துரைதேன். "இந்த ரெஸ்டாரெண்டில் அது கிடைக்க வாய்ப்பில்லை, சரி நான் ஏற்பாடு செய்கிறேன்", என்று நகர முயன்றவரை, நமது அப்புக்குட்டியார், மதுகோப்பையும், கையுமாய் வழி மறித்தார். அட அசிங்கம் புடிச்ச அரிசிமூட்டை...!  மதுப்பழக்கத்தை கை விட்டு விட்டதாக கூறிவிட்டு இப்படி  கண்டு கொள்ளாமல் போறவரை துரத்தி போய் தண்ணி வரம் கேட்குதே....., இதை எந்த வகையில் சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டேன்.

தலைவர் நிரப்பிய கோப்பையை, நாம் நம் கோவிலில் தீர்த்தம் வாங்கும் போது வலது கை முட்டியை இடது கையினால் பிடித்து பவ்யமாய் வாங்குவோமே அதே மாதிரி வாங்கி, அப்படியே அவர் முன்பே ஒரே மடக்கில் உள்தள்ளினார் அப்புக்குட்டி.  தள்ளிவிட்டு ஏதோ போர்முனைக்கு சென்று திரும்பிய வீரனைப் போல் ஒரு பெருமித பார்வையையும், பதினைந்து சென்டிமீட்டருக்கு சற்றும் குறையாத இளிப்பையும் என்னை நோக்கி வீசினார்.  பின் அதே கோப்பையை துறைத்தலைவர் கையில் கொடுத்து, அப்புக்குட்டி ஊற்ற,  தலைவர் அதே மாதிரி ஒரே மடக்கில் சரக்கை உள் தள்ளினார்.  இருவரும் ஏதோ உலகில் யாருமே செய்ய முடியாத அதிசய அற்புதத்தை நிகழ்த்தியதைப் போல் ஒரு அட்டகாச புன்னகையை அனைவருக்கும் செலுத்த, எனக்கா... கொட்ட கொட்ட விழித்திருந்து தாடி தெய்வமான "வீராசாமியின்" பேட்டியை டி.வி.யில் பார்ப்பது போல் டரியலாய் இருந்தது.


மறுபடியும் மூன்று முறை தனது கோப்பையை துறை தலைவர் மூலம் நிரப்பி, பின் தன் பெரிய பிரம்மாண்ட கீழ்தேக்க தொட்டியில் நீர் இறக்கம் செய்துவிட்டு, விரிய விரிய சிரித்துக் கொண்டே காண்டாமிருக ஏப்பத்துடன் வந்து அருகில் அமர்ந்தார். நான் ஒன்றுமே சொல்லவில்லை அவரே தொடங்கினார். "கொரிய கலாச்சாரப்படி வயது மூத்தவர்கள் நம் கோப்பையில் மதுவை ஊற்றினால் அதை 'பாட்டம்ஸ் அப்' செய்து குடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவர்கள் பெரிதும் உளம் மகிழ்வர்" என்று லெக்சர் வேறு எடுத்தது அரிசிமூட்டை.  மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாக அவர் சொன்னதைப்பற்றி கேட்டதற்கு, "ஆமாம் ரெண்டு நாளாக தொடவே இல்லை" என்று கண்ணை சிமிட்டி மறுபடியும் அஷ்ட கோணலாய் இளித்தார். பின் அருகில் மஞ்சளும், சிவப்பும் என்று பல வண்ணங்களில் இருந்த பெரிய பெரிய இறால்களை அப்படியே அள்ளி, பானையில் புளியை திணிப்பது போல வாயில் திணித்தார்.  பச்சை வெண்டைக்காயை கடிக்கும் ஓசை எழவே நான் விவரம் கேட்கும் தொனியில் புருவத்தை உயர்த்தி கேள்விக்குறியை கண்களில் வைத்தேன். "இது செமி குக்ட் பிரான், கிட்டத்தட்ட பச்சை இறால் தான்",  என்று சராமாரியாக குண்டு மழை பொழிந்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒவ்வொவொரு மேசையாக சென்று வாங்கி குடிப்பதும், பின் ஊற்றிக்கொடுப்பதுவுமாகவே இருந்தார். தூரத்தில் என் சக பெண் தோழியர்கள் ஏற்கனவே வெளிறி இருக்கும் தங்கள் நிறத்தை குடித்து குடித்து சிவப்பேற்றி கொண்டிருந்தார்கள். 

எனக்காக வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொண்டு வரப்பட கோக்கும், சிக்கனும் பணிப்பெண்ணால் எனக்கு பரிமாறப்பட்டது. உண்ண எத்தனிக்கும் போது 'மிஸ்டர் மூன்' வந்து என்னருகில் அமர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.  பார்ப்பதற்கு கம்பி மத்தாப்புக்கு சட்டை, பேன்ட் அணிவித்தது போல் இருப்பார். ரொம்ப நல்ல மனிதர். கொரியர்கள் இந்தியர்களை பற்றி கூறும் முதல் இரண்டு நல்ல விஷயங்கள் மகாத்மா காந்தியும், இந்தியர்களின் கணித திறமையும் ஆகும். அடுத்து அவர்கள் கேட்பதெல்லாமே, இந்நூற்றாண்டிலும் அழியாத அவமானங்களான, சாதிக் கொடுமை, ஏழ்மை, லஞ்சம், மதக்கலவரங்கள், இந்திய-பாகிஸ்தான் ரணம், விளையாட்டு துறையில் மக்கள் தொகைகேற்ற வளர்ச்சியின்மை என்று நீண்டு கொண்டே போகும். இவரும் அப்படியே.

மிஸ்டர் மூன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். "நீங்கள் ஒரு கொரிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?" என்று திடீரென்று சற்றும் எதிப்பாராத ஒரு வினாவை வைத்தார். "அவ்வாறு நீங்கள் விரும்பினால் உங்கள் தாய், தந்தை அதை ஏற்றுக் கொள்வார்களா?", என்றும் கேட்டார்.  இரு வேறு பட்ட மதம், மொழி, இனம், தேசம், கலாச்சார திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவத்தை என்றோ இந்தியா ஓரளவிற்கு அடைந்து விட்டது என்று எடுத்துரைத்தேன். மேற்கூறிய (சாதி, மதம்) பல விஷயங்களின் தாக்கத்தின் வீரியம் வலுவாக, அவர்களின் பள்ளி புத்தகங்களில் அச்சிடப்பட்டு இருப்பதால், இந்திய துணைக்கண்டத்து மாற்றங்கள் இன்னும் பெரும்பான்மையான கொரியர்களுக்கு எட்டவில்லை என்று தான் கூற வேண்டும்.  அதனால் அவரின் கேள்வியின் நோக்கம் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை. இது இந்தியாவில் இப்பொழுது ஒரு பெரிய விஷயமில்லை என்று அவருக்கு ஒரு சிறிய விளக்கம் அளித்தேன். இருப்பினும் நான், சடைபின்னி,  பூச்சூடி, சேலையணியும் என் தேசத்து பெண்ணையே திருமணம் செய்வேன் என்ற கூறியதும், ஏன் கொரியப் பெண்கள் அழகில்லையா என்று வினவினார். நான் அப்படி சொல்லவில்லை, இந்த மணாளனின் மங்கை எனது தேசத்தில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏதோ வரிசையில் இந்தியாவில் நமக்கென்று காத்திருப்பதைப் போல், பீற்று  பீற்றென்று பீற்றினேன். நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்.

பசி வயிற்றை பிராண்ட, ஒரு சிக்கன் பீசை எடுத்து வாயில் வைத்தேன். பேரதிர்ச்சி...! சர்க்கரை பொங்கலை போல் இனித்தது சிக்கன். " டேய்...!,  இது எங்கேயாவது அடுக்குமா..?, ஜின்ஜெர், சில்லி, 65'ன்னு  கண், மூக்கு, வாயெல்லாம் திரவப் பிரவாகத்தை பீறி டச் செய்து,  ஒரே கார சாரமா இருக்க வேண்டிய ஒரு சமாச்சாரத்த, நாட்டு சக்கரைய அள்ளி கொட்டி யாருடா இப்படியெல்லாம் புரட்சி பண்றது. வயித்துல ஈரத்துணிய கட்ட வச்சுட்டீங்கலேடா...!"  என்று நொந்து அந்த சிக்கனை கண் மற்றும் கைக்கு எட்டாத திசைக்கு நகர்த்தி வைத்து விட்டு கோக்கை மட்டும் குடித்து கொண்டிருந்தேன். தூரத்தில் அரிசிமூட்டை, முழுக்க நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நின்ற இடத்திலயே எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து கொண்டிருந்தது. பலரும் அவரவர் இருக்கைகளை விட்டெழுந்து என்னிருக்கை வந்து சில பல வார்த்தை விசாரிப்புகளை முடித்து சென்று தங்கள் தலையாய சோஜு கடமையில் மூழ்கினார்கள். 

அருகிலிருந்த 'மிஸ்டர் மூன்' இதை ட்ரை பண்ணுங்களேன் என்று வாத்துக்கறியை காட்டினார். "இப்படியெல்லாம் வாயில்லா பூச்சியான வயிற்றுக்கு எதிர்ப்பாராத ஷாக்கெல்லாம் தரக்கூடாது மிஸ்டர் மூன்",  என்று அழாத குறையாக நான் கூறினேன்.  இருந்தாலும், பசி மிகவும் வயிற்றை கிள்ளவே, நானும் முயற்சி செய்ய எத்தனித்தேன். என் ஆசிரியை தாய் கையில் பிரம்புடன் மனக்கண்ணில் தோன்ற, போட்டு விட்டேன் கீழே.  மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா என்று  இந்தியா முழுக்க பணி நிமித்தமாக நான் சுற்றிய காலத்தில் அவர்,  அசைவம், மாமிசமென்றால்,  வீட்டில் வந்து தான் செய்வதைத்தான் உண்ண வேண்டும் என்றும்,  வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். நானும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று அவர் கையால் தான் சாப்பிடுவேன்.  

தாய்க்கு கொடுத்த சபதத்தை காக்க உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்ற பேருண்மையை உணர்ந்து என் வாழ்வின் முதல் வாத்துக்கறியை ருசித்தேன். நிஜமாகவே அருமையாய் இருந்தது. மட்டனுக்கும், சிக்கனுக்கும் இடையேயான பதமும், மிருதுவும், ருசியும் கொண்டது வாத்து மாமிசம்.  ஓரளவுக்கு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, என்னுடைய பிளாட்டுக்கு கிளம்பினேன். என்னை தவிர அனைவரும் ஊற்றவோ...?, உட்கொள்ளவோ...? என்று சோஜுவில் நீந்தி கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் இவர்கள், 'செகண்ட் பார்ட்டி'க்கு இன்னொரு ரெஸ்டாரெண்டிற்கும், 'தேர்ட் பார்ட்டி'க்கு வேறொரு ரெஸ்டாரெண்டிற்கும் சென்று குடித்தும், குடிக்க கொடுத்தும் வீடு செல்ல விடிந்து விடும்.

அங்கே அப்பு குட்டி, அலங்கோலமாய், தொப்புள் தெரிய, பிளந்த வாயில் இறாலுடன், கண்கள் சொருகி, உத்தரத்தை நோக்கிய முகத்துடன், முக்கி முனகிக் கொண்டு, பார்ப்பதற்கு மல்லாக்கப் போடப்பட்ட ராட்சச பிள்ளைத்தாச்சி தவளை போல் சரிந்து கிடந்தார்.  மிக ஹைலைட்டான விஷயம் யாரோ சக தோழி அவர் கழுத்தில் தொங்க விட்டுச் சென்றிருந்த ஹேண்ட்பேக் தான். இப்படி ஒரு அசாதாரண நிலையில் நம் அப்புக்குட்டியை அன்று கண்டதை இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். மறு நாள் விசாரித்ததில், டாய்லெட் போன நம் அப்புக்குட்டியார் அங்கயே உட்கார்ந்த நிலையிலேயே நித்திரையில் ஆழ்ந்துவிட, பின் பொல பொலவென்று புலர்ந்த சனிக்கிழமை காலை, அவரை அவர் பிளாட்டிற்கு கொண்டு வந்து கிடத்தி விட்டு போனதாக நண்பர்கள் சொல்லி சொல்லி எல்லா பக்கத்தாலேயும் சிரியோ சிரியென்று சிரித்து விட்டார்கள்...!

(படம் தந்த கூகுள்' க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

புதன், 5 ஜனவரி, 2011

பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...!
சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-1)

லூசு பார்ட்டி, கேனப் பார்ட்டி, கிறுக்கு பார்ட்டி, நக்கல் பார்ட்டி, நமைச்சல்  பார்ட்டி என்று மனிதப் பார்ட்டிகளை பற்றிய பதிவு இல்லைங்க இது.


இந்தப் பதிவு என்னுடைய அலுவலக பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றியது.  நானும் ஒரு கடமை தவறாத, கண்ணியமிக்க, கணினியில் இருந்து கணப்பொழுதும் கண்ணசையா பொறிஞர் (என்னுடைய சர்டிபிகேட்'ல அப்படிதாங்க போட்டிருக்கு) ஆன பிறகு எனது விருப்பம், ஆசை, எண்ணம் இது எதற்கும் இடமளிக்காமல், எனது நண்பர்களும், உயரதிகாரிகளும் (இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..!)  கருணா காரூண்யமின்றி  தர, தரவென்று இழுத்துச் சென்று கும்பலோடு கும்பலாக கும்மி அடிக்க வைத்து, சிரிப்பா சிரிச்சிப் போன மிகச் சில பார்ட்டிகளை பற்றியது தாங்க இந்தப் பதிவு.

சியோல் வந்து பணியைத் தொடங்கிய ஆரம்பத்தில், துறைத்தலைவர் அளித்த "New Joiners" வரவேற்பு பார்ட்டி தான் என்னுடைய முதல் பார்ட்டி அனுபவம் கொரியாவில். இங்கே மற்ற நிறுவனங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் பணி புரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் சராசரியாக வாரம் இரு பார்ட்டி கொண்டாட்டங்களை சந்தித்தே தீர வேண்டியது இன்றியமையாத, தவிர்க்க இயலாத விஷயமாகும். சரி, இப்போது பார்ட்டிக்கு போவோம்.

மாலை ஆறு மணிக்கு பார்ட்டி துவங்கும் என்று முன்னரே எனக்கு தெரிவித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் ஒரு வித பயத்தில் அதற்கான முஸ்தீபுகளில் ஆர்வமின்றி கிடா வெட்டுக்கு வந்த மந்திரித்து விடப்பட்ட ஆடு மாதிரி அப்படியே பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.  ஏனென்றால் பல வருடங்களாக இந்நாட்டிலேயே பணியாற்றி வரும் சக இந்திய அண்ணன்மார்கள் "ராஜா பாத்து,  இவனுங்க ஆச்டோபசு, மீனு, நண்டு, எறா'ன்னு  எல்லாத்தையுமே உயிரோட சாப்பிடுவானுகப்பா, அது மட்டுமா மாடு, பன்னி, வாத்து, நாய்'ன்னு ஒன்ன விட மாட்டனுங்க"  என்று தங்களின் கொரிய பார்ட்டி அனுபவங்களை அளவுக்கு மீறி என் உட்செலுத்தி விட்டிருந்தார்கள்.

மிஸ்டர் கிருஷ் , மிஸ்டர் கிருஷ்.. என்று இரண்டு முறை சத்தம் வர வேண்டா வெறுப்பாக தலையை திருப்பி சத்தம் வந்த திசையை நோக்கினேன். என்னையும் மீறி என் கண்கள் அகல விரிய; கால்கள் தரையில் உறுதியாக பதிய முயன்றன. இருக்கையை விட்டு எழுந்து நின்றே விட்டேன். ஏனெனில், என் பின்னே என்னுடைய துறைத் தலைவரும், அவர் பின்னே மொத்த டீமும் நின்று கொண்டிருந்தார்கள் என்னை பார்த்து புன்னகைத்தவாறு. சிக்கிச்சிடா சிறுத்த..! இன்னைக்குன்னு பாத்து பலத்த சூறாவளியுடன் பாசமழை கொட்டுதே என்று நினைத்தவாறே புறப்பட்டேன்.

எங்கள் குழுவில் இந்தியாவிலருந்து நானும், பிலிப்பின்ஸிலிருந்து (அதாங்க தமிழ்'ல 'பிலிப்பைன்ஸ்') ரயான் என்ற நண்பரும் தான் எக்ஸ்பாட் பொறிஞர்கள்.  நான் நம் பழக்க தோஷத்தில் 'பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ்' என்று கூவிக் கொண்டே இருந்ததை பொறுக்க மாட்டாமல் ரயான்,  "சதீஷ், இட்ஸ் பிலிப்பின்ஸ், நாட் பிலிப்பைன்ஸ்" என்று மகுடி வாசித்து திருத்தினார். நானும் என்னை திருத்திக் கொண்டேன்.

ஆனால் தம் பிடிச்சு எத்தனை தடவை கொரிய நண்பர்கள் காதில் நான் 'தவில்' வாசிச்சாலும் அவர்கள் இந்தியாவை 'இந்தோ' என்று விளிப்பதை என்னால் மாற்றவே முடியவில்லை. கொரியர்களின் இந்த பழக்கமும் நம் இமயமலை மகான் உரைத்த மகோன்னத மந்திரச் சொற்களில் (அதாங்க.. "இந்த தும்மலு, விக்கலு, இருமலு இதெல்லாம் எப்போ வரும், எப்படி வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. வந்தாலும் நிறுத்த முடியாது, வரலன்னாலும் ஏன்னு கேக்க முடியாது") உள்ள தும்மல், விக்கல் இத்யாதிகளும் ஒரே வகையறாக்களை சார்ந்ததாக இருக்குமோ என்பது எனது ஐயப்பாடு.

நண்பர் ரயான் இருக்கிறாரே, அவர் பார்ப்பதற்கு அப்பொழுது தான் அமுக்கி பிடித்த 'அரிசிக் கொழுக்கட்டை' மாதிரியே ப்ரெஷாக இருப்பார். சைஸ்'ல இல்லைங்க, ஷேப்'ல. அவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் "அரிசிமூட்ட அப்புக்குட்டி".  ஏனென்றால் அவர் முதுகு ஐம்பது கிலோ அரிசி மூட்டை மாதிரியே, பெரிய சமவெளி போன்று இருக்கும்.  இந்த பெயர் காரணத்தை ஒரு தடவை அவரிடம் கூறிய போது, அவர் "நான் ரெகுலரா ஜிம் போறதுனால தான் இப்படி பாடிய மெயின்டைன் பண்ண முடியுது" என்றார் படு சீரியசாக. நானும், அவரிடம் "எங்கள் ஊரிலும் உங்களை மாதிரி உசிலைமணி, குண்டு கல்யாணம், சின்னவனே, பெரியவனே" என்று நிறைய பாடி பில்டர்ஸ் இருக்கிறார்கள் என்று அவரை விட முகத்தை மட்டும் சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னேன்.  வழி நெடுக நம் 'அப்புக்குட்டி' நன்றாக, முனை தீட்டப்பட்டு, அதிகூரான தனது நாவன்மையால் என்னை வெட்டி வெட்டி சாய்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். இவர் ஏன் என் கழுத்தின் மேல் இந்த குத்தாட்டம் போடுகிறார் என்று எனக்கு விளங்கவே இல்லை.

நான் ஒரு 'டீடோடலர்' (நெசமாத்தான் நம்புங்க) என்பதையும், இந்திய கோழிகளையும், மீன்களையும் என் தாய் கைச் சமையலில் ரசித்து ருசித்ததை தவிர வேறு புலால் உணவுகளை இம்மியளவும் தீண்டாத 'தாவிரப் பிராணி' என்பதையும் என்னிடமிருந்து அறிந்து கொண்டார்.  தானும் அப்படிதான் என்று அழுத்தம் திருத்தமாக எனக்கு ஒரு செய்தியும் கொடுத்தார், அப்புக்குட்டி. மேலும், தான் கொரிய உணவுகளில் முற்றிலும் விருப்பமில்லாதவன் என்றும், மது பழக்கத்தையும் கைவிட்டு விட்டதாகவும் என்னிடம் நான் கேட்காமலே ஒரு தன்னிலை விளக்கத்தையும் தரத் தவறவில்லை பல வருடங்களாக இந்நாட்டில் பணிபுரியும் அவர்.

 "இந்தியா பிரிட்டனுடைய காலனி நாடாக இருந்தது இல்லையா, ஆனால், பிலிப்பின்ஸ் அமெரிக்காவின் காலனி நாடாக இருந்தது, அதனால் தான் எங்கள் பெயர்கள், வாழ்க்கைமுறை எல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கிறது", அவர் கொத்திய கொடூர கொத்துகளில் இதுவும் ஒன்று. அவருக்கு தன் நாடு அடிமை படுத்தப்பட்டது தற்போதுள்ள ஒரு கனவு தேசத்தினால் என்பதில் அவ்வளவு பெருமை. நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, செருப்படியில் என்ன நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி.



ரெஸ்டாரண்டை அடைந்தாகி விட்டது. ரெஸ்ட் ஹட் போன்றதொரு வசீகர தோற்றப் பொலிவுடனான அலங்காரம் என்னை பெரிதும் கவர்ந்தது. என்ன 'மெனு' என்று நம் அப்புக்குட்டியிடம் கேட்டேன். 'சோஜு', 'ஓடிகோகி' என்றார் கொரிய மொழியில், நான் என்னவோ அம்மொழியில் முனைவர் பட்டம் பெற்றவன் என்ற நினைவில். பின் சுதாரித்தவராய், 'கொரியன் ட்ரடிஷனல் பீர் அண்ட் டக் மீட்" என்று மொழி பெயர்த்தார். கொரிய மொழியில் 'கோகி' என்றால் இறைச்சி/கறி என்று பொருள் படும். இந்த 'கோகி' முன் நாம் எந்த பிராணியை சேர்க்கிறோமா அந்த பிராணியின் இறைச்சி என்று பொருள்படும்.  நம் ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று கூறுவதைப் போல தான்.   ஓடி (வாத்து),  புல் (பன்றி),  சோ (மாடு),  தாக் (கோழி), கே (நாய்)  என்ற வார்த்தைகளுக்கு பின் கோகி சேர்ந்து வரும் அவ்வளவு தான்.

சரி, பார்ட்டிக்கு வருவோம். நம் அரிசி மூட்டையின் மொழிப்பெயர்ப்பை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  "என்னது வாத்துக்கறியும், பீருமா..? அட கருமாந்திரம் புடிச்சவனுகளா...! இந்த சைவ ஐட்டமான சிக்கன்'லாம் கிடையாதா..என்று கேட்டதற்கு,  "இந்த ரெஸ்டாரன்ட்'ல டக், பிரான் தான் ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறி மேலும் என் பிராணனை வாங்கியது அரிசிமூட்டை.  இந்த சோஜு இருக்கிறதே, இது கொரியர்களின் பாரம்பரிய மது பானம், 20-45% ஆல்கஹல் செறிந்த பானம்.

நான் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதே எங்கள் இருக்கையின் முன் இருக்கும் மேசையில் அகல, கரிய தோசைக்கல் போன்ற ஒன்றில், கொரிய பணிப்பெண் ஒருவர் பெரிய பாத்திரத்தில் தான் கொண்டு வந்த அந்த பச்சை வாத்து மாமிசத்தை அப்படியே குவியலாக கொட்டி விட்டு சென்றார். என்னுடைய இரு விழிகளும் வெளியே தெறித்து வந்து விழுந்து விட்டதை போன்றதொரு உணர்வு எனக்கு. அப்புறம் சில இலை  தழை குவியல்களை கொண்டு வந்து அதன் மேலேயே கொட்டிவிட்டு, என் தொடைக்கு அருகில் தனது கையை கொண்டு வர நான் சடாரென்று என்னையுமறியாமல் அவரது கையை வெடுக்கென தட்டி விட்டேன். கொஞ்சம் பலமாகத்தான். அதற்கப்புறம் தான் மிகப்பெரிய கூத்தெல்லாம் நடந்தது...! ஏற்கனவே பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், அந்த மஹா கூத்தையெல்லாம் அடுத்த பதிவில் பகிர்கிறேன்.


(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!! )
--விளையாடும் வெண்ணிலா....

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வாராய் நீ வாராய்...!












ருசி மறவா நாவினாய்...
துடி துறவா இதயமாய்...

இமை விலகா துயில்களாய்...
அணை விலகா காதலியாய்...

மருந்தில்லா மணித்துளிகளாய்...
வருந்திலா வருடல்களாய்...

கரைகளறுக்கும் வெள்ளமாய்...
கங்குகளுருக்கும் எண்ணமாய்...

துயர் துரத்தும் இன்பமாய்...
தமிழ் குன்றா நினைவுமாய்...

நான் என் கதவு திறக்க காத்திருக்கும் பதுமையே...!
வாராய் நீ வாராய்...!

கறைகள் களைந்து... 
களிக்கச்செய்து போவாய் என் கணங்களை...!
வாராய் நீ வாராய்...!

வருக வருக 2011...!
நன்றி நன்றி 2010...!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடனும் பாசத்துடனும்...
--விளையாடும் வெண்ணிலா....

வியாழன், 30 டிசம்பர், 2010

கணங்களாய்.....

இது எனது பதிவின் முதல் கவிதை முயற்சி..! 

இந்தப்பதிவு அனைவரையும் போல நான் எனது எண்ணங்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளை தாங்கும் ஒரு பாத்திரமாகவே கருதி தொடங்கினேன். கவிதை முயற்சி பெரும்பாலானவர்களை போல எனது பள்ளி பருவத்திலிருந்தே தொடங்கியது தான். காலவோட்டத்தில், நானும், எனது முக்கியத்துவங்களும்  சூழ்நிலைகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு நகர தொடங்கிய பின்னர், அது போன இடம் கூட தெரியவில்லை. சில ஆண்டுகள் கழித்து முயற்சித்த போது என்னால் அந்த பழைய பள்ளிக்கால அனுபவத்தை தொட கூட முடிய வில்லை என்றொரு உணர்வு. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். 

கவிதையை ரசிப்பதென்பது ஒரு தனி அனுபவமே...!  ஒரே தளத்தில், ஒரே திசையில், ஒரே வேகத்தில் பயணம் செய்யும் போது மட்டும் தான் சிறிதளவேனும் கவிதைகள் நமக்கு புரிதலை கொடுக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. புரிதல் என்பதை விட உணர்தல் என்பது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். அந்த ஒரே எண்ணத்தின் வடிவாய் இப்போது மறுபடியும் ஒரு முயற்சி...!

இந்த முயற்சிக்கு தூண்டுதல் நானே..! ஆனால் இது இவ்வளவு விரைவில் வெளியிட மறைமுக தூண்டுதல் எனக்கிருக்கும் மிக, மிக சிறிய, 'துக்ளியூண்டு' பதிவுலக நண்பர்களுள்  ஒருவரான 'ஆனந்தி'. அவருக்கு நன்றி பகர்தலுடன் உங்களை அழைத்துச் செல்கிறேன் கீழே கவிதை வரிகளின் அருகே...

எழுதிவிட்டேன்.. அவஸ்த்தையா இல்லை அனுபவமா என்பதை உங்கள் மனதின் எதிரொலியாய் வந்து விழும் விரல் வடிக்கும் எழுத்துக்களில் கண்டு கொள்வேன்...


கணங்களாய்....!

எடுக்கின்றன கோடி பிறவிகள்...
என் கணங்கள் எனக்காகவே...!
துளிர்க்கின்ற எண்ணங்களை 
பரிவுடன் தாங்கி...!

எண்ணத்தின் அரிதாரங்கள் தான்...
எத்தனை...எத்தனை...!
புதைந்து அழுகி, பின் முளைவுற்று,
வெடித்து விலகி, பின் கருவுற்று,
மறித்து கருகி, பின் உருவுற்று,
துறந்து நீங்கி, பின் உயிருற்று,
வெறுத்து வதங்கி, பின் மலர்வுற்று,
வலிந்து குழம்பி, பின் தெளிவுற்று,
களைத்து வாடி, பின் செறிவுற்று,
கரைந்து உருகி, பின் மெருகுற்று,
ஓய்ந்து அடங்கி, பின் கிளர்வுற்று,
தனித்து ஒதுங்கி, பின் களமுற்று,
எண்ணத்தின் அவதாரங்கள் தான்...
எத்தனை..எத்தனை...!

துளிர்க்கின்றன எண்ணங்கள்...
கணங்கள் ஊமைகளாகுமோ சொல்லுங்கள்...! 

எங்கே தொலைந்து போனாய்..
எனக் கேட்கும் சமூகமே...!
இதோ கேட்டுச்செல்,
என் சொற்களை..!
எங்கும் தொலைந்து போய் விடவில்லை...!
எதிலும் உறைந்து போய் விடவுமில்லை...!

மறைந்து உதிக்கிறேன்..
நான்...
ஒவ்வொரு துளிர்ப்பிலும்...!
காலத்தின் துடிப்பாகிய...
கணங்களாய்...!



--விளையாடும் வெண்ணிலா....

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இன்ட்லி (ஆங்கிலம்) முகப்பில் எனது பதிவு...!!!



எனது Wax Museum in Seoul- "Really Amazing..!" என்ற ஆங்கிலப் பதிவு 'இன்ட்லி பதிவர்களால்' மிகப் பிரபலமானதாக வாக்கிடப்பட்டு, இன்ட்லி முகப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. 


அனைத்து 'இன்ட்லி பதிவர்களுக்கும்' மற்றும் 'இன்ட்லிக்கும்'  எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!


இன்ட்லி முகப்பு URL
http://indli.com/story/32876


என் ப்ளாக் முகவரி..
http://microscopicalview.blogspot.com/





--விளையாடும் வெண்ணிலா....